இன்று கலசலிங்கம் பல்கலையின் இணைவழி கருத்தரங்கில் தல்ஸ்தாய்-தஸ்தாவஸ்கி பற்றின என்னுடைய உரையாடல் சிறப்பாக நிகழ்ந்தது. நிறைய பங்கேற்பாளர்கள், அவர்கள் அக்கறையுடன் கவனித்து நல்ல கேள்விகளை எழுப்பினார்கள். மனுஷி, சீனிவாசன் நடராஜன் போன்ற முக்கிய படைப்பாளிகளும் கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சியளித்தது. சீனிவாசன் நடராஜன் ஒரு படைப்பாளியின் ஒழுக்கம் என்பது அவசியமா என எழுப்பிய கேள்வி, பேராசிரியர் அபிதா “கரமசோவ் சகோததர்கள்” நாவலில் இவானின் பாத்திரத்துக்கும் தீமைக்குமான உறவாடல் குறித்து எழுப்பிய கேள்வி, மேலும் பல பங்கேற்பாளர்கள் எழுப்பிய தீவிரமான மற்றும் அடிப்படையான கேள்விகள் எனக்கு நிறைவளிப்பதாக அமைந்தன.
நிறைய பேசுவதற்கு தயாரித்து சென்றிருந்தேன், ஆனால் நேரத்தின் போதாமை காரணமாக தல்ஸ்தாய் பற்றி பேசிய அளவுக்கு தஸ்தாவஸ்கி பற்றி விரிவாக பேச முடியவில்லை. காணொளி விரைவில் யுடியூபில் வெளியாகும் என்றார்கள். கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு என் குறிப்புகளை இங்கும் என் பிளாகிலும் பகிர்ந்து கொள்கிறேன்.
Comments