தமிழக அரசு சாத்தான்குளம் படுகொலையில் முக்கிய பங்கு வகித்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்துள்ளது வரவேற்கத்தது. ஆனால் அத்துடன் பிரச்சனை முடிவதில்லை. இது ஒரு நல்ல துவக்கம் என்றாலும் இத்துடன் அரசு பின்வாங்குவது ஆளை விடுத்து நிழலை அடிப்பதைப் போன்றது. காரணத்தைக் கொல்லாமல் விளைவைத் தாக்குவது பலனளிக்காது. அரசு செய்ய வேண்டியது இந்த பிரண்ட்ஸ் ஆப் இந்தியாவுக்குப் பின்னிருந்து இயக்கும், காவல்துறையை மதவாத வெறுப்பரசியலுக்குப் பயன்படுத்த நினைக்கும் சேவா பாரதியை முடக்குவதுதான்.
சாத்தான்குளம் படுகொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகளான அந்த நான்கு சேவா பாரதி அமைப்பினரை ஏன் தமிழக பாஜக காப்பாற்ற முயல்கிறது, ஏன் அந்த காக்கி நிக்கர் குற்றவாளிகள் நால்வரும் இன்னமும் கைதாகாமல் இருக்கிறார்கள் என யோசித்தால் சில விசயங்கள் புரிகின்றன:
1) இந்த சேவா பாரதி எனும் மதவாத அமைப்பானது சமூக சேவையின் போர்வையில் இந்துத்துவாவை எளிய மக்களிடத்து எடுத்து செல்லவும், எதிர்காலத்தில் அவர்கள் நிகழ்த்தவிருக்கும் மதக்கலவரங்களில் ஆயுதமேந்தி சிறுபான்மையினரைத் தாக்கி அழிப்பதற்கும் ஒரு படையை தயாரித்து வருகிறது. இப்போதைக்கு கொரோனா கால சேவை, மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது, மருத்துவ முகாம், தொழிற்பயிற்சி முகாம் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஒரு பக்கம் தன்னை மறைத்தபடி அது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை ஊடுருவி தனது வன்முறையை விதைத்து வந்தது. அழகான இன்முகம் கொண்ட ஒரு தேளைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் - அதன் கொடுக்குதான் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ். கொடுக்கை தடை செய்து விட்டு தமிழக அரசு இப்போதும் கொடுக்க ஏவி விடும் தேளைத் தடவிக் கொடுத்தபடி தான் இருக்கிறது. இது மிக மிக ஆபத்தானது. ஒரு கொடுக்கை தடை செய்தால் ஒரு புதுக்கொடுக்குடன் வெளிவர தேளுக்கு அதிக நாட்கள் எடுக்காது.
சேவா பாரதிக்கு இந்தியா முழுக்க 600 மாவட்டங்களில் 1, 60,000 கிளைகள் உள்ளன. பாஜகவுக்கு நிதியுதவி செய்யும் மதவெறி மிக்க கார்ப்பரேட்டுகளே சேவா பாரதிக்கும் மறைமுக ஊக்கமளிக்கின்றன. வடக்கே நடக்கும் இவர்களின் மாநிலப் பொறுப்பாளர் கூட்டங்களில் அமித் ஷாவே கலந்து கொண்டு வாழ்த்துகிறார். ஏன், சமூக சேவை முயற்சிகளைப் பாராட்டவா? அதற்கும் தேர்தல் அரசியலுக்கும் என்ன தொடர்பு? தேர்தலில் வாக்குகளைப் பெற்றுத்தராத பயனில்லாத காரியங்களில் அமித் ஷா அக்கறை காட்டவே போவதில்லையே. இந்துத்துவாவை பரப்புரை செய்ய ஒட்டுமொத்த ஊடகங்களும், லட்சக்கணக்கான வாட்ஸ் ஆப் பிரச்சாரகர்களும் உள்ள போது ஷாவுக்கு இந்த சேவா பாரதியினால் பலன் என்ன? இன்னும் இந்துத்துவா வேர் விடாத மூலை முடுக்குகளில் பயணித்து அங்கு மாற்று மதத்தவர்கள் மீதான வெறுப்பை விதைப்பது இவர்களின் முதல் வேலை (கொடைக்கானலில் மட்டுமே அவர்களுக்கு 30க்கும் மேற்பட்ட சேவா பாரதி மையங்கள் உள்ளன). ஆனால் ஏற்கனவே வலுவான மாற்று அரசியல் சித்தாந்தங்கள் நிலைப்பெற்றுள்ள தமிழகம் போன்ற மாநிலங்களில் இவர்களால் மருத்துவ முகாம் போன்ற நடவடிக்கைகளால் என்ன பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? இதை அவர்களால் நன்றாகவே அறிவார்கள். ஆகையாலே எதிர்காலத்தில் வன்முறை மூலம் தமிழக மக்களைப் பிரித்து தமக்குள் அடித்துக் கொள்ள செய்வார்கள். ஆனால் மக்கள் தாமாகவே அடித்துக் கொள்ள மாட்டார்களே. ஆகையால் முதல் அடியை கொடுக்க, முதல் குண்டை வீச, முதல் துப்பாக்கியை முழக்க அவர்களுக்கு ஆள் தேவைப்படுகிறது. ஊரைக்கொளுத்த, வாளால் தலையை வெட்ட ஒரு வெறிகொண்ட படை, ஒரு ஸ்லீப்பர் செல்களின் படை, தேவைப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் ‘தீவிரவாதக்’ கிளையை கொண்டு இந்துத்துவ வெறிகொண்ட ரௌடிகளை தமிழக காவல் துறைக்குள் பரவலாகப் புகுத்திட பாஜக திட்டம் வகுத்துள்ளது. எதற்கு?
