Skip to main content

ஹைடெக்கர் குறிப்புகள் (1)



இன்றைய உரைக்காக இந்த குறிப்புகளை எழுதும் போது எப்போதாவது நான் எழுதி முடிக்கும் ஹைடெக்கர் குறித்த அறிமுக நூலுக்கு ஒரு முன்னுரையாக அமையலாம் எனத் தோன்றியது. இன்று என் பேச்சை கேட்ட நண்பர்கள் இக்குறிப்புகளைப் பகிரக் கேட்டதனால் இங்கு இரு பகுதிகளாக இடுகிறேன்.


முதலில் சில கேள்விகள்:


தத்துவத்தை ஏன் படிக்க வேண்டும்?


அது சிந்திக்க, சிந்தனையை திசைகளைப் புரிந்து கொள்ளக் கற்றுத் தருகிறது.

தத்துவம் என்னை ஏன் ஈர்க்கிறது?

இலக்கியம் தராத கட்டுக்கோப்பான சிந்தனையை தத்துவம் தருகிறது.


அதன் பயன் என்ன?

எதையும் தீவிரமாக ஆழமாக அலச, அதை மொழியில் முன்வைக்க உதவுகிறது. இதை ஏன் இப்படி செய்கிறோம் எனக் கேட்பது உளவியல். இதை ஏன் இப்படி செய்கிறோம் என்பது சமூகவியல். இது ஏன் இப்படி எனக் கேட்பது தத்துவம் - இதுவே ஆக ஆழமான கேள்வி

இன்று எந்த ஒரு சமூகப் பிரச்சனையையும் நாம் தகவல்களால், தீவிர அரசியல் நிலைப்பாடுகளால் அணுகுகிறோம். ஆழமாய் அதனுள் பயணிக்க முடியாமல் ஆகிறது. இதற்குக் காரணம் இன்றைய தலைமுறைக்கு தத்துவப் பரிச்சயம் இல்லாதது (இது தொண்ணூறுகளில் ஓரளவுக்கு இருந்தது. அன்றுதேசியம் ஒரு கற்பிதம்போன்ற வாதங்கள் இருந்தது, இன்று அதை வெறுமனே இந்துத்துவா என ஒற்றை வார்த்தையில் கடந்து செல்கிறோம்.)

 இலக்கிய விவாதங்களையும் அதன் அடிப்படையான தேடலுக்கு சென்று தீவிரமாக விவாதிக்க தத்துவப் பயிற்சி அவசியம். இல்லாவிட்டால் ரசனை, வடிவ அலசல் என நின்று விடுவோம்.


தத்துவத்தை எப்படிப் படிக்க வேண்டும்?


நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து வாசித்து விவாதித்துப் படிக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு விசயங்களிலும் படித்ததை பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.


ஹைடெக்கர் என்பவர் யார்?


மார்ட்டின் ஹைடெக்கர் (1889-1976) இருபதாம் நூற்றாண்டின் தத்துவ அறிஞர்களில் முதல் வரிசையில் வருகிற ஒருவர். அதே சமயம் ஹிட்லரின் யூதவெறுப்பு இனவாத அரசியலுக்கு அவர் அளித்த ஆதரவினால் தொடர்ந்து தூற்றப்பட்டவராகவும் இருக்கிறார். எந்தளவுக்கு என்றால் ஹைடெக்கர் குறித்த எந்தவொரு உரையிலும், உரையாடல்களின் போது ஹிட்லருக்கும் அவர் அளித்ததாக சொல்லப்படுகிற ஆதரவு குறித்து ஒரு கேள்வியாவது எழாமல் இருக்காது. ஆனால் இந்த சர்ச்சை ஹைடெக்கரைப் புரிந்து கொள்ள என்றுமே தடையாக இருப்பதில்லை, ஏனென்றால் அவர் அரசியல், சமூகம் குறித்து அதிகம் விவாதித்தவர் அல்ல. மாறாக இந்த சர்சையை ஒட்டி ஹைடெக்கரைத் தவிர்ப்பது ஒரு வாசகனாக, தத்துவ மாணவனாக நமக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தும்.


ஹைடெக்கரின் தாக்கம் என்ன?


ஹைடெக்கர் தன் சமகாலத்தைய மற்றும் பிற்காலாத்தைய தத்துவவாதிகளான சார்த்தர், பூக்கோ போன்றோரை தீவிரமாக பாதித்தார். .தா., இந்த உலகில் உடலின் இருப்பு எப்படி செயல்படுகிறது என்பதை பூக்கோ இந்த உலகில் உடலின் இருப்பு எப்படி அரச எதேச்சதிகாரத்தின் கண்காணிப்பால் உருமாற்றப்படுகிறது என மாற்றி தன் கருத்தியலை உருவாக்கினார். அதே போல கட்டிடவியல், இலக்கிய விமர்சனம், இறையியல், உளவியல் போன்ற துறைகளிலும் அவரது தத்துவம் தாக்கம் செலுத்தியது.


Comments