அரசர் ஒரு ஸ்டுடியோவை ஆஸ்பத்திரியாய் செட் அப் செய்து அங்கு நல்ல ஆரோக்கியமாய் தெரியும் (ராணுவ வீரர்களோ) ஆட்களின் மத்தியில் உலவும் போட்டோவைப் பார்த்தோம். அது ஏற்கனவே தோனி விஸிட் அடித்த போது பயன்பட்ட அதே புரொஜெக்டர் கொண்ட பெரிய ஹால் தான் என பலரும் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இதில் நாம் கேலி செய்ய ஒன்றுமில்லை.
ஏன் அவர் நிஜ மருத்துவமனைக்கு செல்லாமல் செட் அப் செய்யப்பட்ட ஒரு இடத்தில் இருந்து போஸ் கொடுக்கிறார் என்பதற்கு ஒரு காரணம் உள்ளது.
நான் செய்திகளில் படித்ததில் இருந்து அரசர் கொரோனா குறித்த கடும் பீதியில் இருக்கிறார். தினமும் இரு முறை தனக்கு நோய்த்தொற்று இருக்கிறதா என பரிசோதிக்கிறார். அவரது அலுவலகத்தில் மிகுந்த சோதனைகளுக்குப் பிறகே அதிகாரிகள், அமைச்சர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள், அதுவும் தொலைவாக நின்றே அவரிடம் பேச முடியும். அரசர் இப்போதெல்லாம் கூட்டங்களை விட காணொளிக் கூட்டங்களையே விரும்புகிறார். அரசர் அஞ்சுவதை நாம் கேள்வி கேட்பது நியாயமல்ல - அவருக்கு 69 வயதாகிறது. கொரோனா வயதானவர்களைத் தாக்கினால் மரணம் நிச்சயம். நாட்டின் அரசராக அவருக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. இஸ்லாமியரையும் பிற சிறுபான்மையினரையும் நாட்டை விட்டு அடித்து துரத்த வேண்டும், ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் காவிக்கொடியை பறக்க விட்டு பாரத வர்ஷத்தை மகாபாரத நாட்களுக்கு மீட்க வேண்டும். தனது தளபதியுடன் இணைந்து மொத்த நாட்டையும் படையெடுத்து ஆக்கிரமித்து தன் கட்சியை அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியில் அமர்த்த வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது. சம்பாதித்த சொத்துக்களை அனுபவிக்கவே அவருக்கு இன்னும் ஒரு நூறு வருடங்கள் கிடைத்தால் போதாது. இந்த நிலையில் அவர் நம்மை விட ஆயிரம் மடங்கு கூடுதல் கவனமாக இருத்தல் அவசியம்.
பெரும் அச்சத்தில் இருக்கும் நமது அரசர் இவ்வளவு நெருக்கத்தில் நோயாளிகளிடையே நடந்த செல்ல முடியுமா? அதற்காகத் தான் இந்த செட் அப் மருத்துவமனை, நோயாளி வேடத்தில் நடிகர்கள் எல்லாம்.
அரசரை நாம் வாழ்த்துவோம்!

Comments