சென்னையில் இருந்து பெங்களூருக்கு வந்த பிறகு நான் அதிகம் மிஸ் பண்ணுவது மனுஷ்யபுத்திரனைத் தான் - முன்பு மாதம் சில முறைகளாவது அவரைப் போய் சந்தித்து பேசிக்கொண்டிருப்பேன். அவர் வீட்டுக்குப்போய் சில நேரம் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். லல்லி அங்கிருந்த போது மதிய உணவு சாப்பிடுவேன். ஆச்சரியமாக அங்கு நான் இலக்கிய வம்பு எதுவும் பேசியதில்லை; கவிதை மற்றும் நாவல் குறித்து தான் அதிகம் நாங்கள் உரையாடியிருப்போம். அரை மணிநேரம் பேசி விட்டு வரும் போது எனக்குள் ஒரு வாரம் எழுதுவதற்கான உத்வேகமும் நம்பிக்கையும் தோன்றியிருக்கும். அரசியல் சமூக விசயங்களை அவருடன் பேசினால் பெரும்பாலும் நான் மாற்றுத்தரப்பைத் தான் எடுப்பேன். ஆனால் அவரிடம் விவாதித்து ஜெயிக்க முடியாது. அதனால் வீட்டுக்கு வந்த பிறகு என் தரப்பை ஒரு கட்டுரையாக எழுதி உயிர்மை அல்லது உயிரோரையில் பிரசுரிப்பேன். 2010-14 வாக்கில் நான் எழுதிய பல கட்டுரைகள் இப்படித் தோன்றியவை தாம். ஒருநாளும் அவர் என் சிந்தனைப்போக்கை மாற்ற முயன்றதில்லை - சு.ராவின் அதே கனவான்-தனம், உரையாடலில் திறந்த மனப்போக்குடன் ஈடுபடும் குணம், எப்போதும் நம்மை மதிப்பிட்டு விடாமல், பாடம் சொல்லித் தர முயலாமல் பேசும் போக்கு மனுஷ்யபுத்திரனிடம் உள்ளது. அதனால் தான் பெங்களூர் வந்த பிறகு மார்ச்சுவரியில் வாழும் அலுப்பு ஏற்படுகிறது - இங்கே பேச்சு என்றால் ஒன்று வம்பு அல்லது தகவல் பரிமாற்றம்; மனுஷைப் போல உரையாலை ஒரு கலையாகப் பயில தெரிந்தவர்கள் இங்கு இல்லை.
கடந்த வருடம் மனுஷ்யபுத்திரனுக்கு படைப்புரீதியாக செழிப்பாக காலம் - எழுதிக் குவித்திருக்கிறார்; கட்டுரைகளைக் குறைத்து கவிதைகளில் அதிகம் கவனம் செலுத்தி இருக்கிறார்; பலரையும் பொறாமைப்பட வைக்கும் ‘வைரல்’ கவிதைகள் எழுதினார். அவரது கவிதையை ஒட்டித் தோன்றிய இலக்கிய, அரசியல் சர்ச்சைகள் நின்று ‘எரிந்தன’. எத்தனைக் கட்டுரைகள், விவாதங்கள், அடிதடிகள் பாய்பெஸ்டி கவிதையை ஒட்டி. இதையெல்லாம் பிரபல இதழ்களின் துணையின்றி, பேஸ்புக்கை மட்டும் கொண்டு செய்திருக்கிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு அதிகார பீடம், செல்வாக்கு மையம் எனும் பிம்பம் அவரைச் சுற்றி தோன்றியிருந்தாலும் உண்மையில் அப்படி எந்த அடியாள் பலமும் இல்லாத தனியாள் அவர். சொந்தக் கவிதைகளை வெளியிட ஒரு பதிக்கம் உண்டு என்பதைத் தவிர அவருக்கு எந்த சங்குசக்கரமும் இல்லை. அதைப் புரிந்து கொள்ளாமல் எவ்வளவு அவதூறுகள், துவேஷம், தனிப்பட்ட தாக்குதல்கள் - அரைஜீவனுடன் வேலை செய்து கொண்டிருப்பவருக்கு எந்த எதிர்மறை விமர்சனங்கள் ஒரு பெரிய உத்வேகத்தை கொடுத்து விடுகிறது; எழுந்து அமர்ந்து இன்னும் கூடுதலாக எழுதத் தொடங்குகிறார்.
