என் அப்பா ஒரு நாத்திகவாதி. அதனால் சின்ன வயதிலிருந்தே எங்கள் வீட்டில் எந்த பண்டிகைகள், சடங்குகளும் பின்பற்றப்பட்டதில்லை - “தீவாளிக்கு” கறி சமைப்பதைத் தவிர. அதனால் சிறுவனான எனக்கு அப்போது கோயில் முன்னால் தேங்காய் உடைப்பது, திருஷ்டி கழிக்க பூசணிக்காய் உடைப்பது போன்றவை எனக்கு விநோதமாய் அர்த்தமற்றவையாகத் தெரியும். மிளகாய், எலுமிச்சையை வாசலில் தொங்க விடுவதன் லாஜிக்கெல்லாம் எனக்கு புரிந்ததே இல்லை. சிறுதெய்வ வழிபாடுகளின் போது சேவலை அறுத்து துடிக்க விடுவதையும் கூட அதை பின்னர் சமைத்து சாப்பிடுகிறார்களே எனும் அளவில் தான் அர்த்தப்படுத்திக் கொள்வேன். அதாவது இந்த மாதிரி சம்பிரதாயங்களை உணர்வுபூர்வமாய் நான் புரிந்ததில்லை.
ஆனால் வளர்ந்த பின் நமது மரபில் அதற்குள்ள (பயன்பாட்டுக்கான உயிர்களையும் பொருட்களையும் உடைப்பது, அறுப்பது, தொங்க விடுவது) இடத்தை புரிந்து கொண்டேன்; எனக்குள் அவை எழுப்பும் மன அலைகளை உணர்ந்து கொண்டேன். சமீபத்தில் ஒரு நண்பர் “பூசணிக்காயை ஏன் உடைத்து வீணடிக்கிறார்கள் புரோ?” எனக் கேட்ட போது எனக்கு என் இளமைக்காலம் நினைவு வந்தது. நண்பரிடம் சொன்னேன்.
இந்த பூசணிக்காய் உடைப்பது மற்றொரு பலிச்சடங்கு. அதாவது ரத்தத்தை, நிணத்தை நேரில் பார்த்து எதிர்கொள்ள விரும்பாத ஒரு அம்மாஞ்சி சமூகம் பூசணிக்காயை மனித பலிக்கு ஈடாக்கியது. இவர்களில் நாட்டார் மரபில் வரும் சற்றே வன்முறையான சமூகத்தினர், சற்று பின்னுக்குப் போய், ஆடு, கோழி ஆகியவற்றை பலிகொடுத்தனர். அவர்களுக்கு ஆடும், கோழியும் மனிதனுக்கு பதிலீடு.
நண்பர் கேட்டார், “சரி தான் ரத்தத்துக்கு பதிலா பூசணிக்கா விதையில் குங்கமத்தை கலந்து உடைத்து சிதற விடுறோம். அது பிளவுண்ட மனித உடல் அல்லது தலை. ரைட். ஆனால் ஏன் அதை ஒருத்தர் செய்யணும்? அன்பும் அமையும் அகிம்சையும் பேசும் சடங்குகளை பின்பற்றலாமே? ஏன் ஒரு உயிரை வாங்கணும்? அதை ஏன் கடவுள், மதம், நம்பிக்கையின் பேரில் பண்ணனும்? இது மனித நாகரிகமா? உயர்ந்த பண்பாடா?”
