Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

வாரிசு அரசியல் - பாஜகவுக்கும் திமுகவுக்குமான வித்தியாசம்



நேற்று பாஜக தலைவர் எல் முருகனின் பழைய பேட்டி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் அவர் எந்த பின்புலமும் இல்லாத ஏழையின் மகனான தன்னை பாஜக மாநிலத் தலைவர் ஆக்கியதைப் போல ஏன் திராவிடம் கட்சிகளால் முடிவதில்லை என இடிக்காமல் இடித்துக் கேட்டார். பாஜகவுக்கு அப்படி ஒரு மரபு உண்டு (அங்கு பெரும்பணக்காரர்கள் தலைவர்கள் ஆவதும் நடப்பதுண்டு என்றாலும்). இதற்கான காரணம் என்னவென யோசிக்க வேண்டும்:

1) முதலில், இதற்கும் சமத்துவத்துக்கும் சம்மந்தமில்லை - பாஜகவின் தலைமை அமைப்பு வித்தியாசமானது: கட்சியின் பிரதான முடிவுகளை எடுக்க, பிரச்சாரத்துக்கு, மக்கள் ஒருங்கிணைப்புக்கு தொண்டர்படை அனுப்ப என ஆர்.எஸ்.எஸ் பிராமணத் தலைமை, அதன் கீழே ஆட்சி நடத்த சூத்திரர்களின் தலைமை (மோடி-ஷா; சில இடங்களில் இது பிராமணத் தலைமையாகவும் இருந்ததுண்டு), இவர்களுக்கு நிதியளிக்க வணிகர்களின் குழு ஒன்று, இந்த முத்தரப்பினருக்கும் பணிந்து வேலை செய்ய எல். முருகன் போன்ற மத்தியசாதி / தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு கூட்டம் (இதிலும் பிராமணர்கள் முன்னிற்பதுண்டு), அவர்களுக்கும் ரொம்ப கீழே கட்சிக்காக ஆன்லைனிலும் நேரடியாகவும் பேசுகிற பிராமணச் சாதியினரை பிரதானமாய் கொண்ட வாய்ச்சொல் வீரர்கள் (உ.பியில் இதே பிராமணர்கள் தொண்டர்படை, கீழ்த்தட்டு தலைமை, வாக்காளர்கள் என கணிசமாக இருப்பார்கள்.)

பாஜகவின் கட்சி கட்டமைப்பு இப்படி படிப்படியாக (வர்ணாசிரம அமைப்பைப் போன்றே) இருப்பதால் அங்கு அதிகாரம் பலவகையாகப் பிரிந்து ஒவ்வொரு இடமாய் குவிகிறது - முடிவெடுக்கும், மூளையாக செயல்படும் அதிகாரம் ஒரு பிரிவினருக்கு என்றால், நிதியளிக்கும், நிதியைப் பெருக்கி பயனடையும் அதிகாரம் இன்னொரு பிரிவினருக்கு என்றால், நிர்வாகம் செய்து இவ்விரு கரங்களையும் ஒன்றாய் பிணைத்து வழிநடத்தும் பொறுப்பு மற்றொரு பிரிவினருக்கு. பாஜக கிட்டத்தட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் பாணியில் நடக்கும், உணர்ச்சிகளற்ற ஒரு பிரமாண்ட எந்திரம் - கொடுக்கப்பட்ட பணியை செய்பவரே அங்கு தலைவர்; வாக்குகளை வெல்லத்தக்கவரோ, தேர்தலில் நிதியை இறைக்கும் திறன் கொண்டவரோ, பல்லாயிரம் பேர் திரளும் கூட்டங்களை தனியாக ஒருங்கிணைக்கும் தலைவராகவோ அவர் இருக்க அவசியமில்லை; இந்த ஒவ்வொரு பணிக்கும் அவர்கள் தனித்தனியாக ஆட்களை நியமிப்பார்கள். உ.தா., திமுக ஆளுங்கட்சியானால் ஒரு மா.செவுக்கு இருக்கும் அதிகாரத்தில் ஒரு பகுதி கூட பாஜக மத்தியில் ஆளும்போது தலைவர் எல்.முருகனுக்கு இராது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு பொருளாதார சார்ந்த முடிவெடுக்கும் உரிமைகள், பிரதமரிடம் கருத்து சொல்லி விவாதிக்கும் அதிகாரம் துளியும் இராது. அவர் தனக்கு அளிக்கப்பட்டதை செய்பவர் மட்டுமே. மேலும் பாஜகவின் தேர்தல் நிதியும் தலைவராகப்பட்டவரிடம் குவிந்திருக்காது. கடந்த ஆறு வருடங்களாக அதானி எனும் பினாமி மூலம் ஜி எத்தனையோ கோடானுகோடி பணத்தை அள்ளியிருப்பார் என்றாலும் அது கட்சி சொத்தல்ல.

