Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஹைடெக்கர் குறிப்புகள் (2)



ஹைடெக்கரின் வாழ்க்கை:


  • 1889இல் மெஸ்கிரிச் எனும் அமைதியான, சம்பிரதாயமான, மதரீதியான நம்பிக்கைகளை வலுவாகக் கொண்ட ஒரு சிறுநகரத்தில் ஹைடெக்கர் பிறந்தார். இந்த ஊர் அவரது பிற்காலத்தைய தத்துவத்தில் ஒரு தாக்கம் செலுத்தியது.
  • 1909இல் அவர் இரு வாரங்கள் ஏசு அவையினரின் (Jesuit) மடத்தில் சேர்ந்து விட்டு விலகினார்.
  • அடுத்து ப்ரீபெர்க் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிக்க சேர்ந்தார். 1911இல் இறையியலை விடுத்து தத்துவத்தில் சேர்ந்தார்.
  • 1915இல் ப்ரீபெர்கில் பேராசிரியர் ஆனார்.
  • 1917இல் மணம் புரிந்து இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார். அவர் தனது மாணவியான ஹானா ஆரிண்டுடன் (பிற்காலத்தில் The Origins of Totalitarianism, The Human Condition போன்ற முக்கிய தத்துவ நூல்களை எழுதியவர்.) காதல் உறவில் இருந்தாலும் இதனால் அவரது திருமண உறவு முறியவில்லை. இறுதி வரை நீடித்தது.
  • ஹைடெக்கரை அவர் எழுதத் துவங்கியது முதலான காலத்தில் சில தத்துவவாதிகள் தீவிரமாக பாதித்தனர்:
  • முதலில் அரிஸ்டாட்டில். அவர் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இருப்பு உண்டா என முதன்முதலில் வினவியவர் - ஒரு கல்லுக்கு, ஒரு ஆப்பிளுக்கு, ஒரு மரத்துக்கு. இங்கிருந்து அவர் ஒவ்வொன்றுக்கும் ஒரு சாரம் உண்டா எனக் கேட்டார். This is a book என்றால் எது அதில் உள்ள “is”, அதன் isness தீர்மானிக்கிறது எனக் கேட்டார். ஒரு பொருள் அதுவாக இருப்பதற்குக் காரணமான இயல்புகள் என்னவெனக் கேட்டார் (being qua being). இதை பொதுமைப்படுத்த முயன்றார். அரிஸ்டாட்டில் மெய்யியல் குறித்து எழுதியவையே ஹைடெக்கரை phenomenology, ontology நோக்கி, மானுட இருப்பு நோக்கி ஈர்த்தது. ஹைடெக்கர் பிற்காலத்தில் அரிஸ்டாட்டிலை மறுத்து கடந்து சென்றாலும் துவக்கப் புள்ளி இதுவே.
  • அடுத்து இம்மானுவல் காண்ட், சோரன் கீர்க்கெகார்ட், நீட்சே போன்ற தத்துவஞானிகள் இவரைப் பெரிதும் பாதித்தனர்.
  • அடுத்த படியாய் ஆனால் மிக முக்கியமாய் phenomenologyயின் தந்தையாக அறியப்படுகிற ஹசர்ல். ஹசர்ல் 1915இல் ப்ரீபெர்க் பல்கலையில் பேராசிரியானார். 1919இல் ஹைடெக்கர் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றினார்.  
  • 1923 முதல் 1928 வரை மார்பெர்க் பல்கலையில் தத்துவப் பேராசிரியாக மிகவும் பெயர் பெற்று விளங்கிய ஹைடெக்கர் ஹசர்லின் ஓய்வுக்குப் பின்னர் ப்ரீபெர்க் பல்கலைக்குத் திரும்பி அங்கு ஹசர்லி இடத்தை எடுத்துக் கொண்டார்.
  • அங்குதான் அவர் தனது மிகச்சிறந்த தத்துவப் படைப்பான Being and Time நூலை எழுதினார், இதை தனது குருநாதரான ஹசர்லுக்கு அர்ப்பணித்தார்.
  • Being and Time புத்தகம் ஹைடெக்கரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. இது சார்த்தரின் இருத்தலியம், தெரிதாவின் கட்டுடைப்பு கோட்பாடு போன்ற புதிய தத்துவத் திறப்புகளுக்கு வழிகோலியது.
  • 1933இல் ஹைடெக்கர் ஹிட்லரின் நாசி கட்சியில் இணைந்தார். அடுத்து அவர் ப்ரீபெர்க் பல்கலைக்கழகத்தின் தலைவராக (rector) நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் அவர் ஹிட்லரின் கொள்கைகளை பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மாற்றுவதன் வழி மாணவர்களிடம் கொண்டு சேர்த்தார் எனக் கூறப்படுகிறது.
  • 1933இல் ஹைடெக்கர் எடுத்த முடிவு அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. பிற்காலத்தில் அவர் மிக மோசமான இழிப்பெயரை இதனால் பெற்றார். இது அவர் எடுத்த மிகத் தவறான முடிவு எனலாம் - நாசிசம் நவீனத் தொழில்நுட்பத்தின் சீரழிவுகளில் இருந்து ஜெர்மனியைக் காப்பாற்றும், மக்கள் மீண்டும் ஒரு தேசியவாத எழுச்சியில் ஒரு கூட்டு சமூகமாக உணர்வது அவர்களை மறுமலர்ச்சி அடைய வைக்கும் என அவர் நம்பினார். அதாவது தனது தத்துவ நம்பிக்கைகளை நாசிக் கட்சி மூலம் செயல்வடிவுக்கு, நிலுவைக்குக் கொண்டு வரலாம் என அவர் நம்பினார். ஆனால் ஹிட்லரோ யூத வெறுப்பு, அதன் மூலம் அண்டை நாடுகளைக் கைப்பற்றுவது, சர்வாதிகாரம் மூலம் ஆட்சியில் நீடிப்பது என மற்றொரு பாதையில் சென்றார். தத்துவமும் நடப்பு அரசியலும் வேறு வேறு எனும் அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ளாமல், ஐயப்படாமல் இருந்ததே ஹைடெக்கரின் முக்கிய தவறு. அதே நேரம் அவர் யூத வெறுப்பை, இனவாதத்தை ஏற்கவில்லை. ஆனால் நாசிக் கட்சி உறுப்பினர் எனும் பெயர் அவரது தத்துவத்திற்கு இனவாத சாயலைக் கொண்டு வந்தது ஒரு துன்பியல் நிகழ்வாகும்.
  • 1934 முதல் அவர் நாசிக் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார், ஆனால் கட்சியில் இருந்து விலக வில்லை.
  • உலகப்போர் முடிந்து ஹிட்லர் கொல்லப்பட்ட பின்னர் நாசி களையெடுப்புக் குழு ஒன்று விசாரணை மேற்கொண்டு ஹைடெக்கரை ஆசிரியப் பணியில் இருந்து தடை செய்தது.
  • 1949இல் அவர் மீதான தடை விலக்கப்பட்டது.
  • 1976இல் அவர் காலமானார்; சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...