முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்கள் பலாத்காரம் செய்தால்? (4)


1)   அவிட்டா ரோனெல்-ரெயிட்மேன் வழக்கு: ஓரு லெஸ்பியன் ஒரு ஆணை பலாத்காரம் செய்தால்
Image result for avital ronell metooImage result for avital ronell metoo


கல்வித் துறை கோட்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், போராளிகள் பலரையும் உலுக்கிப் போட்ட வழக்கு இது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அவிட்டா ரோனெல் ஒரு பெண் என்பது மட்டுமல்ல அவர்களை பதற வைத்தது, அவர் உலகம் முழுக்க ஆய்வாளர்களாலும் சிந்தனையாளர்களாலும் கொண்டாடப்படும் ஒரு கருத்தாளர் மற்றும் எழுத்தாளர். Loser Sons…, Fighting Theory…, Crack Wars, The Telephone Book போன்ற முக்கியமான நூல்களை இயற்றியவர். இவரது Stupidity எனும் நூலை தெரிதா பாராட்டி இருக்கிறார்; ஜூடித் பட்லர் இவராது சிந்தனைகளால் தான் தாக்கம் பெற்றதாய் குறிப்பிட்டுள்ளார். தெரிதா, ஸெஸெக் போன்றவர்களுடன் பணியாற்றிவர் ரோனெல். தற்போது நியுயார்க் பல்கலைக்கழகத்தில் ஜெர்மானிய இலக்கியம் மற்றும் ஒப்பீட்டு இலக்கியம் ஆகியவை கற்பிக்கிறார். ஐரோப்பிய தத்துவம், உளவியல், இலக்கிய கோட்பாடு, பெண்ணியம், அரசியல் தத்துவம் போன்ற பல துறைகளில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியவர்.


அவிட்டா ரோனெலின் மாணவரே நிம்ரோட் ரெயிட்மேன். ரோனெல் ரெயிட்மேனின் ஆய்வு நெறியாளர். மூன்று வருடங்களாய் அவர் தன்னை பாலுறவு கொள்ள வற்புறுத்தி தொந்தரவு செய்வதாய், தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாய் அவர் 2017இல் புகார் செய்தார். 2018இல் பல்கலைக்கழகம் இதைக் குறித்து விசாரித்து குற்றத்தை உறுதி செய்து ரோனெல்லை தற்காலிக பதவி நீக்கம் செய்து தண்டித்தது.

ரெயிட்மேன் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாய் ரோனெல் தனக்கு அனுப்பிய மின்ன்ஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளை சமர்ப்பித்தார். இந்த பிரதிகளில் ரோனெல் அவரைஎன் அன்புக்குரியவனே”, “பேபி”, ”என் செல்ல நாய்க்குட்டி”, “பேரழகனேஎன்றெல்லாம் விளித்திருக்கிறார். ரெயிட்மேனின் கூற்றுப்படி ரோனெல் அவரை முத்தமிட்டிருக்கிறார், தொடர்ந்து வருடி இருக்கிறார், அவருக்கு காதல் ரசம் சொட்டும் குறுஞ்செய்திகள் அனுப்பி இருக்கிறார், தொடர்ந்து போனில் அழைத்து தொந்தரவு செய்திருக்கிறார், ஒரே படுக்கையில் அவருடன் இருந்திருக்கிறார், அவர் ஒரு கட்டத்தில் ஒத்துழைக்க மறுத்த போது ரோனெல்உனக்கு நெறியாளராய் இருந்து நான் இனி உதவ மாட்டேன்என அச்சுறுத்தி இருக்கிறார்.