இதற்கு பொதுவாக பதிலளிப்பவர் என்னதான் நாகரிகம் அடைந்தாலும் மனிதன் அடிப்படையாக ஒரு மிருகம் தானே என்பார்கள். ஆனால் எனக்கு இந்த பார்வையுடன் உடன்பாடில்லை. நாகரிகம் உயர்ந்தது, மிருகநிலை தாழ்வானது எனும் பாவனை இதற்குள் இருக்கிறது. நான் வேறுவிதமாக இதை அவதானிக்கிறேன்:
வன்முறை, ரத்தம், அழிப்பது, வதைப்பது ஆகியவை தவறான காரியங்கள் அல்ல, ஒரு மனிதன் தன் பிரக்ஞையின் பிடியை தளர்த்தி தன்னை ஆழமாக முழுமையாக உணர்வது, விடுதலை பெற்ற ஆன்மாவாக அறிவது, உன்னதமான கிளர்ச்சியை பெறுவது ரத்தத்தை காணும் போதோ, பிற உடலையோ தன் உடலையோ வதைத்து, துன்புறுத்தி அழிக்கும் போதோ தான் என நான் பதிலளித்தேன்.
நமது அவைதீக மரபில் இறைமார்க்கமாக உடல் வதை, செக்ஸ், ரத்தம் சிந்துதல் இருந்துள்ளது (வைதீகத்தில் யாகத்தில் நெய்யும் உணவும் வார்ப்பதாக இது மாறியது; வைதிகர்கள் யாகத்தீயில் மாட்டை பலிதந்ததாக கூட சொல்கிறார்கள், உறுதியாக தெரியவில்லை).
பின்நவீன கருத்தாளர்களில் டெலூஸ், கொத்தாரி ஆகிய இரட்டை கோட்பாட்டாளர்களின் A Thousand Plateuas எனும் அபாரமான நூலில் இதைப் பற்றி சுவாரஸ்யமாக ஆழமாக நிறைய விசயங்கள் சொல்லுகிறார்கள். சுருக்கமாக: நவீன சமூகத்தில் மனிதன் உடலளவில் சுதந்திரமாக இல்லை. அவனது ஒவ்வொரு அசைவும் கட்டுப்படுத்தப்படுகிறது; அவன் ஆட்டுவிக்கப்படும் ஒரு பொம்மை. அவன் சுதந்திரமாக செயல்படும் போது கூட அதற்கு தன் உடல் ஒரு தடையாக இருப்பதை அறிகிறான். அதாவது இரண்டு தடைகள்: 1) உடல் மீது சமூகம் செலுத்தும் அதிகாரமும் கட்டுப்பாடும் (ஆடைக் கட்டுப்பாடு, மாட்டுக்கறி உண்பது, வரிசையில் நிற்பது, போலிசைக் கண்டு பயந்து ஒதுங்குவது, திருமணத்தின் போது தாலி கட்டுவது) ஒரு தடை எனில், 2) தன்னை இந்த உடலாக ஒருவர் உணர்வது, அதை வலுவாக்க, கட்டுடலாக்க, அழகாக்க, சமூகம் ஏற்கும்படி மாற்ற போராடுவது, இதை செய்யும் போது தன் உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லை என உணர்ந்து ஏமாற்றமடைவது, செக்ஸின் போது தன்னுடலைக் கண்டு லஜ்ஜை கொள்வது, விளையாடும் போது மூச்சுவாங்க எரிச்சல் கொள்வது, பசிப்பது, காமத்தை அடக்க முடியாமல் போவது, தியானத்தின் போது முதுகு அரிப்பது, வேலை நேரத்தில் தூக்கம் வருவது, செத்து விடலாம் எனத் தோன்றினாலும் உடல் வாழ விரும்புவது, இப்படி நேரடி சமூக கண்காணிப்பு இல்லாத போதும் ஒரு மனிதன் இரண்டிரண்டாய் பிரிந்து தான் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஈடுபடுகிறான்.
இந்த தளைகளை ஒரு மனிதனால் அறுக்க முடிவது வதையின் போது மட்டுமே தான் என சொல்லும் டெலூஸ் & கொத்தாரி வலியை, கடும் பீதியை, உடல் மீதான அடிப்படை பிடிப்பை, கட்டுப்பாட்டை இழந்து முழுக்க வேதனைக்கு தன்னை ஒப்புக்கொடுப்பது மனிதனுக்கு ஒப்பற்ற இன்பத்தை அளிக்கிறது, அதுவே அவனை எல்லையற்றவனாக உணர வைக்கிறது என்கிறார்.