இவ்வருடமே மனுஷ்யபுத்திரனின் தேர்ந்தெடுத்த 60 காதல் கவிதைகளை நான் ஆங்கிலத்தில் மொழியாக்கிய Kisses at Daybreak நூல் வெளியானது. என்னுடைய வேறெந்த புத்தகமும் இந்தளவுக்கு கவனம் பெற்று நான் கண்டதில்லை. எனக்கு இலவசமாய் கிடைத்த சில பிரதிகள் கல்லூரியில் நடந்த இலக்கிய விழாவின் போதே பரபரப்பாய் விற்றன. புத்தகத்தை வாங்கிப் போனவர்கள் திரும்பத் திரும்பப் படித்ததாய், அதனோடே வாழ்வதாய் சொல்கிறார்கள்; குறிப்பாய் பெண்கள் இப்புத்தகத்தை கொண்டாடுகிறார்கள். இந்த அந்நியச் சூழல், என் வாழ்வில் ஏற்பட்ட துயரங்கள், இங்குள்ள தனிமை, என்னைத் துரத்திய தற்கொலை எண்ணங்கள், பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் அதிகமாய் நான் புழங்க நேர்வது என இந்த நூல் தோன்றியதற்கு பல காரணங்கள். மனுஷ்யபுத்திரன் என் நண்பர் என்பது இறுதிக் காரணம் மட்டுமே. அவரது காதல் கவிதைகளின் உன்மத்தம், பைத்திய வேகம் ஆகியவற்றை நான் என் கண்களில் வழியும் கண்ணீரின் வெம்மை வழியாக மிக அந்தரங்கமாக உணர்ந்த காலத்தில் செய்த மொழியாக்கம் இது. இந்த புத்தகத்தை நான் சென்னையில் இருந்திருந்தால் மொழியாக்கியிருக்க மாட்டேன் எனத் தோன்றுகிறது.
மேலும் இரு விசயங்கள்:
1) தன்னுடைய அந்தரங்கத் தோல்விகளை, ஏமாற்றங்களை உடல் மீது திருப்பி விடும் பழக்கம் அவருக்குண்டு என நினைக்கிறேன் - எப்போதெல்லாம் கசப்புகள் நேர்கின்றனவோ அப்போதெல்லாம் மனுஷின் உடல்நிலையும் சீர்கெட்டு விடும். நான் பெங்களூருக்கு வரும் முன்பே அவரது நீரிழிவு சீராக இல்லை என அறிவேன். அது குறித்து எனக்கு கவலை இருந்தது. அவருடைய மனக்கட்டுப்பாட்டுக்கு உடலை சீராக வைப்பது பெரிய விசயமில்லை. ஆனால் உடலை பழிவாங்கிக் கொண்டே இருந்தார், தன்னையறியாமலே, வேண்டுமென்றே. அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அவர் இருந்த போது எனக்கு இதனாலே மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. கடுமையாகப் போராடி மீண்டு வந்து விட்டார். இனிமேல் இப்படியான ஒரு நிலை அவருக்கு ஏற்படக் கூடாது.
2) அவரைச் சுற்றி இன்னும் நிறைய பேர் எப்போதும் இருந்துகொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதே போல் வரும் சட்டமன்றத் தேர்தலுடன் அவரது அரசியல் வாழ்க்கையிலும் பெரிய மாற்றமும் ஏற்றமும் நிகழ வேண்டும். கலகலப்பான மலர்ச்சியான ஒரு சூழலுக்கு அவர் மீள வேண்டும்; மீள்வார் என என் உள்ளுணர்வு சொல்கிறது. நாளை நமதே!
கவிஞருக்கு என் பேரன்பும் வாழ்த்துக்களும்!

Comments