இருந்தும் காணாமல் போனவர் பற்றி சுவரொட்டி
இது மிக மிக சுவாரஸ்யமானது. ஏற்கனவே நாம் கண்ட சுவரொட்டிகள் நிஜமானவை, ஆனால் நிஜத்திலும் பல முரண்கள் கொண்டுள்ளவை
என்பதால் அவை புனைவுத் தன்மை பெறுகின்றன. ஆனால் இது வெளிப்படையாகவே ஒரு புனைவு. பகடிக்காக, விமர்சன நோக்குடன் உருவாக்கப்பட்ட சுவரொட்டி
இது. டாக்டர் முத்தையா பரமக்குடியை சேர்ந்த
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தினகரனின் சொகுசு பங்களாவில் அவர் மறைவில்
இருந்த காலத்தில் அவர் அதிமுகவுக்கு “துரோகம் இழைத்ததை” விமர்சிக்கும்
பொருட்டு “அம்மாவின் உண்மை விசுவாசிகள்” ஊரெங்கும் ஒட்டிய சுவரொட்டி இது. மற்றவை நிஜத்துக்குள் வரும் புனைவு என்றால்
இவை புனைவுக்குள் வரும் புனைவு. ஆனால் இதிலும் “நிஜம்” எனக் காட்டும் எத்தனிப்பு உண்டு; கூடவே வெறும் (ஆனால் சற்றே கோபமான) விளையாட்டு தான் இது எனக் காட்டும் முயற்சிகள் / குறிப்பான்கள் இந்த சுவரொட்டியில் உண்டு. இந்த முரண்களை இதை எழுதியவரே உணர்ந்து
ஆவேசமாய் வலியுறுத்துவதே இதை நகைச்சுவையான சுவரொட்டி ஆக்குகிறது. அந்த “அழுத்தமான” இடங்களைப் பார்ப்போம்.
இந்த பிரதியில் “காணவில்லை” இரண்டு முறை தடிமனான எழுத்தில் கறுப்பு
வண்ணத்தில் அழுத்தி சொல்லிப் படுகிறது. இது ஒரு “நிஜ” காணவில்லை சுவரொட்டி எனும் தன்மையை கொடுக்கிறது. ஆனால் இதற்கு கீழே உடனடியாய் இது ஒரு விளையாட்டு
என சுட்டும்படியாய் “அம்மாவின்
துரோகி” எனும் வாக்கியம் வருகிறது. ஆனால் இந்த விளையாட்டுக்குள் மற்றொரு முரணாய்
அதிமுகவின் கறுப்பு-வெள்ளை-சிவப்பு வண்ணக்கலவை “அம்மாவின் துரோகி / Dr.முத்தையா” எனும் சொற்களில் தோன்றும்படி வடிவமைத்திருக்கிறார்கள். அதாவது இந்த ”துரோகி” இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறார் பாருங்கள்
என முரணாகவே ஒரு முரணை சுட்டுகிறார்கள். இதை அடுத்து, “M.L.Aவை” என்பது சிறு எழுத்துக்களில் எந்த குறிப்பான
பொருளுமற்ற நீல வண்ணத்தில் வருகிறது. இது அவரது பதவியை மெல்ல இன்மையை நோக்கித் தள்ளுகிறது.
கூடவே “தொகுதி மக்கள் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்” எனும் பகடி வாக்கியமும் வருகிறது. காணாமல் போனவரை கண்டால் தெரிவிக்க வேண்டிய
தொடர்பு எண்ணோ முகவரியோ இல்லை - இதன் பொருள்
இதை எழுதியவரே “தேடுதல் வேட்டையில் ஈடுபடும் தொகுதி மக்கள்” என்பது. ஆனால் தொகுதி மக்கள் அனைவரும் அதிமுகவினரா? அப்படி இருக்க முடியாதே? அப்படி எனில் இந்த பிரதியின் எழுத்தாளன்
யார்? அதிமுக நிர்வாகமா? ஒ.பி.எஸ், எடப்பாடியா? இருக்க முடியாது. அவன் இந்த இரண்டு தரப்பும் அல்லன் - அவனே “அம்மாவின் உண்மை விசுவாசி”. ஆனால் உண்மை விசுவாசி தொகுதி மக்களாகவோ
கட்சியாகவோ கட்சி நிர்வாகமாகவோ அல்லாமல் இருந்தால் அவன் யார்? இந்த குழப்பமே இந்த பகடியை ஒரு சுயபகடியாகிறது. அதிமுகவின் இன்றைய நிலை பற்றி வாசிக்கும்
பொதுவாசகன் இங்கு சிரித்துக் கொள்ளும் சாத்தியத்தை இந்த சுவரொட்டி (அந்நோக்கமின்றியே) ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இறுதியாக...
கட்டுடைத்தல் ஒரு விமர்சனக் கருவி அல்ல – அது அர்த்தங்கள் ஒன்றையொன்றை முறியடிக்கும் ஒரு ஜாலியான விளையாட்டாக, ஒரு ஜாலமாக, லீலையாக வாழ்க்கையை காணும்படி நம்மை அழைக்கும் ஒரு மாற்றுப் பார்வை. கட்டுடைத்தலை புரிந்து கொள்வது நம் கட்டுக்களில் இருந்து விட்டு விடுதலையாவது. தெரிதா நம்மை உடைக்க கேட்பது நம் மீது
கருத்துக்கள், நம்பிக்கைகள், சொற்கள் கொண்டுள்ள உடும்புப் பிடியை. இந்த பிடி வெறும் கட்டமைப்பு, அது சொற்கள் இருமைக்குள், முரண்பாடுகளுக்குள், பூடகங்களுக்குள் உருக்கொள்கின்றன, தன்னளவில் இவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை
என அறிய வரும் போது நாம் பாரதியைப் போல “நீங்கள் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ” என களிப்புடன் அனைத்து கட்டமைப்புகளையும், அவற்றின் கட்டுகளையும் நோக்கி வினவுகிறோம் – அந்த வினா ஒரு களிவிளையாட்டின் துவக்கம்!

Comments