தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய்க்கு அடுத்ததாய் அரவிந்த் கேஜ்ரிவாலின் குடுமியும் பாஜகவின் கைகளில் இப்போது. அவர் பிரதமரை சந்தித்த பிறகு பேசுகிற குழைவாக விதத்தைப் பார்த்தால் கம்பளிப்பூச்சி ஊர்கிற உணர்வு ஏற்படுகிறது. இந்த மனிதர் அண்மையில் மாநிலக் தேர்தலில் வென்றதற்காக இத்தனை பேர் கொண்டாடினார்கள்? ஒரு கம்பளிப்பூச்சியையா வீரரென கொண்டாடினீர்கள்?
வரும் காலங்களில் மைய அரசு விசாரணை அமைப்புகள், பெண்கள் உள்ளிட்ட தனிமனிதர்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது போலிக்குற்றச்சாட்டுகளை புனைவதை தடை செய்வதுடன் இப்படி சோரம் போகிற அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இப்படியான நிலை எதிர்காலத்தில் இன்னும் மோசமான பாசிசமாக உருவாகாமல் இருக்க ஒரு வழி நமது அரசியலமைப்பில் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவது:
1) ராணுவம், தில்லி காவல்துறை, சி.பி.ஐ, புலனாய்வுத் துறை போன்றவற்றை மைய அரசின் நேரடிப் பொறுப்பில் இருந்து விடுவித்து அரசுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளதற்காக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட சில உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசு மீது கடும் விமர்சனம் கொண்ட போராளிகள், அறிவுஜீவுகள், மற்றும் எதிர்க்கட்சி தலைமை ஆகியோரால் உருவான ஒரு குழுவின் கீழ் இந்த அமைப்புகள் கொண்டு வரப்பட வேண்டும். இதன் மூலம் எவ்வளவு பெரும்பான்மை இருந்தாலும் அரசு என்பது சர்வாதிகாரம் இல்லாத ஒரு நிர்வாக அமைப்பாக மாற்றப்பட வேண்டும். ஆனால் இந்த குழுவும் எந்த ஒரு அதிரடி முடிவை எடுக்கும் முன்னரும் மைய அரசுக்கு ஆதரவான குறிப்பிட்ட சில மாநிலங்களில் கருத்துக்கணிப்பு நடத்தி 90% ஒப்புதலை பெற வேண்டும்.
2) அதே போல பாராளுமன்றத்தில் எந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பும் அம்முடிவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாநிலங்கள் அனைத்திலும் உள்ள 90% மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி அவர்களின் அனுமதி பெற்ற பிறகே அதை நிலுவைக்கு கொண்டு வர அரசால் முடிய வேண்டும். அதாவது காஷ்மீரின் தலைவிதியை மாற்றும் ஒரு சட்டத்தைக் கொண்டு வர நீங்கள் முதலில் அம்மாநிலத்து மக்களில் 90% பேரின் அனுமதி பெற வேண்டும்.
3) ஒரு மாநிலத்தில் எமெர்ஜன்ஸியைக் கொண்டு வர, ஆட்சியைக் கலைக்கவும் கருத்தும் கணிப்பு நடத்தப்பட வேண்டும்.
4) ஒற்றைத் தேர்தல் மூலம் நாட்டின் தலைவிதியை ஒரு கட்சியிடம் ஒப்புக் கொடுக்கும் அபத்தமான முறையையும் மாற்ற வேண்டும். அதற்கு மாற்றாக இதை செய்யலாம்: ஒரு கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் எங்கெல்லாம் அந்த ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடக்கிறதோ அந்த மாநிலங்களில் மட்டுமே கருத்துக்கணிப்பு நடத்தி ஆட்சியை மதிப்பிடக் கேட்க வேண்டும். அதற்கு ஏற்ப புள்ளிகள் தொகுக்கப்பட வேண்டும். இப்புள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் சேர்ந்து கொண்டே வரும். முதல் சில ஆண்டுகளில் மிகக்குறைவாக புள்ளிகளைப் பெறும் கட்சி அடுத்த கால் நூற்றாண்டுக்கு நாடெங்கும் தடை செய்யப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் அரைநூற்றாண்டுக்கு எந்த கட்சியிலும் செயல்பட முடியாத படிக்கு தடை செய்யப்பட வேண்டும். அவர்களின் ஆட்சியும் கலைக்கப்பட்டு அடுத்து தேர்தல் நடத்தத்தப்பட வேண்டும். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் காஷ்மீரிலும், வடகிழக்கிலும், தமிழகம், கேரளாவிலும் குறைவான புள்ளிகளை இவ்வாறு வாங்கும் அரசு தேர்தலின் போது அதிகபட்ச ஓட்டுகள் பெற்று நிறைய இடங்களை வென்றாலும் அதனால் அடுத்து ஆட்சி அமைக்க முடியக் கூடாது. வடக்கு இந்தியாவை மட்டுமே ஆதரிக்கிற, தெற்கையும் விளிம்புநிலை மாநிலங்களையும் ஒடுக்குகிற ஆட்சியை எந்த மத்திய அரசும் நடத்த முடியாமல் போகும். மத்தியில் ஆள்கிறவர்கள் எல்லா மாநிலங்களுக்கும், எல்லா தரப்பு மக்களுக்கும் சாதகமானவர்களாகவே இருந்தாக வேண்டும். தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு வரை மக்கள் விரோத நடவடிக்கைகளை ஒரு அரசு எடுத்து விட்டு, தேர்தலுக்கு சற்று முன்பு பாகிஸ்தானுடன் ஒரு போரைக் கொண்டு வந்து மக்களின் மனநிலையை சாதமாக தம் பால் திருப்பவும் முடியாது (ராணுவம் தாம் அவர்களின் கையில் இருக்காதே).
இவ்வளவு தடையரண்களை வைத்தால் அரசு செயல்படாமல் போய் விடுமே என நீங்கள் கேட்கலாம் - ஒரு பாசிச அரசு தோன்றி தெருவில் திரளும் மக்களின் மாரில் குண்டைப் பாய்ச்சுவதை விட, நூலகத்துள் நுழைந்து மாணவர்களின் தலைகளை லத்தியால் உடைப்பதை விட, பணமதிப்பிழப்பு சட்டத்தை இரவோடு இரவாக கொண்டு வந்து மக்களை பிச்சைக்காரர்கள் ஆகுவதைக் காட்டிலும் வெறுமனே நிர்வாகத்தை மட்டும் கவனிக்கிற ஒரு அரசு மேலானது.
பாஜகவை தோற்கடிப்பதால் நாளை பாசிசம் முழுமையாக அழியாது என இன்று பலரும் பேசி வருகிறார்கள். இது உண்மை. கேஜ்ரிவாலின் அரசியல், இன்று காங்கிரஸ் கட்சி இந்துத்துவாவை மென்மையாக கையாள்கிற பாணி இதற்கு ஒரு உதாரணம். இந்த அரசு ஏற்படுத்தி உள்ள பாசிச பாதிப்பானது பல பத்தாண்டுகள் இங்கு சலனங்களை விட்டுச் செல்லும். நமது அரசியல் சட்ட அமைப்பை மாற்றி அமைத்து, எதிர்காலத்தில் ஆளும் மைய அரசுகளை நிர்வாக அரசுகளாக மட்டுமே “பலவீனப்படுத்தி” வைப்பதே மக்களுக்கு பாதுகாப்பைத் தரும்.

Comments