முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒற்றன் (1)


அசோகமித்திரனின் “ஒற்றன்நாவலை நான் இரண்டாவது முறையாக படிக்கிறேன். முதலில் படித்த போதிருந்த அதே உணர்வு தான் இப்போதும் - வடிவ பரிசோதனை செய்திருக்கிறார், ஆனால் அது அவ்வளவு துல்லியமாக கைவரவில்லை. “ஜெ.ஜெ: சில குறிப்புகள்நாவலில் டைரிக் குறிப்பும் துண்டுத்துண்டான மனநிலையும் வடிவம் என்றால் இதில் பயணக்குறிப்புகள். அசோகமித்திரன் அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்கள் தங்கி எழுதும் திட்டம் ஒன்றில் பங்கேற்ற அனுபவங்கள். ஆனால் அசோகமித்திரன் பயணக்குறிப்புகளைக் கொண்டு கதைசொல்லி நிலையற்று, மையமற்று போவதை, அதன் சுதந்திரத்தைப் பேசாமல் (அதுவே எளிது) இந்த குறிப்புகளின் ஊடாக ஒரு கோர்வையான கதையை சொல்கிறார். இந்த கதையை மேலோட்டை மட்டும் உருவினால் ஒண்டுக்குடித்தனங்களில் வாழும் ஜனங்களின் கதை ஒன்று வருகிறது. அல்லதுவியட்நாம் வீடுபோன்ற ஒரு கதை


அடிப்படையில் ஒரு எதார்த்த கதை. பரீட்சார்த்த தொழில்நுட்பமும் எதார்த்த கதைகூறலும் இணைந்து ஒரு முகமற்ற வடிவத்தை இக்கதை பெற்றிருக்கிறது. “பாவம் டல்பதடோஎனும் அவரது அதிகம் பேசப்படாத நாவலும் இப்படி உதிரி உதிரியான சித்திரங்களால் முழுமைபெற்றும் முழுமைபெறாத வகை படைப்பு தான்ஆனால் அசோகமித்திரனின் சிறப்பு அவர் இந்த வழக்கமான கதையை அபாரமான உளவியல் ஆழத்துடன் நேர்த்தியுடன் சொல்லுகிறார் என்பது

பல நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்கள் ஏழெட்டு மாதங்கள் அமெரிக்காவில் சேர்ந்து தங்குகிறார்கள்; ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை, சிக்கல், ஏக்கம், குழப்பம், குடும்ப, அரசியல் பின்னணி. அவர்களும் சுலபத்தில் ஒரு குழாமாக இணைவதில்லை (எழுத்தாளன் அடிப்படையிலோ ஒட்டாத பாதரசம் தானே). இருந்தும் அவர்கள் பரஸ்பரம் கைகோர்த்து பயணிப்பதற்கான பல சந்தர்பங்கள் அமைகின்றன. இன, சாதி, மத பேதங்களைக் கடந்து மனிதன் ஒன்று தான் என அசோகமித்திரன் வலியுறுத்துகிறார்; அப்படி ஒன்றுதான் என நினைக்கும் போதும் அவன் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலான வஸ்துவாகவும் இருக்கிறான், எதிர்பாராமைகளால் உறவுகளுக்கு இடையே நிறைய அபத்தங்கள், முரண்கள் நிகழ்கின்றன. இதை அசோகமித்திரன் சித்தரிப்பது தான் இந்நாவலை அபாரமான படைப்பாக்குகிறது.