2) தமிழகத்தில் பாஜக ஓரளவுக்கு காலூன்ற முடிந்தாலோ அல்லது நாளை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வேலைகள் ஆரம்பித்தாலோ இங்கே இந்துத்துவர்களால் பல இடங்களில் குண்டு வைத்து, அதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் காரணம் என போலி செய்திகள் பரப்பி, மதக்கலவரங்கள் அவிழ்த்து விடப்படும். அப்போது இந்த சேவா பாரதி ரௌடிகள் களமிறங்கி சிறுபான்மையினரை அடித்து துன்புறுத்துவார்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொல்வார்கள். அதற்கு சட்டத்துக்குப் புறம்பான ஒரு அதிகாரத்தைப் பெறவே இவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுவதும், காவல் துறைக்குள் FOP எனும் பெயரில் அவர்கள் தொடர்ந்து ஊடுருவி வந்ததும் (எதிர்காலத்தில் இந்நோக்கத்துக்கு மாற்றுவழியைக் கண்டடைவார்கள்).
3) ஜெ.என்.யுவில் மாணவர்களை விடுதிக்குள் புகுந்து இதே காவல்துறை நண்பர்கள் எனும் ஆர்.எஸ்.எஸ் புல்லுருவிகள் கடுமையாகத் தாக்கியதைக் கண்டோம். தில்லியின் தெருக்களில் போராடும் மாணவர்கள் மீது ஒரு இந்துத்துவ ரௌடி போலிசார் பார்த்து நிற்க துப்பாக்கியால் சுடுவதைப் பார்த்தோம். இந்த காட்சிகள் எதிர்காலத்தில் தமிழகத்தில் அரங்கேற திட்டம் தீட்டப்படுகிறது. அதன் ஒரு பகுதிதான் நாம் சாத்தான்குளத்தில் பார்த்தது - உ.தா., அங்கு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடித்துக் கொல்லப்படுமுன்பே துண்டு பிரச்சாரங்களை வினியோகித்த ‘குற்றத்துக்காக’ கிறுத்துவ மத பிரச்சாரகர்களை இதே எஸ்.ஐ கைது பண்ணி வந்து நிர்வாணப்படுத்தி அடித்து சித்திரவதை செய்தார். அதற்கு அவரால் பயன்படுத்தப்பட்டதும் இதே சேவா பாரதி ரௌடிகள் தாம் என இப்போது தெரிய வந்துள்ளது.
4) இந்த சதித்திட்டங்களை தமிழகத்தில் இந்துத்துவர்கள் எப்போது நிகழ்த்தப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அது நிகழும் போது இப்போது பாஜகவை வாய்பொத்தி ஆதரிக்கும், சூட்கேஸுக்கு விலைபோகும் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் துணை நிற்பார்கள், மதவாத வன்முறைக்கு முதுகெலும்பில்லாத அதிமுக மறைமுகமாக எல்லா வசதிகளையும் பண்ணிக்கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருவேளை அடுத்து திமுக ஆட்சி அமைந்தால் இந்த மதக்கலவரங்கள் நடப்பது தள்ளிப் போகும். பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க உண்மையில் மதக்கலவர்கள் அன்றி எந்த வழியும் இல்லை - எல்லா ஊர்களிலும் அரசியல் பண்ண அவர்களின் டிஸைன் ஒன்றுதான். ஆக சேவா பாரதியினர் பாஜகவுக்கு ஒரு முக்கியமான ஆயுதம்.
