நிர்மலா சீத்தாராமனிடம் இருந்து நிதித்துறை விரைவில் பிடுங்கப்படும் என சொல்கிறார்கள். அடுத்த நிதியமைச்சரும் (கெ.வி காமத்) ஒன்றும் பொருளாதார அறிஞரோ உலகளவில் பெயர் பெற்ற நிபுணரோ அல்ல. மோடிக்கு தன் பேச்சைக் கேட்டு வேலை செய்யும் கிளிப்பிள்ளைகளைத் தான் பிடிக்கிறது; தனக்கு ஆலோசனை கூறும் நிபுணர்களை அல்ல. நிபுணர்களிடத்து அவர் பாதுகாப்பற்று உணர்கிறார் என நினைக்கிறேன்.
நிர்மலா சீத்தாராமனின் குளறுபடிகளை நான் மோடியின் குளறுபடிகளாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு திட்டமும், முடிவும் பிரதமர் ஜியுடையதே. நிம்மி அதை வழிமொழிந்து ஊடகங்களில் ஓங்கி முழங்கும் ஒரு பொம்மை மட்டுமே. ஆனால் மோடியின் ஆன்மீக ஒளிவட்டம் காரணமாக அவரது நிர்வாகத் தவறுகளுக்கு மக்கள் அவரைப் பொறுப்பாக்குவதில்லை; அவரது அமைச்சர்களே அரணாக நின்று திட்டு வாங்குகிறார்கள்.
அண்மையில் வந்த அறிக்கைகளின் படி இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 3% எனும் மிக மட்டமான இடத்தில் உள்ளது. ஆனால் இதற்கும் ஜி பொறுப்பாக மாட்டார். நிம்மியை பதவி விலகச் செய்து குற்றங்களை அவர் தலையில் சுமத்தி, கங்கையில் மூழ்கி எழுவதைப் போல, ஜி தன்னை பரிசுத்தமாக்கிக் கொள்வார்.
ஜி உயர்ந்த நோக்கங்களுடன் நாட்டை வழிநடத்துகிறவர், மக்கள் ஏழ்மையில், பட்டினியில், வேலை இழப்பால், தொழில் நசிவால் தவிப்பதற்கு அவரது அமைச்சரவை சரிவர அவரது உத்தரவுகளைப் பின்பற்றாததே காரணம் என அவரது பக்தர்கள் சுலபத்தில் நம்பி விடுவார்கள். (அல்லது சங்கிகள் அப்பழியை முந்தைய காங்கிரஸ் அரசின் மீதோ எதிர்க்கட்சிகள் மீதோ சுமத்தி விடுவார்கள்.) இப்போது நிம்மியை பதவி விலக செய்வதுடன் குற்றம் செய்தது தன் அமைச்சரே ஆனாலும் ஜி கடுமையாக தண்டிப்பார் எனும் பிம்பத்தையும் ஏற்படுத்த முடியும். எப்படிப் பார்த்தாலும் இந்த பரிவர்த்தனையிலும் ஜியே லாபம் அடைவார்.
ஜியின் ராசி என்னவென்றால் அவர் தாமரை இலையைப் போன்றவர். எதுவும் அவரிடத்து ஒட்டாது. அவரே டீமானிடைசேஷன், ஜி.எஸ்.டி, லாக் டவுன் என தன் மீது சேறு வாரி அடித்தாலும் அது அடுத்தவர் மீதே படும் ஒழிய அவரை அசிங்கமாக்காது.

Comments