மனிதன் பேரன்பு மிக்க மனிதன் கோமாளியாகவும் இருக்கிறான் - ஆப்பிரிக்க எழுத்தாளர் அபே அப்படித் தான் இருக்கிறார். அதிக விலையில் ஒரு சூட் தைத்துக் கொண்டு மாதக்கணக்கில் அதை மட்டுமே அணிகிறார், தன் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்குவதும் அமெரிக்காவில் வெளியிடுவதுமே நோக்கம் என்கிறார், அவரது தேசத்தின் ஜனாதிபதி / ஆட்சியாளரின் குடும்பத்துடன் தனக்குள்ள செல்வாக்கை பறைசாற்றுகிறார், தன் நாட்டில் தான் ஒரு மிக பிரசித்தமான நாவலாசிரியன் என்கிறார், ஆனால் சட்டென அங்கு ஆட்சி மாற்றம் வருகிறது, அவனது நாவலை யாரும் அமெரிக்காவில் கவனிக்கவில்லை, ஒரு சக எழுத்தாளரிடம் கூட நட்பை பராமரிக்காமல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்கு கிளம்புகிறார். இடையில் ஒரு ஜப்பானிய பெண் எழுத்தாளரிடம் விருப்பத்தை காட்ட முயன்று உதாசீனிக்கப்படுகிறார், அவரிடம் கரிசனமாக இருந்த கதைசொல்லியை தவறாக புரிந்து கொண்டு அடிக்கிறார், அவரைப் பற்றி பேசும் கதைசொல்லிசிலர் ஊரில் குடும்பம், உறவு என பாதுகாப்பாக இருந்து விட்டு அமெரிக்காவின் தனிமையில் மாட்டிக் கொள்ளும் போது மனம் தடுமாறி முன்னுக்கு பின் முரணாக நடந்து கொள்கிறார்கள், அது அவர்களின் தவறல்லஎன்கிறார்.

மனிதன் தன்னை உணர்ந்து நிதானமாக இருக்கும் போதும் கோமாளியாக இருக்கிறான் - சுயகட்டுப்பாடும் கரார்தன்மையும் தெளிவும் மிக்க பிராவோ அபேயின் மற்றொரு வடிவம். அவனும் அதிகம் மக்களோடு பழகுவதில்லை. நாவல் எழுதும் கலையை அவன் கதாபாத்திரங்களின் பரஸ்பர மோதலாகக் கண்டு அதை எளிமைப்படுத்த ஒரு சூத்திரத்தை வகுக்கிறான். அதையே ஒரு சார்ட்டில் பல வட்டங்களாக வரைந்து, ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு நிறம் வழங்கி, இந்த பாத்திரங்கள் வரும் இடங்களில் காட்சிகளில் என்னென்ன உணர்ச்சிகள் தோன்றும் என வரையறுக்கிறான். இந்த அறிவியல் நுட்பத்தைக் கண்டு கதைசொல்லி வியக்கிறார், பிராவோவை அவர் ஒரு மேதை எனக் கொண்டாடுகிறார், எல்லாரிடமும் அவனது புகழை கொண்டாடுகிறார் (இது போகும் போக்கைப் பார்த்தால் பிராவோ சொதப்பப் போகிறானோ என நமக்குத் தோன்றும், அப்படியே நடக்கிறது). பிராவோ அடுத்து வரும் வாரங்களை அறையில் தனியாக கழிக்கிறான், தினமும் ஒவ்வொரு மணிநேரத்தையும் நாவலை வடிக்க செலவழிக்கிறான். இதையும் கதைசொல்லி எண்ணி சிலாகிக்கிறார், ஒருநாள் பிராவோ ஒரு பெண்ணைத் தழுவி நடந்து செல்வதைப் பார்க்கும் வரையில். இப்பெண்ணுடன் தான் அவன் ஒரு மாதமாக அந்த அறையில் அடைந்து கிடக்கிறான், அவளை அவன் ஆரம்பத்தில் தன் நாவலை தட்டச்சும் நோக்கில் அழைத்து வந்ததாக (இங்கு தஸ்தாவஸ்கி நமக்கு நினைவு வருகிறார்) கதைசொல்லிக்கு தெரிய வருகிறது. பிராவோவின் மனைவி பிற்பாடு வருகிறாள். அதற்கு முந்தின இரவே அவன் அப்பெண்ணை வெளியேற்றி விடுகிறான். இந்த கூத்துகளுக்கு நடுவே அவன் தன் நாவலையும் எழுதி முடித்து விட்டான். ஆனால் இவ்வளவு அபாரமான திட்டமிடல்களுக்குப் பின்னரும் நாவல் முழுத்தோல்வியாக முடிகிறது. அது அவன் எழுதியவதிலேயே மிக மட்டமான நாவல் என அவன் மனைவி தெரிவிக்கிறாள், அதை பிராவோவும் ஏற்கிறான். தன் நாவல் ஏன் சரியாக வரவில்லை என அவனுக்குப் புரியவில்லை.
 இங்கு மற்றொரு விசயத்தையும் நான் குறிப்பிட வேண்டும்: எழுத்தனுபவத்தின் மாயவினோதப் போக்குகளை விவரிக்க முடியாது. அசோகமித்திரன் எதையும் தூலமாக காட்சிபூர்வமாக சொல்ல விழைபவர். அதனாலேயே அவர் பிராவோவின் படைப்பாக்கத் தோல்வியை காட்சிபூர்வமாக நமக்கு உணர்த்த காமத்தை கொண்டு வருகிறார். அவனுக்கு நேரும் அந்த பாலியல் விபத்தை (தட்டச்சுப்பவளுடனான கள்ள உறவு) கூடவே குறிப்பிடுகிறார். எப்படி காமத்தை முறைப்படுத்த முடியாதோ அதே போல எழுத்தையும் ஒரு சூத்திரமாக வகுத்திட முடியாது என்கிறார். அப்படி செய்ய முயலும் போது வாழ்க்கை பெரிய வேடிக்கையாகப் போய் முடிகிறது என அதை அசோகமித்திரன் பகடி பண்ணுகிறார் (அமெரிக்காவின் புனைவு எழுத்து பட்டறைப் பண்பாட்டை, அந்த எழுத்து சந்தையை அவர் இங்கு கேலி செய்கிறார் என எடுத்துக் கொள்ளலாமா?)

