செப் 24 2020 - பெங்களூர் vs பஞ்சாப் ஐபிஎல் ஆட்டம்
முதலில் மட்டையாடிய பஞ்சாப் 206 அடித்தது.
உமேஷ், ஸ்டெயின் போன்றோரின் மோசமான பந்து வீச்சு.
சாஹல் நன்றாக வீசினார் - அகர்வாலை பவுல்டாக்கியது அற்புதமான பந்து.
அதன் பிறகு சாஹலுடன் சுந்தர் மற்றும் துபே இணைந்து ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள்.
ஆனால் ராகுலின் 69 பந்து 132 பெங்களூரை நிலைகுலைய வைத்தது - வேகவீச்சாளர்கள் இறுதி ஐந்து ஓவர்களில் இன்னும் மோசமாக வீசி ரன்களை அள்ளிக் கொடுக்க பெங்களூர் குழம்பியது - எந்தளவுக்கு என்றால் கோலி பதற்றத்தில் இரண்டு கேட்சுகளை விட்டார், அதுவும் ராகுலின் கேட்சுகள்.
ராகுலின் 132 ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த சதங்களில் ஒன்று - அதுவும் அவர் தன் இன்னிங்ஸை கட்டமைக்க விதம், எந்த நேரத்தில் எப்படியான ஷாட்டுகளை அடிக்கலாம் எனும் முடிவு பாராட்டத்தக்கது.
அடுத்து மட்டையாட வந்த பெங்களூர் அணி 4 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது:
ஷாமிக்கு இந்த ஆடுதளம் கச்சிதமானது - குறைநீளத்தில் அவர் நேரான சீமில் வீச பந்து சீம் ஆகிறது, அப்படியே எகிறவும் செய்கிறது. இந்த ஆட்டத்தொடரில் ஷாமி மிக அதிகமாய் விக்கெட் எடுக்கப் போகிறார்.
அவரை ஆட ஒரே வழி இறங்கி சென்று அவரது குறை நீளத்தை முழுநீளமாக மாற்றி சற்றே தடுமாற வைப்பதுதான். இப்படியே வீச விட்டால் மட்டையாளர்களால் சமாளிக்க முடியாது.
கோட்டரலின் பந்து வீச்சில் அவரது ஸ்விங், வேகம், கட்டுப்பாடு ஆகியவை என அற்புதமாக அமைந்தது - கோலிக்கு தொடர்ச்சியாக இடதுகை வீச்சாளர்கள் தொல்லை அளிக்கிறார்கள், அவரது விக்கெட்டை சுலபத்தில் வீழ்த்துகிறார்கள். அதே போலத்தான் கால்சுழலர்களும். அதற்கு ஒரு காரணம் கோலியின் விரிந்த கால் அமைவு (open stance). இது அவர் இன்று பந்தை ஹூக் செய்ய முயன்று உள்-கள அமைப்பிலேயே கேட்ச் கொடுத்து வெளியேறக் காரணமாகியது.
இதே கால் அமைவு கொண்ட ஏ பி டிவில்லியர்ஸுக்கும் கால்சுழலர்கல் கூக்ளி பந்து வரும் போது இப்பிரச்சனை உள்ளது - அவரது ரெக்கார்ட் கால்சுழலர்களுக்கு எதிராக ஐபிஎல்லில் மோசமானது.
அடுத்து பந்து வீச வந்த கால்சுழலர்கள் ரவி பிஷ்னோய் மற்றும் முருகன் அஷ்வின் நன்றாக வீசினார்கள் - அதுவும் பிஷ்னாய் பந்தை அழகாக காற்றில் மிதக்க விட்டு பின்ஜை அது குறைநீளம் என நம்ப வைத்து வெட்ட செய்து பவுல்டாக்கினார். அற்புதமான பந்து.
முருகன் அஷ்வின் ஒரு திட்டத்துடன் டிவில்லியர்ஸுக்கு வீசினார் - ஆப் ஸ்டம்புக்கு வெளியே சற்றே குறைநீளத்தில் வீசின பந்து பவுண்டரி போனாலும் அடுத்த பந்தை அதே திசையில் ஆனால் முழுநீளத்தில் வீசி டிவில்லியர்ஸை எக்ஸ்டிரா கவருக்கு மேலாக அடிக்க வைத்து விக்கெட் எடுத்தார் - நீண்ட காலமாக டிவில்லியர்ஸின் பலவீனம் இது. (இதே கால் அமைவு கொண்ட தோனிக்கும் உள்ள பலவீனம் தான் இது.)
டிவில்லியர்ஸின் விக்கெட்டுடன் பெங்களூரின் முதுகெலும்பு உடைந்தது, நம்பிக்கையை இழந்து போய் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றனர்.
அடுத்த ஆட்டத்தில் பெங்களூர் என்ன செய்ய வேண்டும்?
கோலி உமேஷ் யாதவை கொஞ்சி சீராட்டாமல் அணியில் இருந்து நீக்க வேண்டும். அவரிடத்தில் வேகவீச்சாளர் சிராஜ் அல்லது இடதுகை சுழலர் ஷபாஸ் அஹ்மதைக் கொண்டு வரலாம்.
ஸ்டெயினும் சரியான ஆட்டநிலையில் இல்லை என்றாலும் அவர் தன் அனுபவத்தைக் கொண்டு மீண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். அல்லது அவரையும் நீக்கி விட்டு ஆடம் ஸாம்பாவைக் கொண்டு வரலாம்.
பிலிப்பின் இடத்தில் பார்த்திவ் பட்டேலை கொண்டு வர வேண்டும் - இந்த ஆடுதளங்களில் அவர் மேலாக ஆட வாய்ப்புள்ளது. அல்லது டிவில்லியர்ஸை கீப்பிங் செய்ய வைக்கலாம்.
மட்டையாட்டத்தை மட்டும் வைத்து பெங்களூர் அணியால் இத்தொடரை வெல்ல முடியாது - அதே போல சொதப்பிக் கொண்டிருக்கும் உமேஷை ஊக்கப்படுத்துகிறேன் என அவரை முதல் ஓவர் வீசச் சொல்வது முட்டாள்தனமானது. 8-14 தான் உமேஷ் வீச சரியான நேரம்.
கோலி இப்படியே காலங்காலமாய் தீவிர எதிர்முனைகளில் இருப்பவர் - ஒன்று ஒருவருக்கு விடாமல் ஆதரவு கொடுப்பார் (விஜய் சங்கர் - உலகக்கோப்பை; அம்பத்தி ராயுடு - அதற்கு முன்பு); ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அதே வீரரை கை விட்டு மறந்து விடுவார். இதன் விளைவை இன்று அவரது மனநிலை சரிவை, அதன் தாக்கத்தை பந்து வீச்சாளர்களின் இறுதி 8 ஓவர் பந்து வீச்சில் பார்த்தோம்.
பின்ஜ், படிக்கல், கோலி, டிவில்லியர்ஸ், பார்த்திவ், துபே, வாஷிங்டன் சுந்தர், ஸாம்பா, சாஹல், செயினி, மற்றும் சிராஜ் என என்னுடைய பெங்களுர் அணித்தேர்வு இருக்கும்.
கோலி நிதானமாக வேண்டும், நிதானமான அணித்தேர்வில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் இம்முறையும் பெங்களூருக்கு சங்கு தான்.

Comments