![]() |
| காயத்தினால் வெளியேறும் ஹர்த்திக் பாண்டியா |
முன்பு எப்போதும் இவ்வளவு காயங்கள் இந்திய அணியை சீர்குலைத்துள்ளதாகத் தோன்றவில்லை - பந்து வீச்சில் ஷமி, பும்ரா காயத்துக்குப் பிறகு ஆட வந்துள்ளார்கள்; புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக கடந்த சில வருடங்களாகவே அணியில் அரிதாகத் தான் தென்படுகிறார். தீபக் சஹாரும் ஒரு நல்ல துவக்கத்துக்குப் பிறகு காயத்தினால் காணாமல் போய் விட்டார். அதன் பிறகு ரோஹித் ஷர்மா உடல்நிலை குறைபாடு காரணமாய் அடிக்கடி ஓய்வு அளிக்கப்பட்டு இன்றைய ஆட்டத்தில் மீண்டும் காயப்பட்டிருக்கிறார். தவனும் காயத்தினால் ஏற்பட்ட இடைவேளைக்குப் பிறகு ஆட வந்து மெல்ல மெல்ல நல்ல ஆட்டநிலையை எட்டி வருகிறார். ஆனால் அவரும் இன்று காயப்பட்டிருக்கிறார். அதே போல காயப்பட்டியலில் வேகவீச்சாளர் சயினியும் வேறு சேர்ந்திருக்கிறார்.
ஆல்ரவுண்டரான ஹர்த்திக் பாண்டியா முதுகுக்காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து இப்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வளவு உள்ளே-வெளியேக்களுக்குப் பிறகு அணியில் ஒரு நிலையற்ற தன்மை வந்து விட்டது. விராத் கோலி சும்மாவே அணி வீரர்களை மாற்றுவார். இப்போது அவர் இங்கி-பாங்கி போட்டு கன்னாபின்னாவென மாற்றுகிறார். கொஞ்ச நாள் குல்தீப்பும் சாஹலும் இணைந்து பந்து வீசி ஆட்டங்களை நமக்கு வென்றளித்தார்கள் என்றால் பாண்டியாவின் காயம் காரணமாக ஏற்பட்ட தடுமாற்றத்தை இன்றும் இந்திய அணியில் உணர முடிகிறது. அவரிடத்து வேறு நல்ல ஆல்ரவுண்டர் சரியாக அமையாத காரணத்தால் ஜடேஜாவை தொடர்ந்து ஆட வைக்கிறார் கோலி. இரண்டு கால்சுழலர்களில் சாஹலையும் குல்தீப்பையும் மாற்றி மாற்றி ஆட வைக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா நன்றாகப் பந்து வீசினார் என்றாலும் ஆல்ரவுண்டராக அவர் நிரந்தரத் தீர்வாகத் தோன்றவில்லை.
துவக்க மட்டையாட்டத்திலும் ராகுலும் ரோஹித்தும் இணைந்து ஆடும் வாய்ப்பு தவனின் காயத்தினால் ஏற்பட்டது. அவர்கள் அபாரமாக டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி-20யில் ஆடினார்கள். ஆனால் தவன் திரும்ப வந்த பின் கோலி ராகுலை ஒரு போட்டியில் எண் 3இல் ஆட வைத்து அடுத்த ஆட்டத்தில் எண் 5க்கு அனுப்பினார். அதோடு ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட காயத்தினால் அவரிடத்தில் ராகுல் கீப்பராகும் தேவையும் ஏபட்டது. அதிர்ஷடவசமாக இந்த மாற்றம் நல்ல முடிவுகளைத் தந்தது. ராகுல் எண் 5இல் அபாரமாக ஆடுகிறார். அவரது கீப்பிங்கும் நன்றாக உள்ளது. இப்போது கோலி செய்ய வேண்டியதெல்லாம் மேலும் குழப்பிக் கொள்ளாமல் ராகுலை தொடர்ந்து அந்த எண்ணிலே கீப்பராக ஆடச் செய்வதும் பண்டை பேட்ஸ்மேனாக மட்டுமே நடத்துவதும் தான்.
இந்த மியூசிக்கல் சேர் அணி மாற்றங்களுக்கு இடையில் நிரந்தரமாக இருப்பது (கோலிக்கு அடுத்தபடியாய்) ஆச்சரியமாக கேதார் ஜாதவ் தான். ஆடுகிறாரோ இல்லையோ எப்படியோ 15 பேர் அணியில் இடம்பெற்று விடுகிறார். அஜய் ஜடேஜா சொல்வது போல ஜாதவின் இடம் கேலிக்கூத்தாக மாறி உள்ளது. இன்று அவரை ஆட வைக்க வாய்ப்பிருந்தும் கோலி பாண்டேவைத் தான் கொண்டு வந்தார். எனில் அவர் ஏன் அணியில் இருக்க வேண்டும்? அவரது பந்து வீச்சு மோசமாகி விட்டது. மட்டையாட்டத்திலும் ஆவேசம் இல்லை. ரொம்பவே தடவுகிறார். களத்தடுப்பு சுத்த வேஸ்ட்.வயதும் 35 ஆகி விட்டது. அவர் அணியில் ஒரு திருஷ்டிபொம்மையைப் போல் இருக்கிறார். எல்லாரிடத்தும் இணக்கமாக அன்பாக. ஆனால் அதற்காக அவரை அணியில் வைத்திருப்பது ஒரு அபத்தம்.
ஜாதவின் இடத்தில் கர்நாடக அணியில் ஷ்ரேயாஸ் கோபாலைக் கொண்டு வரலாம். அவர் ஆல்ரவுண்டர். கால்சுழல் வீச்சில் குல்தீப்புக்கு நல்ல இணையாக இருப்பார். நல்ல பேட்ஸ்மேனும் கூட. இளைஞர் என்பதால் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஒரு நல்ல முதலீடாக இருப்பார்.
அடுத்த ஆட்டம் பெங்களூரில். அதுவே இறுதிப்போட்டி. அதில் தோற்றால் இந்தியா இந்த ஆட்டத்தொடரை இழந்து விடும். ஆகையால் அணிசேர்க்கை துல்லியமாக இருக்க வேண்டும். தவனும் ரோஹித்தும் காயத்தில் இருந்து மீள்வார்கள் எனத் தெரிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இதுவே என் அணி:
ரோஹித்
தவன்
கோலி
ஷ்ரேயாஸ் / பாண்டே
ராகுல் (கீப்பர்)
ரிஷப் பண்ட்
ஜடேஜா
குல்தீப்
ஷமி
சயினி
பும்ரா

Comments