கருணை வடிவானவர்களும் கோமாளியாகிறார்கள் - கதைசொல்லி மற்றும் ஜப்பானிய பெண் கவிஞர் கஜுகோவையும் இந்த கட்டற்ற அன்பாளர்கள் / கருணையாளர்களின் பட்டியலில் சேர்க்கலாம். கஜூகோவுக்கும் தவறானவர்களை (அபே) உதாசீனிக்கத் தெரியும்; கிட்டத்தட்ட எல்லாரையும் அரவணைத்து முத்தமிட்டு அன்பு பாராட்டத் தெரியும். அவளது ஜனநாயக முத்தங்கள் முத்தத்தையே முத்தமல்லாமல் ஆக்குகின்றன. அவள் தனது கவிதைகளை நாடகமாக, கன்னாபின்னாவென்று எந்த வடிவ ஒழுங்கோ இலக்கோ அல்ல நாடகமாக, அரங்கேற்றுகிறாள். ஒரு பாரில் பாரம்பரிய ஜப்பானிய உடையில் தோன்றி கவிதை வாசிக்கிறாள். பார்வையாளர்களாக வந்திருப்பவர்களுக்கு இரண்டு கோப்பை மது இலவசம் என்பதால் யாரும் அந்த கவிதைகள் மோசமாக உள்ளதை பொருட்படுத்தவில்லை. அவளும் கூடத் தான். அவளுக்கு அது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம். அவள் ஒரு போலியான இலக்கியவாதி அல்ல, ஆனால் எந்த மதிப்பீடுகளையும் வைத்து வாழ்க்கையை அளந்து பார்க்காத பெண் - எதுவுமே ரொம்ப முக்கியமில்லை, எதுவுமே ரொம்ப முக்கியமற்றதும் இல்லை என நினைப்பவள். இது ஒருவித கோமாளித்தனம்.
கதைசொல்லி ஆரம்பம் முதலே அனைவரிடமும் அன்பு பாராட்டுகிறவராக வருகிறார் - இதை அனைவரையும் மட்டற்று நேசிக்கும் மனப்போக்கு எனக் கொள்வதா அல்லது எல்லாரிடமும் இசைவாக செல்லும் போக்கு என்பதா?
 அவருடைய வாழ்க்கையில் வந்து செல்லும் கிட்டத்தட்ட எல்லாரையும் அவர் எந்த மதிப்பீடும் இல்லாமல் தான் ஏற்கிறார். அவர் அப்படி திறந்த மனம் கொண்டவர் என்பதால் பலவிதமான ஆட்கள், கவனத்தையும் அக்கறையையும் கோரும் ஆட்கள், அவரை தொடர்ந்து நாடுகிறார்கள். கதவில்லாத ஒரு விடுதியைப் போல இருக்கிறார். அசோகமித்திரன் இதையும் பகடி பண்ணுகிறார் என்பது தான் சிறப்பு. வெண்டுரா எனும் கறுப்பர் தன் ஊரில் பிரபல கவிஞன். ஆனால் அமெரிக்காவில் தனிமையில், ஆங்கிலத்தில் பேசத் தெரியாத பரிதவிப்பில், அவன் இருக்கையில் கதைசொல்லி அவனுக்குத் துணையாகிறார். மிஸிஸிப்பி நதியில் அவர்கள் படகில் போகையில் அவன் தொடர்ந்து வைனைக் குடித்து மொத்தத்தையும் வாந்தி எடுக்க கதைசொல்லி அதை கையில் ஏந்திக் கொள்கிறார். அந்த குழுவின் வழிகாட்டியுடன் சேர்ந்து தரையை சுத்தம் பண்ணி, வெண்டுராவையும் துடைத்து விடுகிறார். அதன் பிறகு வெண்டுரா வந்து அவருக்கு நன்றி சொன்னாலும் அன்பின் மிகுதி தருகிற அபத்தமான துன்பங்களையும் அசோகமித்திரன் சுட்டிக்காட்டுகிறார்

