முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது


Image result for stalin dmk
தலைவர் பதவி ஏற்ற ஸ்டாலினின் உரையில் நான் கவனித்த ஒன்று தடம் பிறழ்ந்து எதையும் கூறி விடக் கூடாதே எனும் அந்த மெல்லிய பதற்றம். இது தேவையற்ற ஒன்று. மக்களின் உணர்வு ஓட்டத்தைப் புரிந்து அதற்கு ஏற்ப பேசுவதே இன்றைய அரசியலின் தேவை. இன்றைய அரசியல் ஒரு பகற்கனவு அரசியல்.

மோடி இதற்கு நல்ல உதாரணம். அவர் ஆட்சிக்கு வந்த பின் எவ்வளவோ விசயங்களை சொல்லி உள்ளார். அவற்றுக்கு நடைமுறையில் எந்த மதிப்பும் இல்லை (கறுப்புப் பணத்தை ஒழித்தேன் என்பது போல). ஆனால் மக்கள் மத்தியில் அவரது மதிப்பு இதனால் உயர்ந்துள்ளது. இன்றைய வாக்காளர்கள் ஒரு பக்கம் உங்கள் பேச்சின் தர்க்க நியாயங்களை, முரண்களை குறிப்பிட்டு சர்ச்சை செய்வார்கள். ஆனால் அவர்கள் ஒரு சிறு தரப்பே. பெரும் தரப்பு இந்த வாக்கியங்களின் உள்முரணை பொருட்படுத்தாது ஏற்கிறது; உணர்வுவயப்பட்டு பாராட்டுகிறது. என்னதான் ஜி.எஸ்.டி வரி, டிமானிடைசேஷன், மதவாதம் போன்ற பிரச்சனைகளால் பாஜக அரசு கடும் விமர்சனத்தை எதிர்கொண்டாலும் மோடியின் மதிப்பு குறைந்ததாய் தெரியவில்லை. இதற்குக் காரணம் அவர் ஒரு கனவு வியாபாரி என்பது. அவர் எந்த ஆதாரங்களையும் கொடுக்காமலே அனைத்தையும் சாதித்ததாய் வண்ண வண்ண பலூனாய் ஊதுவார். மக்களும் உற்சாகமாய் அந்த பலூன்களை வாங்கிக் கொண்டு விளையாடி மகிழ்வார்கள். பறக்க விடுவார்கள்.
இன்றைய அரசியலில் பேச்சும் உண்மையும் ஒன்றாய் இருக்க அவசியம் இல்லை.
கலைஞரின் பேச்சு இதற்கு நேர்மாறானது. அவர் ஆதாரத்துடன் பெரும்பாலும் முரண்பாடின்றித் தான் பேசுவார். அந்த பிசிறற்ற உரைகளின் காலம் முடிந்து விட்டது. இன்றைய வாக்காளர்களுக்கு உண்மையை விட கனவுகளே முக்கியம்.
நான் திரு. ஸ்டாலினிடம் சொல்ல விரும்புவது இது:
நீங்கள் இன்னும் துணிச்சலாய் ஆணித்தரமாய் பேசுங்கள். கற்பனையாய் பேசுங்கள். நாடகீயமாய் பேசுங்கள். நீங்கள் ஒன்றை சொல்லியதுமே அதை நடத்தி விட்டதாய் ஒரு பாவனையை அதில் கொண்டு வாருங்கள். உதாரணமாய், நீங்கள் உங்கள் தலைமையின் கீழ் குடும்ப அரசியல் இனிமேல் இராது என அந்த தலைமையேற்கும் உரையில் குறிப்பிட்டிருக்கலாம். “நான் நீண்ட கால அரசியல் செயல்பாட்டின் மூலமே கட்சியின் தலைமையை அடைந்தேன். தலைவரின் மகனாக அல்ல. என்னைப் போன்று உழைப்பவர்கள் மட்டுமே இனி கட்சியில் பொறுப்புகளை அடைய முடியும். வாரிசுகள் என்பதாலே கட்சியில் யாருக்கும் தனி இடம் இருக்காது.” என சொல்லுங்கள்.
1)   இது உங்கள் பிம்பத்தை உயர்த்த உதவும். பின்னர் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் உங்கள் மகனோ மனைவியோ கட்சியில் முன்னிலைப்பட்டாலும் பிரச்சனை இல்லை. மக்கள் இந்த முரண்பாட்டையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள். சொற்களே முக்கியம்.
2)   கட்சிக்குள் சகோதர யுத்தத்தை ஒழிக்க இந்த கோரலை நீங்கள் பயன்படுத்தலாம். “நான் என் சகோதரிக்கே கட்சியில் இடம் அளிக்கவில்லை” எனச் சொல்லி திமுகவில் குடும்ப அரசியலே இல்லை என நீங்கள் நிறுவலாம். சொல்லிக் கொண்டே கனிமொழி, அழகிரி, மாறன்களை ஒழித்துக் கட்டலாம். உங்கள் பெருமையையும் நிறுவலாம். இதில் உங்களுக்கு இரட்டிப்பு அனுகூலம்.
பேச்சு பேச்சு பேச்சு … இதுவே உங்களை உயர்த்தும் ஸ்டாலின். "செயல்" தலைவரின் காலம் முடிந்து விட்டது.
வாழ்த்துக்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...