சேடோமஸோக்கிசத்தை பயில்பவர்களை வைத்து தான் டேலூஸ் & கொத்தாரி இதை விளக்குகிறார்கள் என்றாலும் நமது உடலுறவு செயல்பாடும் இதில் இருந்து மிக வித்தியாசமானது அல்ல என்பதை கவனியுங்கள்.
நீங்கள் ஆவேசமாக உடலுறவு கொள்வதை நினைவில் மீட்டினால் அது என்னவாக இருக்கிறது? - அது நிச்சயம் பரஸ்பரம் அன்புடன் தழுவி இன்பமளிப்பதாக அது தெரியாது; பரஸ்பரம் இறுக்கி நெருக்கி கடித்து ஒரு வேட்டைமிருகம் இரைமீது பாய்வது போன்றே செயல்படுகிறீர்கள். இறுதிக் கட்டமாக நீங்கள் செய்வது கூட ஒரு கூரான கத்தியால் இணையின் அடிவயிற்றை கிழிப்பது போன்றே உள்ளது; அப்போது இருவரும் இடும் சப்தங்கள் இன்பத்தினால் எழுவன என்றால் அவை ஏன் நாம் அதீத துன்பத்தில் தவித்து தளர்ந்து கத்தி முனகுவது போல உள்ளன? ஏனென்றால் உடலுறவு இன்பம் என்பது கடுமையான துன்பத்தின் முகமூடியணிந்த ஒரு வடிவம். சற்றே பிசகி விட்டால் இரு தரப்புக்கும் அது வேதனையாகிப் போகும்.
கடுமையான வன்முறையின் போதும் மனிதர்களால் பகையை கடந்து போக முடிவதுண்டு; சொல்லப் போனால், அடிதடியின் போது எதிரி மீது உங்களுக்கு ஒரு பந்தம் கூட ஏற்படும். அஹிம்சையில் இத்தகைய பந்தங்கள் சாத்தியமாவதில்லை.
ஏன் உடற்பயிற்சியை இத்தனை பேர் மெனக்கெட்டு செய்கிறார்கள்? அதுவும் நீங்களே காசு கொடுத்து நீங்களே ஒரு கூடத்தில் நின்று எடையை தூக்கி “வேலை” செய்ய வேண்டும்? ஆரம்பத்தில் உடலை உறுதியாக்க, கட்டாக நீங்கள் உடற்பயிற்சி செய்வீர்கள். ஆனால் போகப் போக இது ஒரு போதையாகும். 6-8 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி செய்தால் பிறகு சிக்ஸ் பேக் வளர்க்க நீங்கள் செல்ல மாட்டீர்கள். வியர்க்க வியர்க்க அங்கு “வேலை”செய்து, உங்களுக்கே வலியை, சிரமத்தை கொடுக்கையில், உங்களுக்கு கிடைக்கும் ஒருவித விளக்க முடியாத இன்பம், கிளர்ச்சி, மென்மையான பரவசம் ஏற்படுகிறது. உட்கார்ந்து மணிக்கணக்காய் செய்யும் மூளை வேலை ஒரு போதும் தந்து விடாத தனித்துவமான கிளர்ச்சி இது.
நமது ஆதி சமூகங்களில் ஒரு நல்ல செயலை ஆரம்பிக்கும் முன் / யுத்தம் செய்யும் முன் இறைவனுக்காக தம்மில் ஒருவரை பலிகொடுப்பார்கள். இப்படி பலியானவர்கள் பின்னர் தெய்வமாவார்கள். இப்படி பலியாகும் ஆள் தன்னை கிட்டத்தட்ட இதற்கு ஒப்புக்கொடுப்பவர் தான்; அப்படி கத்திக்கு தன் கழுத்தை அவர் ஒப்படைக்கும் போது அவர் உணரும் விடுதலையானது வேறெப்போதும் அவருக்கு சாத்தியாகாது; அவர் கழுத்தில் கத்தியை பாய்ச்சுகிறவரும் அதையே உணர்வார்; சுற்றி நின்று பார்த்து ஆர்ப்பரிப்பவரும் இதையே தான் தமக்குள் ஒரு மின்பாய்ச்சலாக அறிவார்கள்.