இலாரியா எனும் அழகிய இளம்பெண்ணும் கதைசொல்லிக்கு தோழியாகிறார். அவள் பல்கலைக்கழக மாணவி. தான் வேலை செய்து சேர்த்த பணத்தைக் கொண்டு புனைவும் கலையை முறையாக கற்பதற்கு வந்திருக்கிறாள். அவள் ஒரு மெக்ஸிக்கனை காதலித்து ஏமாறுகிறாள். அந்த காதல் தோல்வி அவளை உருக்குலைக்கிறது. அவளால் தன் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. இதைச் சொல்லி அவள் கதைசொல்லியிடம் அழுகிறாள். அவர் சொல்கிறார்: “துக்கத்தை மட்டும் தனிமையில் தான் புரிய வேண்டும். துக்கத்தைப் பங்கிட்டு கொள்ளவே முடியாது.” இது நாவலில் ஒரு முக்கியமான வாக்கியம். மற்றொரு முறை அவள் தன் துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் கதைசொல்லி இது வெறும் மயக்கம், துக்கம் என்பது ஒரு கற்பிதம் என்கிறார். துக்கத்துக்கு நாமாக இடமளித்தால் ஒழிய அது நம்மிடம் வராது, நமது தெளிவின்மையே நம்மை திரும்பத் திரும்ப ஏமாற்றங்களை நோக்கித் தள்ளுகிறது என்கிறார். இதை நான் அசோகமித்திரன் கருத்தாக அல்ல, கதைசொல்லியின் பார்வையாகவே கொள்கிறேன். இதுவே இந்நாவலின் மையப்பார்வையாகவும் உள்ளது. இதை மேலும் விளக்குவது அவசியம்.

(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...