Skip to main content

அஜய் ஜடேஜா: தொண்ணூறுகளின் ’கூல்’ ஹீரோ



தொண்ணூறுகளின் மகேந்திர சிங் தோனி தான் அஜய் ஜடேஜா (திறமையில் சற்று குறைவானவர் என்றாலும்). எவ்வளவு நெருக்கடி என்றாலும் அசராமல் கூலாக சிக்ஸரும் பவுண்டரிகளும் விளாசக் கூடியவர். இறுதி பத்து ஸ்லாக் ஓவர்களில் இந்தியாவின் சூப்பர் மேன். 1996 உலகக்கோப்பையில் அவர் 25 பந்துகளில் அடித்த 45 இன்றும் ரசிகர்களால் சிலாகிக்கப்படும் வரலாற்று தருணம்.

சிக்ஸர் விளாசுவதில் சூப்பர் மேன் என்றால் களத்தடுப்பில் அவர் ஸ்பைடர் மேன். அதே போல் ஜடேஜாவைப் போல எதிரணியின் கள அமைப்பின் வெற்றிடங்களை சாமர்த்தியமாய் பயன்படுத்தி ஒற்றை இரட்டை ஓட்டங்களை எடுப்பவர்களையும் அன்று (சச்சினைத் தவிர) பார்க்க முடியாது. சச்சினுக்கு அடுத்தாற் போல் இந்திய அணிக்கு வந்த முதல் நவீன பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா


கிரிக்கெட் பிரபலங்களின் குடும்பம்:


ஜடேஜா 1971இல் ஜூலை 3ஆம் நாள் குஜராத்தில் ஒரு ராஜ குடும்பத்தில் பிறந்தார். அவரது அப்பா குஜராத்தி. அம்மா மலையாளி. ஜடேஜாவின் முன்னோர்களான ரஞ்சித் சிங் ஜி மற்றும் துலீப் சிங் ஜி இந்திய கிரிக்கெட்டின் சாதனையாளர்கள். அவர்கள் பெயரில் ரஞ்சி கோப்பை மற்றும் துலீப் கோப்பை என இரு உள்ளூர் ஆட்டத் தொடர்கள் அறியப்படுகின்றன. அவரது அப்பா தௌலத் சிங் ஜடேஜாவும் உள்ளூர் கிரிக்கெட் ஆடிய பேட்ஸ்மென். அப்பா மைதானத்துக்கு ஆட செல்லும் போது சிறுவனான ஜடேஜாவையும் அழைத்து செல்ல மெல்ல அவருக்குள் கிரிக்கெட் மோகம் துளிர்த்தது. ஜடேஜா 1992 முதல் 2000 வரை இந்திய் அணியில் இடம்பெற்றார்.


பவுலிங்கும் அணித்தலைமையும்:


ஜடேஜா ஒரு பேட்டிங் மாஸ் மட்டுமல்ல, ஒரு திறமையான மிதவேக வீச்சாளரும் கூட. ஷார்ஜாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் இந்தியா இருநூற்று சொச்சம் ஸ்கோரை எடுத்தது. கிரெகம் தோர்ப் அபாரமாய் ஆட இங்கிலாந்து சுலபமாய் அந்த குறைவான ஸ்கோரை நெருங்கி வந்தது. இறுதி ஓவரில் இங்கிலாந்து சிங்கிள் அடித்தே ஜெயிக்கும் எனும் நிலை. யார் பந்து வீசுவது? சிறப்பாய் வீசின இடது கை சுழலர் ஜோஷியா அல்லது ஒரு வேகவீச்சாளரா? எதிர்பாராத விதமாய் அன்றைய ஆட்டத்தை இந்தியாவுக்கு தலைமை தாங்கின அஜய் ஜடேஜா தானே பந்து வீசுவதாய் முடிவு செய்தார். அது ஒரு சாணக்கிய முடிவு. அது ஒரு மெத்தனமான ஆடுதளம். ஜடேஜா மெதுவாக வீசக் கூடியவர். மேலும் அவரது பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மென் யாரும் அதுவரை பார்த்ததில்லை. அவர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்களே ஜடேஜா பந்து வீசுவதை பார்த்து ஆறு வருடங்களாவது இருக்கும். அவர் கபில்தேவ் பாணியில் ஓடி வந்து கட்டுப்பாடாய் வீசுகிறார். பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார். அடிக்க முடியாமல் பேட்ஸ்மென் திணறுகிறார்கள். வெற்றியின் உச்சத்தில் இருந்து இங்கிலாந்து சரிந்தது. ஒரே ஓவரில் மூன்று ரன்களுக்கு அவர் மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். இந்தியா வென்றது.