2012இல் தான் இந்த சிக்கலான உறவு துவங்குகிறது. இருவரும் சேர்ந்து பாரிசுக்கு பயணிக்கிறார்கள். ஒரே விடுதியில் தங்குகிறார்கள். முதல் நாளே ரோனெல் தன்னை படுக்கையறைக்கு அழைத்து படுக்கையில் கண்மூடி படுத்த நிலையில் தனக்கு கவிதை வாசிக்கும்படி கேட்டதாய் ரெயிட்மேன் சொல்கிறார். இதன் பிறகு அவர் ரெயிட்மேனை படுக்கையில் இழுத்துப் போடுகிறார். ரெயிட்மேனின் சொற்களில், “அவர் என் கைகளை எடுத்து தன் மார்பிலும் புட்டத்திலும் வைத்து அழுத்தினார். தன் உடலால் என் ஆண்குறி மீது அழுத்தினார். என் கைகள், என் இடுப்புக்குக் கீழே தொடர்ந்து முத்தமிட்டபடியே இருந்தார்.” இதற்கு அடுத்த நாள் ரோனெலை எதிர்கொண்ட ரெயிட்மேன் தனக்கு இத்தகைய பாலுறவுடன் உடன்பாடில்லை என்கிறார். ஒரு பேராசிரியராக, நெறியாளராக அவர் தன்னிடம் தொடர்வதில் மட்டுமே தனக்கு விருப்பம் என்கிறார். அப்போது அமைதியாக இருந்த ரோனெல் இருவரும் ஊருக்குத் திரும்பிய பின் ஒருநாள் ரெயிட்மேனின் அப்பார்ட்மெண்டுக்கு வந்தார். அப்போது நியுயார்க்கில் சாண்டி சூறாவளி வீடியதால் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது. ரோனெல் தன் வீட்டில் மின்சாரம் போய் விட்டது எனக் காரணம் சொல்லி ரெயிட்மேனுடன் அன்று தங்கிக் கொண்டார். மீண்டும் அவர் ரெயிட்மேனுடன் உடலுறவு கொண்டார். அந்த வாரம் ஒவ்வொரு இரவும் அவர் ரெயிட்மேனை தன்னுடன் படுக்கையில் தங்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். அதன் பிறகு பல செமஸ்டர்கள் தொடர்ந்து வார இறுதிகளில் ரெயிட்மேன் தன் பெண் பேராசிரியரின் படுக்கையில் அவரது மடியில் விருப்பமின்றி கழிக்கும்படி வற்புறுத்தப்பட்டிருக்கிறார்,

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து படிப்பை முடித்து ரெயிட்மேன் வேலை தேடத் துவங்கினார். ரோனெல் அவர் வேலை நாடிச் செல்ல வாய்ப்புள்ள நிறுவனங்களில் எல்லாம் அவரை மோசமாய் சித்தரித்து கடிதங்களை அனுப்பி உள்ளார். தன்னை விட்டுப் பிரிந்த்தற்காக இப்படி பழிவாங்கி உள்ளார். ஆனால் ரோனெல்லின் ஆதரவாளர்கள் இந்த கடிதங்கள் வழக்கமான பரிந்துரைக் கடிதங்களே, அவற்றில் எதிர்மறையாய் எதுவுமில்லை என்கிறார்கள். அது மட்டுமல்ல, ரோனெல்லுக்கு அவர் அனுப்பிய பதில்களிலும் காதல் சொட்டுகிறதே, இதை எப்படி பாலியல் அத்துமீறல் எனக் கோருவது எனக் கேட்கிறார்கள்.  



இருவருக்கு இடையில் இந்த உறவு தோன்ற ஒரு முக்கிய காரணம் இருவரின் யூத பின்னணி. அந்த உறவு நீடிக்க முடியாததற்கு ஒரு காரணம் ரெயிட்மேன் ஆண்கள் பால் மட்டும் ஈர்க்கப்படும் ஓரினச்சேர்க்கையாளர் என்பது. ரோனெல் இருபால் விழைவாளர்.

ஆக, ஆசிரிய-மாண உறவில் இருந்த காதலை இங்கு மறுப்பதற்கில்லை. அது பரஸ்பரமானதா என்பதே ஒரே கேள்வி. அது பரஸ்பரமானது, தான் எந்த வல்லுறவிலும் ஈடுபடவில்லை என்பதே ரோனெலின் வாதம்.

