6) காதல் எப்போதும் முரண்களுக்குள் வாழ்கிறது - நிதானமாய் கச்சிதமாய் கராறாய் பகுத்தறிவுடன் நேர்த்தியாய் இருப்பவர்களுக்கானது அல்ல காதல். அது ஒரு பொய்யான குமாஸ்தாத்தனமான ஆண்-பெண் உறவை மட்டுமே உருவாக்கும். நீ எனக்குத் தேவையானதைக் கொடு, நான் உனக்குத் தேவையானதை திரும்பத் தருகிறேன் என்பது ஒப்பந்தம், ஒருவித விபச்சாரம். ‘நீ உனக்குத் தேவையானதைக் கேள், ஆனால் நான் அதைத் தர மாட்டேன், எனக்குத் தர ஆசை என்பதாலே தர மாட்டேன், நீ கேட்டு வாங்கிக் கொள்ளேன்’ என சீண்டுவதே காதல். ஒன்றைக் கொடுத்து விட்டால் அங்கு காதல் முடிந்து போகிறது, அதை கொடுத்தும் கொடுக்காமல் மீதம் வைப்பதே காதலை தக்க வைக்கிறது.
ஒன்றை சொல்லி விட்டு அதற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள். அது உங்கள் மீதான நம்பிக்கையை குலைக்கும். ஆனால் ஒன்றை சொல்லி விட்டு அதற்கு மாறாக மற்றொன்றை சொல்லுங்கள். இந்த இரண்டுக்கும் இடையில் ஊசலாடுவதே உங்களுடைய உண்மை எனப் புரிய வையுங்கள். காதலில் செல்லுபடியாகும் ஒரே உண்மை தன் வாலை தானே வளைந்து தின்னும் பாம்பைப் போன்ற உண்மைகளே.
7) நீதி-அநீதி, சரி-தவறு, அரசியல் சரித்தன்மை போன்ற சமாச்சாரங்களுக்கு காதலில் எந்த மதிப்பும் இல்லை என்பது மட்டுமல்ல, இவற்றை எல்லாம் சுமந்து வருகிறவர்களுக்கு காதலில் கதவு உடனேயே மூடி விடும்.
8) முற்போக்கு சிந்தனைக்கு காதலில் இடமில்லை. உ.தா., நீங்கள் ஒரு ஆண் பெண்ணியவாதி, உங்கள் காதலி ஒரு பெண் பெண்ணியவாதி எனில் நீங்கள் பரஸ்பரம் உச்சிமுகர்ந்து பேஸ்புக்கில் பதிவுகள் போடலாம். ஆனால் காதல் அங்கேயே படுத்து உயிரை விட்டு விடும்.
9) ஆனால் உங்களுடைய நன்னெறிகளை காதலிக்கு உணர்த்த தவறாதீர்கள், அந்த நன்னெறிகளுக்கும் உங்கள் உணர்ச்சிகளுக்கும் நேரடி உறவில்லை எனப் புரிய வைத்தபடியே அதைப் பண்ணுங்கள்.
10) உடல் விருப்பமும் விளையாட்டுத்தனமும் சதா மொழியில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உங்கள் காதலியின் வறண்ட உதடுகளைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்றாலும் உன் உதடுகளை கவ்விக் கொள்ளவா என சும்மாவேனும் சொல்லி வையுங்கள்; அல்லது உங்கள் உடல்மொழி அல்லது பார்வை மூலம் அந்த சேதியை கடத்துங்கள். அல்லாவிடில் காதல் சட்டென இறங்கி நட்பாகி விடும். இதை செய்யும் போது, எப்போதுமே இவனுக்கு செக்ஸ் தான் மனத்தில் என்கிற எண்ணம் அவளுக்கு உங்களைப் பற்றி ஏற்படாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பாணியில் எதையாவது வேடிக்கையாக சொல்லிக் கொண்டிருங்கள். உங்களைப் பிடிக்கும் என்றால் அவள் நீங்கள் அடிக்கும் மொக்கை நோக்குக்குக் கூட சிரிப்பாள். (நீங்களும் அவள் விசயத்தில் அப்படித் தான்.) சிரிக்க சிரிக்க காதலில் ஒரு அபார சுதந்திரம் ஏற்படும். நினைத்ததை எல்லாம் அவளிடத்து சொல்லுகிற, தோன்றுகிற போல அவள் உடலை எடுத்துக் கையாளுகிற சுதந்திரம்.
Comments