நண்பர் அடுத்து முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்டார்: ஒரு பூசணிக்காய் உடைப்பதும் இதுவும் எப்படி ஒன்றாக முடியும்? ஆம் இல்லை தான். ஆனால் நவீன சமூகங்கள் உடைபட்ட பூசணிக்காய் போன்ற பல்வேறு குறியீடுகளால் ஆன ஒரு வலைப்பின்னல். உடைந்து சிவந்து வாய் திறந்து நம்மைப் பார்க்கும் பூசணிக்காயும் பளிச்சென்ற சிவப்பு சேலையில் நம்முன்னே வரும் ஒரு பெண்ணும் ஒரே ரத்தத்தின் குறியீடுகளே. சுற்றிப் பாருங்கள். உங்களைச் சுற்றி இருக்கும் பொருட்களின் வண்ணங்கள் என்ன? அதிகம் காணப்படும் வண்ணம் எது? (சிவப்பு) ஏன்?
நடைமுறைத்தேவையை விட குறியீட்டுத் தேவைக்காகவே நாம் அதிகமாய் பணம் செலவழிக்கிறோம். (செவழித்தலில் உள்ள அழித்தலை கவனியுங்கள்.) நாம் படிக்கும் கவிதைகள், நாம் பார்க்கும் சினிமா, நாம் அதிகமாய் நேசிக்கும் உறவுகள், மது, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள், நாம் மேற்கொள்ளும் தூக்கம், தன்னை மறந்து செய்யும் வேலைகள், நமது நட்பாட்டம், காதல், தாம்பத்யம் ஆகியவை பல்வேறு நிலையிலான சுய அழிப்புகளே. தன்னை அழிக்க முடியாத போதே ஒருவன் அலுப்பை உணர்கிறான். தன் காதல் சொல்ல முடியாத தீவிரம் கொண்டதாக இருக்கும் போது ஒருவன் தன் கையை அறுக்கிறான், ஒரு பெண் தூக்க மாத்திரைகளை முழுங்குகிறாள், காதலர்கள் பைக்கில் அதிவேகமாய் சென்று எங்கேயாவது மோதி அழிய முயல்கிறார்கள். அடிக்கடி உடலுறவு கொள்ளாத தம்பதிகள் அனுதினமும் சண்டை போடுகிறார்கள்; சண்டை போடுவதும் நின்றால் அவர்கள் பிரிகிறார்கள். (உடலுறவு இன்பமான வதை எனில், சண்டை ஒரு மிதமான வதை எனில், பிரிவு அவர்கள் பரஸ்பரம் அளித்துக் கொள்ள உச்சபட்ச துன்பம்).
ஆயுத பூஜையன்று தான் என்றில்லை; நாம் தினம் தினம் “பூசணிக்காய்” உடைத்தபடியே தான் இருக்கிறோம். ரத்தத்தை பார்க்கும் போதே, அதற்கான முயற்சிகளில் இருக்கும் போதே ஒரு மனிதன் தன் இருப்பை அறிகிறான்.
நண்பர் என்னிடம் இறுதியாக ஒன்றைக் கேட்டார்: “மனிதன் அடிப்படையில் ஒரு மிருகம் என சொல்கிறீர்களா?”
நிச்சயமாக இல்லை. மனிதன் ஒரு உயிர். இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் பிறந்த நொடியில் இருந்தே தன்னை அழிப்பதற்கான தவிப்பிலேயே இருக்கிறது. உயிர் வாழ்தல் என்பது உயிரிழத்தல்.
Comments