தன்னுடன் ரெயிட்மேன் முழுவிருப்பத்துடனே பாலியல் உறவில் நீடித்தார்; ஒரு காலத்தில் அவருக்கு தனது கல்வி சார்ந்த உதவிகள் தேவைப்பட்டன; ஆனால் இன்று அவர் தன் நிலைப்பாட்டை மாற்றி விட்டார் என்றார் ரோனெல். ரோனெலின் கல்வித்துறை நண்பர்களும், ஜுடித் பட்லர் உள்ளிட்ட பெண்ணியவாதிகளும் ஒரு கடிதத்தை ரோனெலுக்கு ஆதரவாக எழுதி நியுயார்க் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அனுப்பினர். இதில் தாம் ரோனெலை ஒரு கல்வியாளராக நன்கு அறிவோம், அவர் மாணவர்களிடம் அத்துமீறி நடந்து கொள்பவர் அல்ல, இது அவர் மீது பழி சுமத்தி அவர் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி மட்டுமே என சொல்கிறார்கள்.

இங்கு இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும்:

) இதே போன்ற பாலியல் அத்துமீறல் குற்றங்கள் ஆண் பேராசிரியர்கள் / அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் மீது சுமத்தப்பட்டால் அவர் அது ஒரு பரஸ்பர உறவே, தன் மீது தனித்த குற்றம் ஒன்றுமில்லை என பாதிக்கப்பட்ட தரப்பை விமர்சித்து வாதிடுவார்கள். ரோனெல் போன்ற ஒரு பெண்ணியவாதியும் அதையே இப்போது செய்கிறார்.

) ஆண்கள் குற்றம்சாட்டப்படும் போது அவர்களின் சகாக்கள் உதவிக்கு வருவார்கள்; குற்றமற்றவர் என சான்றிதழ் அளிப்பார்கள். இதே தான் இங்கு ரோனெல் விசயத்தில் ஜூடித் பட்லர் போன்ற பெரும் பெண்ணிய மேதைகளே குணநல சான்றிதழ் அளிக்கிறார்கள்; பாதிக்கப்பட்ட தரப்பை விமர்சிக்கிறார்கள்.

இரு விசயங்களிலும், ஒரு ஆண் குற்றம் சாட்டப்படும் போது நடப்பதே நடந்துள்ளது. ஆண் குற்றவாளி எனும் போது பெண்ணியவாதிகள் கூறுவது என்ன? பரஸ்பர உறவு எனும் போதும் அதிகாரம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உறைகிறது; அதிகாரம் கொண்டவர் ஒரு பரஸ்பர விருப்பம் கொண்ட உறவில் ஈடுபடுகையில் அங்கு சமநிலை இருப்பதில்லை. ஆகையால் ஆண் கோருவது போல அது பரஸ்பர விருப்பத்திலானதாய் இருக்க முடியாது, பெண் அங்கு அதிகாரத்தின் அடிபணியும் நெருக்கடியின் காரணமாகவே உறவுக்கு அடிபணிகிறார் என்பார்கள் பெண்ணியவாதிகள்; பரஸ்பர விருப்பத்திலானது என்று தோன்றினாலும் அடிப்படையாக அது ஒரு அதிகார தரப்பு ஒடுக்குமுறையே, அதிகாரம் பிரயோகித்து ஒரு பெண்ணை பணிய வைப்பதே என அவர்கள் சொல்வார்கள். அத்தகைய ஆணை அவரது நண்பர்கள் ஆதரிப்பது என்பது அனைத்து ஆண்களும் ஆணதிகாரத்தில் பங்கு பெற்று அதை தக்க வைக்கும் முயற்சி என அடையாளப்படுத்துவார்கள் பெண்ணியவாதிகள். இப்போது பெண்ணே குற்றத்தில் ஈடுபடும் போது, பாதிக்கப்பட்ட ஆணை அவர் குற்றவாளி ஆக்கும் போது, அதை அவரது பெண்ணியவாதி நண்பர்கள் ஆதரித்து பாதிக்கப்பட்ட ஆணை களங்கப்படுத்தும் போது எல்லாம் தலைகீழாகி விடுகிறது. ஆணாதிக்கம் என்பது பெண்ணியவாதிகளின் உலகிலேயே சிம்மாசனமிட்டு அமர்ந்து ஆட்சி செய்யலாம் என்பதற்கு இது ஒரு உதாரணமாகிறது.


எனது “MeToo: சில விமர்சனங்கள்” நூலில் இருந்து.

நூலை இணையம் வழி வாங்க:


https://www.udumalai.com/meetoo-vimarsanangal.htm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...