உதயநிதியின் இந்த அறிக்கை சற்று தாமதமாகவேனும் வந்துள்ளது பாராட்டத்தக்கது. திமுக தொண்டர்களும் இனி இதை கவனிக்க வெர்ண்டும்.
சூர்யா அரசியல் கட்சி சார்பற்றவர் என்பதாலே அவரது நீட் கண்டனம் கணிசமான மக்களை போய் சேர்கிறது, கவனம் பெறுகிறது, அவர் ஒரு பிரபலம் என்பதாலோ நடிகர் என்பதாலோ மட்டுமல்ல. இதுவே சூர்யா ஒரு கட்சியின் உறுப்பினராக அல்லது தலைவராக இருந்து இதைச் சொன்னால் அது தேர்தல் அரசியலாக மட்டுமே பார்க்கப்படும், எதிர்க்கட்சிகள் அவரைக் கண்டிப்பதையும் மக்கள் அப்படியே பார்ப்பார்கள். ஆனால் தேர்தல் அரசியலில் சம்மந்தப்படாத ஒருவர் இதைச் சொன்னால் ஒரு நம்பகத்தன்மை வந்து விடுகிறது. கூடவே அவர் அகரம் அறக்கட்டளை மூலம் ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்பவர் என்பதும் சேர்ந்து கொள்கிறது.
சூர்யாவுக்கு கிடைக்கும் கவனம் நீட்டுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் அரசியல் கட்சிகளிடம் இருந்து கவனத்தை அநியாயமாகத் திருப்பும் எனும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அரசியலுக்கு வரேன் வரேன் எனச் சொல்லிக்கொண்டே எந்தப் பிரச்சனையிலும் எதிர்வினையாற்றாமல் சிலர் கமுக்கமாகப் போய் விட, இதனால் எந்த பலனும் இல்லாத, கட்சி ஆரம்பிக்கும் திட்டமே இல்லாத ஒரு நடிகர் வெளிப்படையாக நடுவண் அரசுக்கு எதிராகப் பேச அபாரமான துணிச்சல் வேண்டும். இதுவும் மக்கள் அவரைப் பரவலாகப் பாராட்ட மற்றொரு காரணம்.
ரஜினி போன்ற கன்னடர்கள் ஒவ்வொரு பிணம் விழும்போதும் கைதட்டிக் கொண்டாடுவார்கள். ஒரு மக்கள் சமூகம் மீதான அன்பானது தோன்ற அம்மண்ணில் பிறந்து அதன் மகனாக தன்னை உணர்ந்தால் மட்டுமே சாத்தியம். கன்னடர்கள் மட்டுமல்ல, வேறு மாநிலத்தில் பிறந்தவர்கள், அல்லது இம்மண்ணில் பிறந்தாலும் வேறு மாநிலத்தை தன் சொந்த மண்ணாய் இதயத்தில் வைத்து வழிபடுகிற, பிழைப்புக்காக மட்டும் இம்மண்ணில் வாழ்கிறவர்கள் மக்கள் பிரச்சனைகளில் அந்நியமாகவே உணர்வார்கள். உ.தா., அண்ணாமலை இங்கு பிறந்தவர் என்றாலும் அவர் மனதளவில் கன்னடர்களிடத்தே இணக்கமாக உணர்கிறார், சாகும் வரை நான் கன்னடன் எனப் பேசும் அவர் ஒருபோதும் தன்னை ஒரு தமிழன் எனக் கூறி பெருமை கொள்ள மாட்டார். மாணவர்கள் செத்தாலும் நீட்டை ஆதரிப்பேன் என அவர் பிடிவாதம் பிடிப்பது தமிழ் உயிர்கள் மாயும் போது அவருக்கு அது வலிப்பதில்லை என்பதாலே. கிஷோர் ஸ்வாமி போன்று தமிழ் சமூகத்தில் இருந்து தன்னை அந்நியமாய் உணர்வோருக்கும், விரைவில் பாஜகவில் சேரப் போகும் விஷாலுக்கும் இது பொருந்தும்.
நீட் என்பது ஒரு அரசியல் பிரச்சனையல்ல, மொழிப் பிரச்சனை. மொழியால் தம்மை ஒரு தனி இனமாக உணரும் மக்கள் மீது அந்நியர்கள் தொடுக்கும் தாக்குதல்.
Comments