Skip to main content

நிழல் நிஜமாகிறது



என்னுடன் பணிபுரியும் ஒரு கவிஞரிடம் தொடர்ந்து நாவல் எழுதும் போது ஏற்படும் ஒரு மனக்குழப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். நாவலில் வரும் பாத்திரங்களின் கடுமையான அகப்பிரச்சனைகள், குழப்பங்கள், தவறான முடிவுகள், அதன் அவலங்கள் அவற்றை எழுதும் போது அப்படைப்பாளியைத் தீண்டுவதில்லை. எழுதும் போது ஒரு கண்ணீர் மல்கிய உரையாடலோ பதற்றமாக்கும் விவரணையோ நாவலாசிரியனுக்கு இன்பமான கிளர்ச்சியையே அளிக்கிறது. ஆனால் அன்றைக்கான எழுத்தை முடித்து விட்டு அவன் தன் அன்றாட வாழ்வுக்கு மீளும் போது மனத்தில் ஒரு இருள் வந்து கவிகிறது.


 அந்த இருளுக்கும் அன்றாட வாழ்வுக்கும் சம்மந்தம் இருக்காது. அன்றாட வாழ்வு எளிதாக சுகமாக இருக்கும் போது நீங்கள் ஏதோ கொலைக்களத்தில் இருப்பதைப் போல உணர்வீர்கள். மனம் எழுதி முடித்ததில், அடுத்து எழுதப் போகிறதில் உழன்று கொண்டே இருக்கும். மனதைத் திருப்பும் விதம் பொழுதுபோக்கில் சம்பாஷணைகளில் ஈடுபட்டாலும் அது விட்டுப் போவதில்லை - எரிச்சலாக கோபமாக மாறி உங்களை தொந்தரவு பண்ணியபடி இருக்கும். சில நேரம் இதனாலே நான் அன்றன்றைக்கு எழுதும் பணியை தள்ளிப் போட்டபடியே இருப்பேன்; வாசிப்பது கூட நாவலுக்குள் வருகிற சிக்கல்களை நினைவுபடுத்தும் என்பதால் அதுவும் இதம் தராது. நாவல் எழுத வேண்டிய நேரத்தில் நான் பல்வேறு சின்ன வேலைகளில் என்னை பிஸியாக்கிக் கொள்வேன். சில நேரம் கட்டுரை எழுதுவேன். ஆனால் அன்று தூங்கும் முன் சில வரிகளாவது நாவலில் எழுதித் தானே ஆக வேண்டும், அப்போது மீண்டும் பேய் வந்து தலைக்குள் உட்கார்ந்து கொள்ளும்.

இன்னொரு சிக்கல் தொடர்ந்து எழுதி வரும் போது நாவலில் உள்ள சம்பவங்களும் மனிதர்களும் நிஜமாகவும் அன்றாட வாழ்வில் நம்முடன் இருப்பவர்கள் முக்கியமற்றவர்களாகவும் (பொய் என்றல்ல) தோன்றுவது; இதை வளர விட்டால் நிஜம் நிழலாகும்; நிழல் நிஜமாகும்.

 நாவல் எழுதும் காலத்தில் நான் எந்த எழுத்தாளனுடனும் இருந்து கவனித்ததில்லை; ஆனால் ஜெயமோகன் அக்காலத்தில் மனத்தொந்தரவுக்கு உள்ளாவார் என்றும், நாவல் எழுதி முடித்த பின் ஒவ்வொருமுறை எஸ்.ரா உடல்நலிவுற்று மருத்துவமனியில் சேர்க்கப்படும் அளவுக்கு செல்வார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அண்மையில் தமிழ்நதி பேஸ்புக்கில் நாவல் எழுதுகையில் தான் எதிர்கொள்ளும் மனநெருக்கடிகளைப் பற்றி எழுதி இருந்தார்.

மராத்தான் ஓட்டம் குறித்து முராகாமி எழுதி புத்தகத்தில் (What I Talk about When I Talk about Running) இது நமது அடிமனத்தின் தீவிர உணர்வுகள் மேலெழுந்து வருவதன் நெருக்கடி என்கிறார். மெல்லுணர்வுகளால் ஆன எழுத்தாளனால் தான் எழுதும் மொழிக்கு வெளியே இந்த உணர்வுகளை கையாள முடிவதில்லை என்கிறார். முராகாமி இதற்கு உடற்பயிற்சியை ஒரு தீர்வாக சொல்கிறார் - ஆனால் எனக்கு உடற்பயிற்சி எப்போதும் தற்காலிகத் தீர்வையே தந்துள்ளது


நான் சொல்வதையெல்லாம் கேட்டு விட்டு கவிஞர் தனக்கு ஒரு கவிதையை எழுதி முடிக்கும் போது இப்படியான மனநிலை ஏற்பட்டதுண்டு எனச் சொன்னார். ஆச்சரியமில்லை, கவிதை என்பது ஒரு உன்மத்த நிலையில் எழுதப்படுவது அல்லவா! மொழியில் ஏற்படும் ஒருவித கோர-விபத்து தான் கவிதை. ஒரு சிறந்த கவிதைகளுக்குள் நுழைந்து ரத்தமும் சகதியுமாய் வெளியேறும் கவிஞன் அவ்வளவு மனத் திளைப்புக்குப் பிறகும் இயல்பாக அன்றாட காரியங்களை பார்த்து விட்டு இருப்பதே ஒரு பெரிய சாதனை தான் என்பேன்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...