இந்த புத்தகக் கண்காட்சியில் எனது ஏழு நூல்கள் வெளியாகின்றன.
கடந்த மூன்று வருடங்களாக நான் தினமணியில் (இளைஞர் மணி) எழுதி
வரும் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” தொடர் எளிய முறையில் புனைவின் வடிவில் ஆங்கிலச் சொற்கள்,
இச்சொற்களின் வேர்ச்சொல் கதைகள், இலக்கண விதிகள் ஆகியவற்றை விளக்கும் தொடர். இத்தொடரை
நான் தினமணியில் ஆரம்பித்த போது ஆறு மாதங்களே எழுதுவேன் என நினைத்தேன். ஒரு வயதான புரொபஸர்,
அவரது மிகை-ஆர்வ மாணவன் கணேஷ், புரொபஸரின் நாய் ஜூலி என மூன்று பாத்திரங்களுடன் தொடரை
ஆரம்பித்தேன். சுஜாதாவின் “மீண்டும் ஜீனோவின்” சாயலில் இதுவும் ஒரு பேசும் நாய். “நாயே
ஆங்கிலம் பேசலாம், அதுவொன்றும் பெரிய சாதனை அல்ல” என உணர்த்த நினைத்தே ஜூலியின் பாத்திரத்தை
உருவாக்கினேன். இவர்களைத் தொடர்ந்து அன்றாட வாழ்விலும் ஊடகங்களிலும் நான் எதிர்கொண்ட
மனிதர்கள், பிரச்சனைகள் ஆகியவற்றை இத்தொடரில் அறிமுகப்படுத்தி ஆங்கிலத்தைக் கற்பிக்கவும்
என் சமூகக் கருத்துக்களை பேசவும் பயன்படுத்திக் கொண்டேன்.
என் தொடருடன் தினமணியில்
வெளிவந்த பல தொடர்கள் நின்று விட்டன. ஆனால் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” நானே எதிர்பாராத
வகையில் இன்றும் தொடர்ந்து வருகிறது; பரவலான கவனம் பெற்று வந்துள்ளது. இதுவே இவ்வருட
இறுதியில் நான்கு பகுதிகளாய் புத்தகமாகிறது.
அடுத்து மீ டூ குறித்து நான் எழுதிய உரைநடை நூல் வருகிறது
– ”மீ டூ: சில விமர்சனங்கள்”. இரண்டே மாதங்களில் இந்த பிரச்சனையின் கவனிக்கப்படாத,
அதிகம் பேசப்படாத ஒரு பக்கம் குறித்து நான் துணிச்சலாக எழுதிய விரிவான கட்டுரைகளின்
தொகுப்பு இது.
இதை அடுத்து, கடந்த பத்தாண்டுகளில் நான் அவ்வப்போது மொழியாக்கிய
கவிதைகளின் ஒரு தொகுப்பு வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, லத்தீன் அமெரிக்கா, ஜப்பான்,
இந்தியா, ஜெர்மனி என பல தேசங்களை சேர்ந்த முக்கிய கவிஞர்களின் கவிதைகளை அவை பேசும்
சமகால பாடுபொருள் மற்றும் தொனியின் அடிப்படையில் தொகுத்திருக்கிறேன். இதன் தலைப்பு
“அன்புள்ள தெரிதா”. இத்தொகுப்பு என் எழுத்து வாழ்வில் முக்கியமான நூலாக இருக்கும்.
இறுதியாக “கிளை முறியும் ஓசை” எனும் தலைப்பில் மேற்கத்திய
ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு ஒன்று வருகிறது. என் முதல் புத்தகம் “இன்றிரவு நிலவின்
கீழ்” தொகுப்பின் தொடர்ச்சியாக இதைப் பார்க்கலாம். அதே ஸ்டைலில் கவிஞர்கள் பற்றின குறிப்பு,
புகைப்படம் என செறிவாக இந்நூல் வருகிறது. “இன்றிரவு
நிலவின் கீழ்” தொகுப்பைப் போன்றே இதுவும் கவனம் பெறும் என நம்புகிறேன்.
இந்த ஏழு நூல்களையும் உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது.
தொடர்ந்து என் எழுத்துக்கு ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கும்
நண்பர்களுக்கும் உயிர்மைப் பதிப்பகத்தாருக்கும் என் நன்றிகள்!

Comments