சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 41 வது கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி பங்கை தர முடியாது எனக் கூறி, பதிலுக்கு ரிசர்வ் வங்கியிடம் வட்டிக்கு கடன் வாங்குமாறு சொன்னதைக் கேள்விப்பட்டோம். மாநிலங்களுக்கு உரிமையுள்ள பணத்தை தர மறுப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என கேரள மற்றும் பஞ்சாப் நிதியமைச்சர்கள் கடுமையாக இம்முடிவை விமர்சித்துள்ளனர். மிச்ச பேர் மிக்சர் சாப்பிட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். இது பற்றி கருத்து தெரிவித்த பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி சொன்ன ஒரு விசயம் தான் ஆபத்தானது; விவாதிக்க வேண்டியது - ரிசர்வ் வங்கியிடம் மாநில அரசு வட்டிக்கு கடன் வாங்கினால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது என்கிறார். இது எப்படி? அதுதான் வட்டித்தொகை இருக்கிறதே?
மாநில அரசுகள் மக்களிடம் வரி மீதான வரி எனப்படும் ஒரு கூடுதல் வரியை வசூலிக்காலாம் என நிர்மலா சீத்தாராமன் கூறியிருக்கிறார். அதாவது, இந்த ஜி.எஸ்.டி என்பதே கூடுதல் மறைமுக வரியாக பொருட்களின் விலையை அதிகப்படுத்தி விட்டது. இந்த வரியும் மாநில அரசுக்கு செல்லாமல் மத்திய அரசுக்குப் போய் விடுகிறது. ஏன் அப்படிப் போக வேண்டும் என்றால் ஆரம்பத்திலேயே மோடி அரசுக்கு ஜி.எஸ்.டி வரியை முழுங்கும் திட்டம் இருந்திருக்கிறது; ஜி.எஸ்.டி வரியை நாங்கள் வாங்கி வைத்து பிறகு தருகிறோம் என்பதன் பொருள் வரிப்பங்கை எங்கள் முடிவின் படி தருவோம் என்பதே.
முதலில் பங்கை குறைத்து தமது விருப்பப்படி மாநிலங்களுக்கு பணத்தை அளித்தார்கள். பிறகு இந்த கொரோனாவை காரணம் காட்டி ஒரேயடியாக நிறுத்தி விட்டார்கள். PC Cares நிதியில் இருந்து பணத்தைத் தர மறுக்கிறார்கள். தமது தேர்தலில் பயன்படக் கூடிய விதத்தில் இந்த நிதியை, வரிப்பணத்தை பிரதமரின் நேரடியான நிதியளிப்பு எனும் பொருளில் திட்டங்கள் வகுத்து (குஜராத், உ.பி. பீகார் போன்ற) சில மாநில மக்களுக்கு மட்டும் செலவிடுவதே பாஜக அரசின் திட்டமாகத் தெரிகிறது. அவர்களைப் பொறுத்தமட்டில் நடுவண் அரசு என்பதற்கும் பாஜக எனும் கட்சிக்கும் வித்தியாசம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்தின் வரி வருவாய்க்கும் பாஜகவின் தேர்தலில் நிதிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
மற்றொரு பக்கம், மத்திய அரசின் வருவாய் குறைந்து விட்டது என்பதும் உண்மையே - நாட்டின் பொருளாதாரம் படுத்தே விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜி.டி.பி 8% இருந்து 3.1% க்கு கீழிறங்கி விட்டது. அதாவது இது கொரோனா லாக்டவுனுக்கு முன்பு. ஆனால் அதன் பின்னர் ஜி.டி.பி 3 சதவீதத்துக்கும் கீழேயே சென்றிருக்க வாய்ப்பதிகம். கடந்த மூன்று பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடு பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. நாட்டில் பணம் புழங்கினால் தானே வரியாக அது நடுவண் அரசிடம் போகும். ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மோடி அரசு தெளிவான எந்த வளர்ச்சித்திட்டத்தையும் வகுக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர் கொண்டு வந்த திட்டங்கள் ஏதோ மூச்சைப்பிடித்துக் கொண்டு இருந்த தொழில்களையும் நசுக்கி விட்டன. இதைப் பற்றி எந்த கவலையும் இன்றி சுயவிளம்பரம், கலாச்சார பிரச்சாரம் என மோடி ஒரு பக்கமும், தம்மிடம் உள்ள அதிகார, பொருளாதார பலத்தைக் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியைக் கவிழ்ப்பதிலும் பாஜகவின் உள்கட்டமைப்பை செறிவாக்குவதிலும் தான் அமித் ஷா மறுபக்கமும் அக்கறை செலுத்தி வருகிறார்கள். மிச்ச பாஜக தலைவர்களும் அமைச்சர்களும் பிரதமரைப் பாராட்டி பாட்டெழுதுவதிலே நேரத்தை செலவிடுகிறார்கள்.
எல்லாராலும் கைவிடப்பட்ட பொருளாதாரம் தெருவில் கிடந்து நாறியது. அதன் நாற்றம் அதிகமாகும் போதெல்லாம் நடுவண் அரசு புதிய வழிகளில் பணத்தை மக்களிடம் பிடுங்க முனைந்தது. அதில் ஒரு வழியாகத்தான் மோடி அரசு மாநிலங்களுக்குப் போக வேண்டிய ஜி.எஸ்.டி பங்கை பிடுங்கிக் கொள்கிறது. வரிப்பங்கை தராமல் இருப்பது சட்டவிரோதம் என்பதால் ஒரேயடியாக முடியாது என்றும் சொல்ல முடியாது. பற்றக்குறையை சரிசெய்ய அவர்கள் இப்போது தரும் பரிந்துரையும் கூடுதல் வரியை மக்கள் மீது விதியுங்கள் என்பதே.
இந்த கூடுதல் (cess) வரி மீதான வரி இருக்கிறதே இதை விதித்து சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை அரசு வட்டியாக நடுவண் அரசுக்கே திரும்ப செலுத்த வேண்டி வரும். அதாவது ஜி.எஸ்.டி வரியை முழுங்கி ஏப்பம் விட்ட நடுவண் அரசு இப்போது கூடுதல் வரியை விதிக்கக் கேட்டு அதையும் பீடாவைப் போல வாயில் போட்டு ருசிக்க முடிவெடுத்துகிறது. இதன் விளைவு பொருளாதாரம் மீண்டும் சரிவடையும் என்பதே.
வரிக்கு மேல் வரியை விதித்து மக்களை வதைப்பது கொடுங்கோன் அரசுகளின் வழக்கமே. மோடி அரசின் மதவெறி, இந்துத்துவ கலாச்சார அரசியல், அரசியலமைப்பு சட்டதிருத்தங்கள் ஒரு பக்கம் சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச்செல்கிறது என்றால், இவ்வரசின் பொருளாதார சீர்கேடுகள் நம்மை அடுத்த இருபதாண்டுகளில் ஒரு சொமாலியாவாக மாற்றி விடும் போலத் தெரிகிறது.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் பிரதமர் மயில்களுக்கு உணவளித்துக் கொஞ்சிக்கொண்டே வீடியோ போடுகிறார்.
மக்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் பாரத தேசம் பாலைவனமாகும் நாள் தொலைவில் இல்லை!

Comments