பதிமூன்று ஆட்டங்கள் மட்டுமே அணியை வழி நடத்தினாலும் ஒரு கேப்டனாக ஜடேஜா ஜொலித்தார். எதிரணியின் பலம் பலவீனங்களை கணித்து களத்தடுப்பு அமைப்பது, பந்து வீச்சாளர்களை உற்சாகப்படுத்தி சிறப்பாய் ஆட வைப்பது, எந்நேரமும் உற்சாகம் குன்றாமல் முயன்று கொண்டே இருப்பது என அவர் ஒரு அற்புதமான கேப்டனாய் திகழ்ந்தார். இந்த இறுதி ஓவரின் எதிர்பாராத பந்து வீச்சு மாற்றம் உங்களுக்கு 2007 T20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தின் இறுதி ஓவரை நினைவு படுத்தும்.

பாகிஸ்தானுக்கு 13 ரன்கள் தேவை. ஏற்கனவே ஹர்பஜன் சிங்கின் பந்தில் சிக்ஸர்கள் அடித்த மிஸ்பா உல்ஹக் ஆடிக் கொண்டிருக்கிறார். அன்றைய ஆட்டத்தின் சிறந்த வீச்சாளர்களான ஆர்.பி சிங், ஸ்ரீசாந்தை தவிர்த்து இறுதி ஓவரை ஜோகிந்தர் ஷர்மா எனும் உலகம் அறியாத ஒரு மிதவேக வீச்சாளருக்கு கொடுக்கிறார் தோனி. ஷர்மாவின் பந்தில் வேகம் இல்லாத காரணத்தினால் அவர் முழுநீளத்தில் போட்ட பந்தை மிஸ்பாவால் சுலபத்தில் சிக்ஸர் அடிக்க இயலவில்லை. ஸ்கூப் செய்ய முயன்று கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியா முதல் T20 உலகக்கோப்பையை வென்றது. தலைமைப் பண்பிலும் ஒருவிதத்தில் தோனியின் முன்னோடி அஜய் ஜடேஜா தான்


பரீட்சார்த்த (innovative) பேட்டிங்:


ஜடேஜாவின் பேட்டிங்கும் தோனியை நினைவுபடுத்துவது தான். ஜடேஜா தோனியை போன்றே ஐந்தாவது எண்ணில் களமிறங்குவார். முதல் முப்பது ரன்களுக்கு பவுண்டரி, சிக்ஸர்களை நம்பியிராமல் அதிவேகமாய் ஓடி நிறைய ஒற்றை ஓட்டங்கள் எடுப்பார். கண்ணிமைக்கும் முன் அவர் நாற்பது சொச்சம் ரன்களின் இருப்பார். பெரும்பாலும் 42-44 வது ஓவரில் அவர் பவுண்டரிகள் விளாசத் துவங்குவார். அப்போது இந்திய அணியில் கீழ்மத்திய வரிசை பேட்டிங் சீட்டு கோபுரம் போல் சரியக் கூடியது என்பதால் ஜடேஜா 48வது ஓவர் வரை சிக்ஸர் அடிக்கும் ரிஸ்க் எடுக்க மாட்டார். இந்த பவுண்டரி அடிக்கும் கட்டம் சுவாரஸ்யமானது. வீச்சாளர்களின் நீளம் மற்றும் லைனை கணித்து பரீட்சார்த்த ஷாட்கள் அடிப்பார்.


1998இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் அவர் கொச்சியில் அடித்த சதத்தின் போது ஒரு ஓவரில் ஷேன் வார்ன் பந்தை off ஸ்டம்புக்கு வெளியே குறைநீளத்தில் (short of the length) போடுகிறார். வார்னின் பிளைட்டில் ஏமாந்து ஜடேஜா முதலில் முன்னங்காலுக்கு செல்கிறார். உடனடியாய் சுதாரித்து பின்னங்காலுக்கு சென்று அப்பந்தை கவர் பகுதிக்கு விரட்டுகிறார். இது ஒரு விசித்திரமான ஷாட். அந்த மாதிரி பந்தை வழக்கமாய் வெட்டத் தான் முடியும். ஆனால் கவர் பகுதியில் ஆள் இல்லை என்பதை உணர்ந்து ஜடேஜா ஒரு புதுவித ஷாட்டை கண்டுபிடித்து அடித்தார்.


