![]() |
| டிராகுலாவைப் பார்க்க வந்த விமர்சகர் |
விஷ்ணுபுரம் வட்ட எழுத்தாளர்களின் இரண்டு பொதுக்குணங்கள்:
1) மொழியில் மட்டுமல்ல கருத்துக்களில் கூட ஜெயமோகனை பிரதியெடுப்பார்கள். ஆனால் பேசும் போது தனித்துவமான ஆளுமை கொண்டிருப்பார்கள். எழுதும் போது தான் ஆசானின் ஆவி இறங்கி விடும் விசித்திரமான பிரச்சனை. இந்த வட்டமெல்லாம் ஆரம்பிக்கும் முன்னர், சுமார் 18 வருடங்களுக்கு முன்பு, தீராநதியில் ஒரு விமர்சனக் கட்டுரை படித்து விட்டு ஜெயமோகனிடம் “நீங்க புனைப்பெயரில் எழுதின அந்த கட்டுரை நல்லா இருந்துச்சு” என்றேன். உடனே அவர் சிரித்தபடி “எனக்கு புனைப்பெயரெல்லாம் இல்ல. அவர் என்னோட தீவிர வாசகரான ஒரு இளம் எழுத்தாளர்” என்றார்.
2) எந்த இலக்கிய விமர்சனம் என்றாலும் படைப்பாளியும் எழுத்தாளனும் ஒன்றே என நம்புவார்கள்.
அதாவது படைப்பில் வெளிப்படுவது எழுத்தாளனின் சொந்த அபிப்ராயம், சொந்த வாழ்க்கை அனுபவத்தில் உண்டான நிலைப்பாடு எனக் கூறுவார்கள். உலக அளவில் விமர்சனத்தில் இந்த வாழ்க்கை சரிதப் பார்வை பின்னடைவு பெற்று சுமார் 100 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் ஆசான் நீண்ட காலமாக, ஒரு பக்கம் எழுத்தாளன் தன் தனிப்பட்ட அனுபவங்களை கற்பனையினால் கடந்து செல்ல வேண்டும் எனச் சொல்லியபடியே முரணாக தன் இலக்கிய விமர்சனங்களில் ஒருவரது படைப்பைக் கொண்டு அவரது வாழ்க்கையை கட்டமைக்கும் வேலையை செய்து வருகிறார். உ.தா., சுந்தர ராமசாமியின் படைப்புலகைப் பற்றிப் பேசும் போது அதில் முழுக்க முழுக்க சு.ராவின் சொந்த நம்பிக்கைகளே வெளிப்படுகின்றன என ஆசான் சொல்கிறார். “நினைவின் நதியில்” படித்தீர்கள் என்றால் முதல் பாதியில் சு.ராவின் ஆளுமையை சொந்த வாழ்க்கை சித்திரங்கள் மூலம் நிறுவி விட்டு அதில் இருந்து எப்படி அவரது புனைவுலகு தோன்றுகிறது என ஆசான் நிரூபிக்க முயல்வதைப் பார்க்கலாம். ஆனால் இது உண்மை இல்லை. பல சமயங்களில் நாம் எழுதுவதற்கும் நம்புவதற்கும் தொடர்பிருக்காது. நம்மை மீறி முரண்பட்டு நாம் இயங்குவதே புனைவெழுத்து. அப்போதே அது ரசனைக்குரியதாகிறது. அசோகமித்திரன் இதற்கு நல்ல உதாரணம் - அவரது அரசியல் சமூகக் கருத்துக்கள் பிற்போக்கானவை. ஆனால் அவரது புனைவெழுத்தில் அந்த சிறுமையின் நிழல் கூட இராது. அதனால் தான் எழுத்தாளனின் எண்ணங்களும் படைப்புக் குரலும் வேறுவேறு எனும் நம்பிக்கை இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே பரவலாகியது. இதன் பிரசித்தமான உதாரணமே “படைப்பாளி இறந்து விட்டான்” எனும் ரொலாண்ட் பார்த்தின் கூற்று. படைப்பாளி இறக்கும் போது அவன் தன் நம்பிக்கைகளை உடைத்துக் கொண்டு மற்றமையின் கண்ணோட்டத்தில் இருந்து உலகை சித்தரிக்கிறான் (படைப்பாளி நிஜமாகவே சாவதில்லை).
ஆனால் இதில் ஒரு பிரச்சனை உண்டு - படைப்பு பல முரண்பட்ட குரல்களில் உங்களிடம் பேசும் போது நீங்கள் அதைத் தொகுக்க முடியாமல் திகைக்கிறீர்கள். குழம்புகிறீர்கள். அப்போது பலவீனமான வாசகர்கள் ‘சுயபாதுகாப்புக்காக’ அந்த குரல்களில் ஒன்றை எழுத்தாளனின் குரலாக நினைத்துக் கொள்வார்கள் (ரசிகர்கள் எம்.ஜி.ஆரை அவர் நடித்த கதாபாத்திரமாகவே நம்பி திரையை நோக்கி கத்தியை வீசியதைப் போல). பின்னர் அக்கதை எழுத்தாளனின் சொந்தக் கதை என விரித்துக் கொள்வார்கள். இப்போது படைப்பாளிக்குப் பதில், படைப்பும் வாசகனும் செத்துப் போகிறார்கள். ஆசான் தனது சுவிசேஷக் கூட்டங்களில் தொடர்ந்து இந்த தவறான பார்வையை போதிக்கிறார் - நேரடியாக அல்ல, மறைமுகமாக. கவனித்தீர்கள் என்றால் அவர் எப்போதும் விமர்சன உரைகளில் ஒரு எழுத்தாளனின் ஆளுமையைப் பற்றிப் பேசி விட்டே அவனது எழுத்துக்கு செல்வார். இந்த டிரெண்ட் அப்படியே அவரது வாசக-எழுத்தாளர்களுக்கும் தொற்றிக் கொண்டது. அவர்கள் தம்மை அறியாமலே அப்படித் தான் விமர்சிக்கிறார்கள்.
உ.தா. “டிராகுலா” நாவலைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை எழுதியவர் அபிரகாம் ஸ்டோக்கர். நம்முடைய வட்டத்தினர் “டிராகுலாவை” விமர்சிப்பதானால் ஸ்டோக்கரை மேடையில் அமர வைத்து எப்படி அவர் சின்ன வயதில் இருந்தே ஒரு டிராகுலாவதற்கான இயல்புகளைக் கொண்டிருந்தார் எனப் பேசிப் பேசி ஒரு கட்டத்தில் ஸ்டோக்கரையே கதறக் கதற தான் “நான் டிராகுலா தான்” என வாக்குமூலம் தர வைத்து விடுவார்கள். நம்முடைய போலீஸ்காரர்கள் சந்தேகத்துக்குரிய நபர்களை குற்றவாளிகளாக ஏற்க வைக்கும் அதே டெக்னீக்கை எழுத்தாளர்கள் விசயத்திலும் இவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதே துயரம்.

Comments