5) போராடும் மக்களை போலீசைக் கொண்டே தாக்கலாமே, ஏன் பாஜக தனது செயல்வீரர் படையான ஆர்.எஸ்.எஸ், அவர்களின் அடிபொடியினரான சேவாபாரதி மூலம் செய்ய முயல்கிறது? இங்குதான் இந்துத்துவா என்பது வன்முறை மூலம் தேசபக்தியை வளர்ப்பது, தேசபக்தியையும் ஆண்-மையவாதத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு கருத்தியல் என நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனக்கு எதிர்நிலையில் உள்ள மக்களை (மற்றமையை) சட்ட, அற வரம்புகளைப் பொருட்படுத்தாமல் தாக்குகிற “துணிச்சலையே” அவர்கள் ஆண்மையாகக் கருதுகிறார்கள். நவநாகரிக, ஜனநாயக விழுமியங்களை நம்பாத, ஏற்காத ஒரு கருத்தியல் இது. நவீன சிந்தனை ஆண்களை பலவீனமாக்குகிறது என இவர்கள் நினைக்கிறார்கள். அதனாலே அவர்கள் காந்தியை எதிர்த்தார்கள். காலனிய காலத்தில் தீவிரவாத நடவடிக்கைகளில் இந்து மகாசபையினர் ஈடுபட்டதும் இந்திய சமூகத்தை வன்மத்தால் உருக்கொண்ட ஒரு ஆணுடலாக கட்டமைப்பதற்காகத் தான். ஆயுதப் பயிற்சி அளித்து தமது ஆர்.எஸ்.எஸ் படையினரை அவர்கள் வளர்ப்பதும் இதே நோக்கத்துக்காகத் தான். ஒரு நவீன குடிமை சமூகம் ஒரு தனிமனிதன் ஆயுதம் எந்தக் கூடாது என்கிறது. இந்துத்துவா இதை உடைத்து அவனை ஆயுதம் ஏந்தி மற்றமையை பயமுறுத்தி தேசபக்தியை வளர்க்க வேண்டும் எனத் தூண்டுகிறது. ஒரு நவீன தேசியம் காவல்துறை மூலம் வன்முறையை மறைமுகமாகக் கட்டவிழ்த்து விடும், அல்லது அப்படி செய்வோம் என அச்சுறுத்தும். தனது கல்வி அமைப்பு மூலம் பெரும்பாலான மக்களை அமைதியான வாழ்க்கையில் ஈடுபட பயிற்சியளிக்கும். இந்த அமைதி என்பது எந்திரத்தனமான நிதானமான வாழ்க்கைப் போக்குக்கு எந்த இடையூறும் வரக் கூடாதே எனும் பயத்தின் மீது அணிந்த முகமூடி. இந்த நவீன மக்கள் திரளை இந்துத்துவர்கள் தேசப்பற்றில்லாத பேடிகள் எனக் கருதுகிறது (இதுவே பாசிச தத்துவம்). இவர்களை ஆயுதமேந்தி ஒரு மற்றமைக்கு எதிராகத் திரட்டி போராட செய்து அதன் மூலம் தேசியவாத அமைப்பாக மாற்ற முயல்கிறது. ஆகையால் ஒரு இந்துத்துவ சமூகத்தில் ஒவ்வொரு குடிமகனும் ‘ஆயுதமேந்திய போலிசாக’ இருக்க வேண்டும். அவனைக் கண்டு மற்றமை அஞ்சி நடுங்க வேண்டும். அவன் ஒரு நடமாடும் ராணுவமாக இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸின் நெடுநாள் லட்சியம் என்பது இதுவே - இப்போதை அது சாத்தியமாகாததால் அவர்கள் மொழி வழியாக (மேடைப்பேச்சு, வாட்ஸ் ஆப் செய்திப்பரிமாற்றம், ஊடக விவாதம்) ஒரு வன்முறையான ஆண்-மையமான சமூகமாக நம்மை மாற்ற மெல்ல மெல்ல விசமேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
“அடுத்த கட்டத்துக்கு” இந்திய சமூகத்தை எடுத்து செல்ல அவர்களின் ஒரு முக்கிய திட்டம் ஒரு ‘முன்மாதிரியான’ ஆண்களின் படையை உண்டு பண்ணுவது. இதுவரை ஆர்.எஸ்.எஸ்ஸின் காக்கி நிக்கர் படை உதிரியாகவே செயல்படுகிறது. அவர்களையும் காவல்துறை மற்றும் ராணுவத்துடன் இணைத்து ஒரு புதிய உடைப்பை, இடைவெட்டு நுழைவை சமூகத்தில் செயல்படுத்த முயல்கிறார்கள் - அதற்காக நகர்த்தப்படும் காய் தான் சேவா பாரதி.
சேவா பாரதி போன்ற பல பெயர்களில் பொதுமக்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை காவல்துறையின் ஒரு பகுதியாக்கி “மதக்கலவரங்கள்” எனும் சீறுபான்மையினர் மீதான போலியான சட்டவிரோதத் தாக்குதல்களின் போது களமிறக்குவார்கள். இதை வேண்டுமென்றே பொதுமக்கள் பார்வையில் படும்படி செய்வார்கள். ஏன்?
