யாத்ரி பெண்களிடம் உடல் விழைவை ஆண் நேரடியாகவே வெளிப்படுத்த வேண்டும் எனும் தொனியில் சிலாக்கியமாக மெத்துமெத்தென எழுதிய அந்த பேஸ்புக் பதிவு எத்தனை விதமான பார்வைகளை, மறுப்புகளை, பாராட்டுகளை கடந்த சில நாட்களில் கடந்து வந்திருக்கிறது எனப் பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறது (மனுஷ் கூட அதைப் பற்றி ஒரு கவிதை எழுதி விட்டார்) - இவ்வளவு விவாதிக்க அதில் ஒன்றுமே இல்லை என்று எனக்கு அதை துவக்கத்தில் படித்த போதே தோன்றியது.
ஒரு பெண்ணிடம் கடலை போட நினைக்கும் ஆண் தன் இச்சையை முடிந்த அளவுக்கு மறைக்காமல் இருக்க வேண்டும் இல்லையெனில் பெண்கள் இவர்களை friend zoneக்கு அனுப்பி விடுவார்கள் என நிறைய டேட்டிங் பத்தியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஒருமுறை friend zoneக்கு போய் விட்டால் பிறகு மீள முடியாது. இதில் கலவரத்தை உன்டு பண்ணும் விவகாரம் ஒன்றும் இல்லை. ஆனால் இது இக்கருத்து இவ்வளவு விவாதிக்கப்பட்டதற்கு ஒரு காரணம் யாத்ரி இதை சமூக வலைதள அரட்டைகளில் விடுக்கப்பட்டும் காதல் தூதுகளுக்குப் பொருத்துகிறார் என்பது. அது பலரையும் சீண்டி விட்டது; கிளுகிளுப்பான ஒரு சிந்தனையோட்டத்துக்கு முகாந்திரம் தந்தது.
பேஸ்புக்கில், உதாரணமாக, பெண்களை அடையும் நோக்குடனே பலரும் கணக்கைத் தொடங்குகிறார்கள். அவர்கள் அதிகமாய் எழுதவோ பகிரவோ மாட்டார்கள். இந்த ஸ்லீப்பர் செல்கள் பேஸ்புக்குக்கு வெளியே ஒரு வளமான வலைதொடர்பை உருவாக்கி ஜாலியாக இருப்பார்கள். இன்பாக்ஸை விட்டால் வேறு உலகமே இந்த ஸ்லீப்பர் புலிகளுக்குத் தெரியாது. எந்த தயக்கமும் இன்றி எல்லா பெண்களையும் நள்ளிரவில் கூட “ஹை” போட்டு தொந்தரவு பண்ணுவது, எல்லாரையும் முயற்சி பண்ணிப் பார்ப்பது என மிக மிக தீவிரமாக இருப்பார்கள். கடும் இறுக்கத்தில் இருக்கும் பெண்களில் பலரும் இந்த சமூக வலைதளங்கள் தந்த சுதந்திரத்தால் புதுப்புது உறவுகளை இப்போது பரிசீலிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த வகையான டேட்டிங் என்பது காதலுக்கானது அல்ல. இதில் ஈடுபடுகிறவர்கள் வெகுதெளிவாக இருக்கிறார்கள். இதைத் தான் யாத்ரி சொல்ல வருகிறார் என புரிந்து கொண்டேன். அவர் இதைச் சொன்னதும் இந்த திறந்தநிலை பாலியலை வசதியாக பேச நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்து விட்டது - அவரைத் திட்டியோ பாராட்டியோ மறுத்தோ இந்த பாலியல் பிரளயத்தை கடந்த சில நாட்களாக பரிசீலித்து வருகிறோம்.
சி.எஸ்.கே சொல்வதைப் போல யாத்ரி இந்த விவகாரத்தை ரொம்பவே மிகையாக ரொமாண்டிக்காகப் பார்ப்பதாகவே நினைக்கிறேன் - வெளிப்படையாக செக்ஸ் பற்றி நாம் இன்று பேசலாம், ஆனால் முழுக்க செக்ஸை மட்டுமே முன்வைத்த, எந்த உணர்வுப் பற்றுதலும் இல்லாத one-night standகளுக்கு நம் சமூகம் தயாராகவில்லை என்பதே உண்மை. கள்ள உறவுகளில் கூட நமது ஆட்கள் ஒரு மனச்சாய்வுடனே இருக்கிறார்கள். நமக்கு உடல் மட்டுமே போதாது; உடலுடன் நமக்கு மனரீதியான ஆறுதல்கள், தோள் அணைப்புகள், நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகள் தேவையாக உள்ளன. அதனால் தான் திருமணமானவர்கள் கள்ளக்காதலில் ஈடுபடும் போது அது அம்பலமாகும் போது இரு பெண்கள் ஒரு ஆணுக்காக பொதுவெளியில் அடித்துக் கொள்வதை, பக்கம் பக்கமாய் வசையை எழுதுவது, காணொளிகளில் ஒப்பாரி வைப்பதை எல்லாம் பார்க்கிறோம். பொஸஸிவ்னெஸ் இல்லாமல் டிஷ்யூபேப்பர் போல பாலுறவுகளைக் கையாள நம் சமூகம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை - ஒருவிதமான களங்கமின்மை இன்னமும் நம் மக்களிடம் இருக்கிறது; சமூகவலைதளங்களில் நம்மவர்கள் நாடுவது ஒரு மாற்றுக்கணவனை, மாற்று மனைவியை, மாற்றுக் காதலியை, மாற்றுக்காதலனை; அதிக இடையூறு இல்லாத ஒரு ‘உண்மையான’ உறவை. ஒரு பெண் தன்னிடம் வரும் ஆணுடன் படுக்க விரும்பலாம்; ஆனால் அவன் அவளை “உடலாக” மட்டுமே காண்பதாய்த் தோன்றினால் அவள் காயப்படுவாள். செக்ஸுடன் உணர்வுரீதியான அங்கீகாரத்தை அவள் விரும்புவாள்.
நம்முடைய ஓரிரவு உறவுகள் இப்படி இருக்கையில் நீங்கள் செக்ஸை வெறும் உடல் சம்மந்தமான விசயமாக நம்மூரில் பார்க்க முடியாது என நினைக்கிறேன்.
Comments