Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மனுஷ்யபுத்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்





சென்னையில் இருந்து பெங்களூருக்கு வந்த பிறகு நான் அதிகம் மிஸ் பண்ணுவது மனுஷ்யபுத்திரனைத் தான் - முன்பு மாதம் சில முறைகளாவது அவரைப் போய் சந்தித்து பேசிக்கொண்டிருப்பேன். அவர் வீட்டுக்குப்போய் சில நேரம் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். லல்லி அங்கிருந்த போது மதிய உணவு சாப்பிடுவேன். ஆச்சரியமாக அங்கு நான் இலக்கிய வம்பு எதுவும் பேசியதில்லை; கவிதை மற்றும் நாவல் குறித்து தான் அதிகம் நாங்கள் உரையாடியிருப்போம். அரை மணிநேரம் பேசி விட்டு வரும் போது எனக்குள் ஒரு வாரம் எழுதுவதற்கான உத்வேகமும் நம்பிக்கையும் தோன்றியிருக்கும். அரசியல் சமூக விசயங்களை அவருடன் பேசினால் பெரும்பாலும் நான் மாற்றுத்தரப்பைத் தான் எடுப்பேன். ஆனால் அவரிடம் விவாதித்து ஜெயிக்க முடியாது. அதனால் வீட்டுக்கு வந்த பிறகு என் தரப்பை ஒரு கட்டுரையாக எழுதி உயிர்மை அல்லது உயிரோரையில் பிரசுரிப்பேன். 2010-14 வாக்கில் நான் எழுதிய பல கட்டுரைகள் இப்படித் தோன்றியவை தாம். ஒருநாளும் அவர் என் சிந்தனைப்போக்கை மாற்ற முயன்றதில்லை - சு.ராவின் அதே கனவான்-தனம், உரையாடலில் திறந்த மனப்போக்குடன் ஈடுபடும் குணம், எப்போதும் நம்மை மதிப்பிட்டு விடாமல், பாடம் சொல்லித் தர முயலாமல் பேசும் போக்கு மனுஷ்யபுத்திரனிடம் உள்ளது. அதனால் தான் பெங்களூர் வந்த பிறகு மார்ச்சுவரியில் வாழும் அலுப்பு ஏற்படுகிறது - இங்கே பேச்சு என்றால் ஒன்று வம்பு அல்லது தகவல் பரிமாற்றம்; மனுஷைப் போல உரையாலை ஒரு கலையாகப் பயில தெரிந்தவர்கள் இங்கு இல்லை
கடந்த வருடம் மனுஷ்யபுத்திரனுக்கு படைப்புரீதியாக செழிப்பாக காலம் - எழுதிக் குவித்திருக்கிறார்; கட்டுரைகளைக் குறைத்து கவிதைகளில் அதிகம் கவனம் செலுத்தி இருக்கிறார்; பலரையும் பொறாமைப்பட வைக்கும்வைரல்கவிதைகள் எழுதினார். அவரது கவிதையை ஒட்டித் தோன்றிய இலக்கிய, அரசியல் சர்ச்சைகள் நின்றுஎரிந்தன’. எத்தனைக் கட்டுரைகள், விவாதங்கள், அடிதடிகள் பாய்பெஸ்டி கவிதையை ஒட்டி. இதையெல்லாம் பிரபல இதழ்களின் துணையின்றி, பேஸ்புக்கை மட்டும் கொண்டு செய்திருக்கிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு அதிகார பீடம், செல்வாக்கு மையம் எனும் பிம்பம் அவரைச் சுற்றி தோன்றியிருந்தாலும் உண்மையில் அப்படி எந்த அடியாள் பலமும் இல்லாத தனியாள் அவர். சொந்தக் கவிதைகளை வெளியிட ஒரு பதிக்கம் உண்டு என்பதைத் தவிர அவருக்கு எந்த சங்குசக்கரமும் இல்லை. அதைப் புரிந்து கொள்ளாமல் எவ்வளவு அவதூறுகள், துவேஷம், தனிப்பட்ட தாக்குதல்கள் - அரைஜீவனுடன் வேலை செய்து கொண்டிருப்பவருக்கு எந்த எதிர்மறை விமர்சனங்கள் ஒரு பெரிய உத்வேகத்தை கொடுத்து விடுகிறது; எழுந்து அமர்ந்து இன்னும் கூடுதலாக எழுதத் தொடங்குகிறார்.

