ஹைடெக்கரின் வாழ்க்கை:
- 1889இல் மெஸ்கிரிச் எனும் அமைதியான, சம்பிரதாயமான, மதரீதியான நம்பிக்கைகளை வலுவாகக் கொண்ட ஒரு சிறுநகரத்தில் ஹைடெக்கர் பிறந்தார். இந்த ஊர் அவரது பிற்காலத்தைய தத்துவத்தில் ஒரு தாக்கம் செலுத்தியது.
- 1909இல் அவர் இரு வாரங்கள் ஏசு அவையினரின் (Jesuit) மடத்தில் சேர்ந்து விட்டு விலகினார்.
- அடுத்து ப்ரீபெர்க் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிக்க சேர்ந்தார். 1911இல் இறையியலை விடுத்து தத்துவத்தில் சேர்ந்தார்.
- 1915இல் ப்ரீபெர்கில் பேராசிரியர் ஆனார்.
- 1917இல் மணம் புரிந்து இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார். அவர் தனது மாணவியான ஹானா ஆரிண்டுடன் (பிற்காலத்தில் The Origins of Totalitarianism, The Human Condition போன்ற முக்கிய தத்துவ நூல்களை எழுதியவர்.) காதல் உறவில் இருந்தாலும் இதனால் அவரது திருமண உறவு முறியவில்லை. இறுதி வரை நீடித்தது.
- ஹைடெக்கரை அவர் எழுதத் துவங்கியது முதலான காலத்தில் சில தத்துவவாதிகள் தீவிரமாக பாதித்தனர்:
- முதலில் அரிஸ்டாட்டில். அவர் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இருப்பு உண்டா என முதன்முதலில் வினவியவர் - ஒரு கல்லுக்கு, ஒரு ஆப்பிளுக்கு, ஒரு மரத்துக்கு. இங்கிருந்து அவர் ஒவ்வொன்றுக்கும் ஒரு சாரம் உண்டா எனக் கேட்டார். This is a book என்றால் எது அதில் உள்ள “is”ஐ, அதன் isnessஐ தீர்மானிக்கிறது எனக் கேட்டார். ஒரு பொருள் அதுவாக இருப்பதற்குக் காரணமான இயல்புகள் என்னவெனக் கேட்டார் (being qua being). இதை பொதுமைப்படுத்த முயன்றார். அரிஸ்டாட்டில் மெய்யியல் குறித்து எழுதியவையே ஹைடெக்கரை phenomenology, ontology நோக்கி, மானுட இருப்பு நோக்கி ஈர்த்தது. ஹைடெக்கர் பிற்காலத்தில் அரிஸ்டாட்டிலை மறுத்து கடந்து சென்றாலும் துவக்கப் புள்ளி இதுவே.
- அடுத்து இம்மானுவல் காண்ட், சோரன் கீர்க்கெகார்ட், நீட்சே போன்ற தத்துவஞானிகள் இவரைப் பெரிதும் பாதித்தனர்.
- அடுத்த படியாய் ஆனால் மிக முக்கியமாய் phenomenologyயின் தந்தையாக அறியப்படுகிற ஹசர்ல். ஹசர்ல் 1915இல் ப்ரீபெர்க் பல்கலையில் பேராசிரியானார். 1919இல் ஹைடெக்கர் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றினார்.
- 1923 முதல் 1928 வரை மார்பெர்க் பல்கலையில் தத்துவப் பேராசிரியாக மிகவும் பெயர் பெற்று விளங்கிய ஹைடெக்கர் ஹசர்லின் ஓய்வுக்குப் பின்னர் ப்ரீபெர்க் பல்கலைக்குத் திரும்பி அங்கு ஹசர்லி இடத்தை எடுத்துக் கொண்டார்.
- அங்குதான் அவர் தனது மிகச்சிறந்த தத்துவப் படைப்பான Being and Time நூலை எழுதினார், இதை தனது குருநாதரான ஹசர்லுக்கு அர்ப்பணித்தார்.
- Being and Time புத்தகம் ஹைடெக்கரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. இது சார்த்தரின் இருத்தலியம், தெரிதாவின் கட்டுடைப்பு கோட்பாடு போன்ற புதிய தத்துவத் திறப்புகளுக்கு வழிகோலியது.
- 1933இல் ஹைடெக்கர் ஹிட்லரின் நாசி கட்சியில் இணைந்தார். அடுத்து அவர் ப்ரீபெர்க் பல்கலைக்கழகத்தின் தலைவராக (rector) நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் அவர் ஹிட்லரின் கொள்கைகளை பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மாற்றுவதன் வழி மாணவர்களிடம் கொண்டு சேர்த்தார் எனக் கூறப்படுகிறது.
- 1933இல் ஹைடெக்கர் எடுத்த முடிவு அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. பிற்காலத்தில் அவர் மிக மோசமான இழிப்பெயரை இதனால் பெற்றார். இது அவர் எடுத்த மிகத் தவறான முடிவு எனலாம் - நாசிசம் நவீனத் தொழில்நுட்பத்தின் சீரழிவுகளில் இருந்து ஜெர்மனியைக் காப்பாற்றும், மக்கள் மீண்டும் ஒரு தேசியவாத எழுச்சியில் ஒரு கூட்டு சமூகமாக உணர்வது அவர்களை மறுமலர்ச்சி அடைய வைக்கும் என அவர் நம்பினார். அதாவது தனது தத்துவ நம்பிக்கைகளை நாசிக் கட்சி மூலம் செயல்வடிவுக்கு, நிலுவைக்குக் கொண்டு வரலாம் என அவர் நம்பினார். ஆனால் ஹிட்லரோ யூத வெறுப்பு, அதன் மூலம் அண்டை நாடுகளைக் கைப்பற்றுவது, சர்வாதிகாரம் மூலம் ஆட்சியில் நீடிப்பது என மற்றொரு பாதையில் சென்றார். தத்துவமும் நடப்பு அரசியலும் வேறு வேறு எனும் அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ளாமல், ஐயப்படாமல் இருந்ததே ஹைடெக்கரின் முக்கிய தவறு. அதே நேரம் அவர் யூத வெறுப்பை, இனவாதத்தை ஏற்கவில்லை. ஆனால் நாசிக் கட்சி உறுப்பினர் எனும் பெயர் அவரது தத்துவத்திற்கு இனவாத சாயலைக் கொண்டு வந்தது ஒரு துன்பியல் நிகழ்வாகும்.
- 1934 முதல் அவர் நாசிக் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார், ஆனால் கட்சியில் இருந்து விலக வில்லை.
- உலகப்போர் முடிந்து ஹிட்லர் கொல்லப்பட்ட பின்னர் நாசி களையெடுப்புக் குழு ஒன்று விசாரணை மேற்கொண்டு ஹைடெக்கரை ஆசிரியப் பணியில் இருந்து தடை செய்தது.
- 1949இல் அவர் மீதான தடை விலக்கப்பட்டது.
- 1976இல் அவர் காலமானார்; சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்.
Comments