Skip to main content

பாசிசத்தை எதிர்கொள்ள சிறந்த வழி



தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய்க்கு அடுத்ததாய் அரவிந்த் கேஜ்ரிவாலின் குடுமியும் பாஜகவின் கைகளில் இப்போது. அவர் பிரதமரை சந்தித்த பிறகு பேசுகிற குழைவாக விதத்தைப் பார்த்தால் கம்பளிப்பூச்சி ஊர்கிற உணர்வு ஏற்படுகிறது. இந்த மனிதர் அண்மையில் மாநிலக் தேர்தலில் வென்றதற்காக இத்தனை பேர் கொண்டாடினார்கள்? ஒரு கம்பளிப்பூச்சியையா வீரரென கொண்டாடினீர்கள்

வரும் காலங்களில் மைய அரசு விசாரணை அமைப்புகள், பெண்கள் உள்ளிட்ட தனிமனிதர்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது போலிக்குற்றச்சாட்டுகளை புனைவதை தடை செய்வதுடன் இப்படி சோரம் போகிற அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்இப்படியான நிலை எதிர்காலத்தில் இன்னும் மோசமான பாசிசமாக உருவாகாமல் இருக்க ஒரு வழி நமது அரசியலமைப்பில் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவது:
1) ராணுவம், தில்லி காவல்துறை, சி.பி., புலனாய்வுத் துறை போன்றவற்றை மைய அரசின் நேரடிப் பொறுப்பில் இருந்து விடுவித்து அரசுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளதற்காக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட சில உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசு மீது கடும் விமர்சனம் கொண்ட போராளிகள், அறிவுஜீவுகள், மற்றும் எதிர்க்கட்சி தலைமை ஆகியோரால் உருவான ஒரு குழுவின் கீழ் இந்த அமைப்புகள் கொண்டு வரப்பட வேண்டும். இதன் மூலம் எவ்வளவு பெரும்பான்மை இருந்தாலும் அரசு என்பது சர்வாதிகாரம் இல்லாத ஒரு நிர்வாக அமைப்பாக மாற்றப்பட வேண்டும். ஆனால் இந்த குழுவும் எந்த ஒரு அதிரடி முடிவை எடுக்கும் முன்னரும் மைய அரசுக்கு ஆதரவான குறிப்பிட்ட சில மாநிலங்களில் கருத்துக்கணிப்பு நடத்தி 90% ஒப்புதலை பெற வேண்டும்
2) அதே போல பாராளுமன்றத்தில் எந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பும் அம்முடிவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாநிலங்கள் அனைத்திலும் உள்ள 90% மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி அவர்களின் அனுமதி பெற்ற பிறகே அதை நிலுவைக்கு கொண்டு வர அரசால் முடிய வேண்டும். அதாவது காஷ்மீரின் தலைவிதியை மாற்றும் ஒரு சட்டத்தைக் கொண்டு வர நீங்கள் முதலில் அம்மாநிலத்து மக்களில் 90% பேரின் அனுமதி பெற வேண்டும்
3) ஒரு மாநிலத்தில் எமெர்ஜன்ஸியைக் கொண்டு வர, ஆட்சியைக் கலைக்கவும் கருத்தும் கணிப்பு நடத்தப்பட வேண்டும்.
4) ஒற்றைத் தேர்தல் மூலம் நாட்டின் தலைவிதியை ஒரு கட்சியிடம் ஒப்புக் கொடுக்கும் அபத்தமான முறையையும் மாற்ற வேண்டும். அதற்கு மாற்றாக இதை செய்யலாம்: ஒரு கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் எங்கெல்லாம் அந்த ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடக்கிறதோ அந்த மாநிலங்களில் மட்டுமே கருத்துக்கணிப்பு நடத்தி ஆட்சியை மதிப்பிடக் கேட்க வேண்டும். அதற்கு ஏற்ப புள்ளிகள் தொகுக்கப்பட வேண்டும். இப்புள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் சேர்ந்து கொண்டே வரும். முதல் சில ஆண்டுகளில் மிகக்குறைவாக புள்ளிகளைப் பெறும் கட்சி அடுத்த கால் நூற்றாண்டுக்கு நாடெங்கும் தடை செய்யப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் அரைநூற்றாண்டுக்கு எந்த கட்சியிலும் செயல்பட முடியாத படிக்கு தடை செய்யப்பட வேண்டும். அவர்களின் ஆட்சியும் கலைக்கப்பட்டு அடுத்து தேர்தல் நடத்தத்தப்பட வேண்டும். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் காஷ்மீரிலும், வடகிழக்கிலும், தமிழகம், கேரளாவிலும் குறைவான புள்ளிகளை இவ்வாறு வாங்கும் அரசு தேர்தலின் போது அதிகபட்ச ஓட்டுகள் பெற்று நிறைய இடங்களை வென்றாலும் அதனால் அடுத்து ஆட்சி அமைக்க முடியக் கூடாது. வடக்கு இந்தியாவை மட்டுமே ஆதரிக்கிற, தெற்கையும் விளிம்புநிலை மாநிலங்களையும் ஒடுக்குகிற ஆட்சியை எந்த மத்திய அரசும் நடத்த முடியாமல் போகும். மத்தியில் ஆள்கிறவர்கள் எல்லா மாநிலங்களுக்கும், எல்லா தரப்பு மக்களுக்கும் சாதகமானவர்களாகவே இருந்தாக வேண்டும்தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு வரை மக்கள் விரோத நடவடிக்கைகளை ஒரு அரசு எடுத்து விட்டு, தேர்தலுக்கு சற்று முன்பு பாகிஸ்தானுடன் ஒரு போரைக் கொண்டு வந்து மக்களின் மனநிலையை சாதமாக தம் பால் திருப்பவும் முடியாது (ராணுவம் தாம் அவர்களின் கையில் இருக்காதே). 

இவ்வளவு தடையரண்களை வைத்தால் அரசு செயல்படாமல் போய் விடுமே என நீங்கள் கேட்கலாம் - ஒரு பாசிச அரசு தோன்றி தெருவில் திரளும் மக்களின் மாரில் குண்டைப் பாய்ச்சுவதை விட, நூலகத்துள் நுழைந்து மாணவர்களின் தலைகளை லத்தியால் உடைப்பதை விட, பணமதிப்பிழப்பு சட்டத்தை இரவோடு இரவாக கொண்டு வந்து மக்களை பிச்சைக்காரர்கள் ஆகுவதைக் காட்டிலும் வெறுமனே நிர்வாகத்தை மட்டும் கவனிக்கிற ஒரு அரசு மேலானது.

  பாஜகவை தோற்கடிப்பதால் நாளை பாசிசம் முழுமையாக அழியாது என இன்று பலரும் பேசி வருகிறார்கள். இது உண்மை. கேஜ்ரிவாலின் அரசியல், இன்று காங்கிரஸ் கட்சி இந்துத்துவாவை மென்மையாக கையாள்கிற பாணி இதற்கு ஒரு உதாரணம். இந்த அரசு ஏற்படுத்தி உள்ள பாசிச பாதிப்பானது பல பத்தாண்டுகள் இங்கு சலனங்களை விட்டுச் செல்லும். நமது அரசியல் சட்ட அமைப்பை மாற்றி அமைத்து, எதிர்காலத்தில் ஆளும் மைய அரசுகளை நிர்வாக அரசுகளாக மட்டுமேபலவீனப்படுத்திவைப்பதே மக்களுக்கு பாதுகாப்பைத் தரும்.   

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...