இவ்வருடமே மனுஷ்யபுத்திரனின் தேர்ந்தெடுத்த 60 காதல் கவிதைகளை நான் ஆங்கிலத்தில் மொழியாக்கிய Kisses at Daybreak நூல் வெளியானது. என்னுடைய வேறெந்த புத்தகமும் இந்தளவுக்கு கவனம் பெற்று நான் கண்டதில்லை. எனக்கு இலவசமாய் கிடைத்த சில பிரதிகள் கல்லூரியில் நடந்த இலக்கிய விழாவின் போதே பரபரப்பாய் விற்றன. புத்தகத்தை வாங்கிப் போனவர்கள் திரும்பத் திரும்பப் படித்ததாய், அதனோடே வாழ்வதாய் சொல்கிறார்கள்; குறிப்பாய் பெண்கள் இப்புத்தகத்தை கொண்டாடுகிறார்கள். இந்த அந்நியச் சூழல், என் வாழ்வில் ஏற்பட்ட துயரங்கள், இங்குள்ள தனிமை, என்னைத் துரத்திய தற்கொலை எண்ணங்கள், பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் அதிகமாய் நான் புழங்க நேர்வது என இந்த நூல் தோன்றியதற்கு பல காரணங்கள். மனுஷ்யபுத்திரன் என் நண்பர் என்பது இறுதிக் காரணம் மட்டுமே. அவரது காதல் கவிதைகளின் உன்மத்தம், பைத்திய வேகம் ஆகியவற்றை நான் என் கண்களில் வழியும் கண்ணீரின் வெம்மை வழியாக மிக அந்தரங்கமாக உணர்ந்த காலத்தில் செய்த மொழியாக்கம் இது. இந்த புத்தகத்தை நான் சென்னையில் இருந்திருந்தால் மொழியாக்கியிருக்க மாட்டேன் எனத் தோன்றுகிறது.
மேலும் இரு விசயங்கள்:
1) தன்னுடைய அந்தரங்கத் தோல்விகளை, ஏமாற்றங்களை உடல் மீது திருப்பி விடும் பழக்கம் அவருக்குண்டு என நினைக்கிறேன் - எப்போதெல்லாம் கசப்புகள் நேர்கின்றனவோ அப்போதெல்லாம் மனுஷின் உடல்நிலையும் சீர்கெட்டு விடும். நான் பெங்களூருக்கு வரும் முன்பே அவரது நீரிழிவு சீராக இல்லை என அறிவேன். அது குறித்து எனக்கு கவலை இருந்தது. அவருடைய மனக்கட்டுப்பாட்டுக்கு உடலை சீராக வைப்பது பெரிய விசயமில்லை. ஆனால் உடலை பழிவாங்கிக் கொண்டே இருந்தார், தன்னையறியாமலே, வேண்டுமென்றே. அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அவர் இருந்த போது எனக்கு இதனாலே மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. கடுமையாகப் போராடி மீண்டு வந்து விட்டார். இனிமேல் இப்படியான ஒரு நிலை அவருக்கு ஏற்படக் கூடாது.
2) அவரைச் சுற்றி இன்னும் நிறைய பேர் எப்போதும் இருந்துகொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதே போல் வரும் சட்டமன்றத் தேர்தலுடன் அவரது அரசியல் வாழ்க்கையிலும் பெரிய மாற்றமும் ஏற்றமும் நிகழ வேண்டும். கலகலப்பான மலர்ச்சியான ஒரு சூழலுக்கு அவர் மீள வேண்டும்; மீள்வார் என என் உள்ளுணர்வு சொல்கிறது. நாளை நமதே!

கவிஞருக்கு என் பேரன்பும் வாழ்த்துக்களும்!

  

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...