இம்மாத இறுதியில் வெளியாகப்
போகும் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” நூலின் நான்கு பகுதிகளைப் பற்றி பேராசிரியர் கணேஷ் பேச இருக்கிறார்.
கணேஷ் சார் எம்.ஸி.ஸியில் நான் முதுகலை ஆங்கிலம் படிக்கும் போது எனது பேராசிரியர்.
தற்போது அவர் அங்கு துறைத்தலைவர்.
எம்.ஸி.ஸியில் அவர் பேசும் போது பக்கத்து
வகுப்பு மாணவர்கள் எல்லாம் கூட்டமாய் வந்து மொய்ப்பார்கள். அவரது கணீர் குரல்
வளாகம் எங்கும் ஒலிக்கும். அபாரமான பேச்சாற்றல் கொண்ட அவரது வகுப்புகள் போவதே
தெரியாமல் நாங்கள் சொக்கிப் போய் அமர்ந்திருப்போம். 16 வருடங்களுக்குப்
பிறகு கணேஷ் சார் எனது “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” நூலுக்கு பேசுவார் என நான்
கனவிலும் நினைக்கவில்லை. அவரது குரலை, பிரமாதமான பேச்சை
நீண்ட காலத்துக்குப் பிறகு கேட்க இருக்கிறேன். உவகையும் பரபரப்பும் ஒரே நேரத்தில்
சூழ்கின்றன. நீங்களும் வாங்க. சந்திப்போம்!
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...


கருத்துகள்