இஸ்லாமியரையும், இந்துத்துவாவுக்கு எதிரான (அவர்களின் பார்வையில் இந்து தேசத்துக்கு எதிரான தேசவிரோதிகள்) போராளிகளை அடித்தும் சுட்டும் கொல்வது காவல்படையினர் அல்ல, வீரியமான, ஆயுதப்பயிற்சி பெற்ற இந்து ஆண்களே எனும் ஒரு தகவலை பொதுமக்களின் உபமனதுக்கு கடத்திட ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. இது இந்துத்துவ அமைப்புகள் மீது பயத்தையும், பயத்தின் வழி மரியாதையையும், அதன் வழி ஒரு கட்டற்ற அதிகாரத்தையும் கட்டமைக்க உதவும் என அவர்கள் நம்புகிறார்கள்.
இந்துத்துவா என்பது சமத்துவம், மதசார்பின்மை, அறம் போன்ற நம்பிக்கைகள், விழுமியங்களை ஒரேடியடியாய் நசுக்கி சமாதிகட்டத் துடிக்கும் ஒரு கருத்தியல். அவர்களுக்கு விரோதிகள் இஸ்லாமியர் அல்ல, இந்த நவீன குடிமை சமூக கருத்துக்களே. உ.தா., மற்றமையை நேசித்து ஏற்று செல்ல வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அனுசரித்துப் போக வேண்டும் என்பதை அவர்கள் பேடித்தனம், தேசவிரோத முற்போக்கு மனப்பான்மை என்கிறார்கள். இந்த முற்போக்கு நம்பிக்கைகளின் வழி உருவாகி வந்துள்ள கடந்த ஐம்பதாண்டுகால இந்திய சமூகத்தை உருமாற்ற வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய லட்சியம். சுருக்கமாக நம்மை ஒரு தாலிபானிய சமூகமாக மாற்றுவதே அவர்களின் கனவு. அதற்கான முதல் படியே சேவா பாரதி போன்ற அமைப்புகளை குடிமை சமூகத்துள் ஊடுருவ செய்வது. இது அம்பலப்படாமல் இருக்கவே (ஒரு மாபியா குழு சட்டபூர்வமான வியாபாரங்களை ஒரு முகமூடியாக பயன்படுத்துவதைப் போல) கொரோனா சமயத்தில் மக்களுக்கு உணவளிப்பது போன்ற சமூக சேவைகளிலும் கூடவே ஈடுபடுவார்கள். எவ்வளவு உன்னதமான அமைப்பு இவர்கள் என நாம் நம்பிக்கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம் துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் அவர்கள் காவல்துறை போன்ற அமைப்புகளில் ஊடுருவிக் கொண்டிருப்பார்கள்.
இந்த தாலிபானிய சூழலே நம் எதிர்காலம் - இதைத் தடுத்து எதிர்த்துப் போராட நாம் இப்போதே தயாராக வேண்டும்.
6) இந்த உண்மைகள் அம்பலப்பட ஒரு முகமாக இந்த சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலைகளில் நான்கு சேவா பாரதியினர் ஈடுபட்டது அமைந்து விட்டது. காவல் அதிகாரிகளைக் கைது செய்த போது நமது சி.பி.சி.ஐடியினர் சேவா பாரதியினரைத் தப்பிக்க விட்டது பா.ஜ.கவின் கறுப்புப் படையினரைக் காப்பாற்றத் தானோ எனும் ஐயம் ஏற்படுகிறது. இப்போதும் சேவா பாரதியைத் தடை செய்யாமல் பொத்தாம் பொதுவாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் எனும் காயை இந்த சதுரங்க ஆட்டத்தில் அதிமுக வெட்டுவது பாஜகவின் நெடுங்காலத் திட்டத்திற்கு ஊறு விளையாமல் காப்பாற்றத் தானோ எனும் கேள்வி எழுகிறது. பாஜகவின் தலைவர் முருகன் இந்த படுகொலைகள் ஒரு சிறிய பிரச்சனை, இதைப் போய் திமுக அரசியல் செய்து பெரிய அலப்பறை பண்ணுகிறது என எரிச்சல்படுவதன் உள்நோக்கம் இதுவே. அவரது கவலையெல்லாம் ஆர்.எஸ்.எஸ், சங்க் பரிவாரின் ஆயுதப்படையினர் அம்பலப்பட்டு முளையிலே கிள்ளப்பட்டு விடக் கூடாது என்பது.
தமிழகத்தில் இந்த சேவா பாரதி போன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாத கிளைகளை வேரோடு பிடுங்க வேண்டும். விரைவில் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட வேண்டும். தமிழகத்தைக் காப்பாற்ற வேறு வழியே இல்லை!

Comments