1996 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தின் இறுதிப் பத்து ஓவர்களில் ஒன்றில் ஜடேஜா வக்கார் யூனிஸின் பந்து ஒன்றை எதிர்கொண்டு கால் பக்கம் பிரம்மாண்ட சிக்ஸர் ஒன்று அடிக்கிறார். இந்த ஷாட் கூட ஜடேஜாவுக்கே உரித்தானது


அவரது பேட்டிங் நிலையமைதி (stance) புலி பதுங்கி இருப்பது போல குனிந்தபடி இருக்கும். சிக்ஸர் அடிப்பவர்கள் பொதுவாக பேட்டை உயரத் தூக்கி நிற்பார்கள் (சச்சின், யுவ்ராஜ் போல்). ஆனால் ஜடேஜா பேட்டை தாழ்வாகவே பிடித்திருப்பார். அடிக்கும் போது அவரது ஆற்றலும் வேகமும் அவரது வலுவான மணிக்கட்டில் இருந்து வரும். இந்த stance மற்றும் பேட்டை பிடிக்கும் விதம், follow through இல்லாமல் மணிக்கட்டின் வலு கொண்டு சிக்ஸர் அடிக்கும் பாணி நிச்சயம் தோனியை நினைவுபடுத்தும்

அதே ஆட்டத்தில், அடுத்த ஓவர் வீச வரும் வக்கார் யூனிஸ் ஜடேஜாவின் கால் பக்க சிக்ஸரை தவிர்க்கும் பட்சம் பந்தை இம்முறை off ஸ்டம்புக்கு வெளியே குறைநீளத்தில் (short of the lengh) வீசுகிறார். ஜடேஜா அதை டென்னிஸில் அடிப்பது போல் கிட்டத்தட்ட நேராக சிக்ஸருக்கு விளாசுகிறார். இன்று இது போன்ற ஷாட்களை T20யில் பல இளைஞர்கள் அடிக்கிறார்கள். தோனியும் இதே போல் offஇல் அடிக்க வேண்டியதை நேராக அடுக்கக் கூடியரே.


களத்தடுப்பில் ஸ்பைடர்மேன்:


ஜடேஜாவின் அபாரமான களத்தடுப்பும் தொண்ணூறுகளில் தனித்து தெரிந்தது. களத்தடுப்பின் உள், வெளி வட்டங்களில் நம் ஜடேஜா அளவுக்கு வேகமாய் ஓடி வந்து கேட்ச் பிடிப்பவர்களும் ரன் அவுட் செய்பவர்களும் 90களின் இந்திய அணியில் இல்லை.


ராத்திரிகள் வந்து விட்டால்


ஜடேஜா வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்க நினைத்தவர். இரவெல்லாம் கிளப்பில் டான்ஸ் ஆடி விட்டு காலையில் களமிறங்கி இந்தியாவுக்காக சதம் அடிப்பார். எப்போதும் ஸ்டைலான கூலிங் கிளாஸ் அணிந்து சூயிங் கம் மென்றபடி சிரிப்புடன் திகழ்வார். கொண்டாட்டம், காதலிகள், புகழ் வெளிச்சம் என வாழ்க்கையை திகட்ட திகட்ட ரசித்தார்.

இப்படி பேட்டிங், பீல்டிங், கூல்  அணுகுமுறை, ஆடும் போது முனைப்பு, ஆடாத போது கொண்டாட்டம் எனும் மனநிலை, ஸ்டைல், பார்ட்டி, காதலிகள் என தொகுத்தால் இன்றைய T20 யுகத்தின் ரோஹித், கோலி, யுவ்ராஜ் போன்றோருக்கு கச்சிதமான முன்னோடியாக ஜடேஜா தொண்ணூறுகளில் இருந்திருக்கிறார்.


சூதாட்ட சர்ச்சை:


சூதாட்டத்தில் ஈடுபட்டதாய் குற்றம் சாட்டப்பட்டு ஜடேஜா ஐந்து வருடங்கள் தடை செய்யப்பட்டார். ஆனால் பின்னர் குற்றம் நிரூபணம் ஆகாமல் நீதிமன்றத்தால் அவரது தடை நீக்கப்பட்டது. இன்று ஜடேஜா டி.வி வர்ணனையாளராக உள்ளார்.


கூடுதல் விபரங்கள்


ஜடேஜா ஒருநாள் ஆட்டங்களில் ஆறு சதங்களும் 30 அரைசதங்களும் அடித்தார்.


ஒருநாள் ஆட்டங்களில் நான்கு மற்றும் ஆறாவது வரிசையில் ஜடேஜாவும் அசருதீனும் இணைந்து அடித்த இரண்டு பார்ட்னர்ஷிப்கள் இன்றும் முறியடிக்கப்படாத சாதனை.


கெய்மற்றும்  “பல் பல் தில் கெ சாத்எனும் இரு இந்தி படங்களில் நடித்தார்.


ஜடேஜாவுக்கு குஜராத்தி, இந்தி, பஞ்சாபி, மலையாளம், தமிழ், ஆங்கிலம், கன்னடா, பெங்காலி ஆகிய மொழிகளில் பேச வரும்.


ஒருநாள் போட்டிகளில் ஏழு ஆட்ட நாயகன் விருதுகளை வென்றார்.


அவருக்கு பிடித்த ஹீரோ ஷாருக்கான்; கிரிக்கெட் வீரர்களில் கபில்தேவ் மற்றும் சச்சின்; பிடித்த மதுபானம் பக்கார்டி + கோக்; விருப்பமான இசை ரெகே.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...