இப்போது பாஜகவில் ஷாவுக்கும் மோடிக்கும் உள்ள அதிகாரம் கூட நிரந்தரம் அல்ல; என்று அவர்கள் வாக்குவங்கியை வெல்லும் தம் செல்வாக்கை இழக்கிறார்களோ, அன்று தூக்கியெறியப்படுவார்கள் (வாஜ்பாய், அத்வானி, ஜோஷிக்கு நடந்ததைப் போல). இந்த இரட்டையருக்குக் கீழே உள்ளோருக்கு அந்த தற்காலிக அதிகாரம் கூட இல்லை - அவர்களுக்குக் கீழே ஒவ்வொரு தட்டினருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் அதிகாரமும் “கட்டிங்கா ஷேவிங்கா?” எனக் கேட்கும் அளவுக்கான அதிகாரம் மட்டுமே.

இதை ஜனநாயகம் என்றால் அந்த ஹிட்லரே காறித்துப்பி விடுவார் - பாஜகவில் உள்ளது நம்முடைய பாரம்பரிய சாதியமைப்பில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அதிகாரப் பரவலாக்கம் மட்டுமே. எப்படி மரபான இந்திய சமூகத்தில் மதநம்பிக்கையும் வைதீகமும் மக்களை கட்டுக்குள் வைத்திருந்ததோ அவ்வாறே பாஜகவிலும் இந்துத்துவ கனவும், நவீன சனாதன நம்பிக்கைகளும் எதிர்கேள்வியின்றி தலைமைக்குப் பணியச் செய்கின்றன.

கார்ப்பரேட் சாமியார்களும் பீடாதிபதிகளும் மத்திய தலைமைக்கு உயர்நிலைத் தலைமைக்கும் இடையில் தரகர்களாக செயல்படுகின்றன (முருகன் அடிக்கடி காஞ்சி மடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதை இப்படியே பார்த்தாக வேண்டும்). இவர்களும் ஒரு எல்லையைக் கடந்து செல்ல முடியாது. 

 ஒரு திமுகவிலோ இவை அத்தனையும் (அதிகாரம், நிதி, நிர்வாகம்) ஒற்றைத் தலைமையின் கீழ் தொகுக்கப்படுகின்றன (ஜெயாவின் கீழ் அதிமுகவிலோ தொகுக்கப்பட்டன).  கட்சி நடத்தும், தேர்தலுக்கு செலவழிக்கும் நிதியில் பெரும்பகுதி தலைமையிடமும், உபதளபதிகளிடமும் (அல்லது பெருநிறுவன முதலாளி-தலைவர்களிடம்) இருக்கும். இவர்களின் தனிச்சொத்தே அதிகாரமும் ஆகிறது. இது ஒரு பக்கம் கட்சிக்கு ஸ்திரத்தன்மையைக் கொடுப்பதுடன், அதிகாரப் படிநிலையையும் நீண்ட காலம் மாற்றமற்று இறுக்கமாக்கி விடுகிறது.
 
தனிச்சொத்தின் ஒரு பிரச்சனை அதைத் தனிநபரால் மட்டும் பாதுகாக்க முடியாது என்பது - அதற்கு குடும்பத்தின் துணை அவசியம். குடும்பமே வல்லூறுகளிடம் இருந்து தனிச்சொத்தைப் பாதுகாக்கும். கூடவே, சொத்தை தொடர்ந்து பல தளங்களில் முதலீடு செய்து பெருக்கும். 

கட்சிக்குள் அதிகாரமும் தனிச்சொத்தும் ஒன்றாகவே பாவிக்கப்படுவதால் சொத்தை நிர்வகிக்கும் குடும்பமும் அதிகாரத்தின் பகுதியாகி விடுகிறது. கலைஞரின் குடும்பத்தை எடுத்துக் கொண்டால் என்னதான் கலகங்கள், அடிதடிகள் குடும்பத்துக்குள் இருந்தாலும் பெரிதளவுக்கு சிதறாமல் இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். இதுவே கலைஞரையும் அவரது தலைமையின் கீழ் திமுகவையும் பாதுகாத்து வந்தது. அவரை சிறையிலிட்டால் மொத்த குடும்பமும் தெருவில் இறங்கி வந்து சண்டை போட்டது; குடும்ப வாரிசான ஒரு தலைவருக்கோ அவரது ஆதரவாளரான பிற தலைவர்களுக்கோ பிரச்சனையென்றால் மொத்த கட்சியும் ஆதரவு தந்து பாதுகாத்தது. 

தலைவர்-தனிச்சொத்து-உப-தலைவர்களின் அதிகாரம்-அவர்களின் தனிச்சொத்து-அவர்களின் குடும்பம்-தலைவரின் குடும்பம் என இந்த வட்டம் துவங்கின இடத்தில் முடிந்து ஒரு கச்சிதமான அரணாகிறது. தொண்டர்கள், மத்திய, கீழ்நிலைத் தலைவர்கள், ஆதரவாளர்கள் இதற்கு வெளியே இருந்து கட்சியை வளர்க்கிறார்கள், செஸ் பலகையில் படைவீரர்களைப் போல.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சற்றே மாறுபட்ட ஒரு நிர்வாக முறையை, கட்டமைப்பை பின்பற்றியது - அங்கு தலைவரிடம் செல்வத்தின் பெரும்பகுதி போய்ச் சேர வேண்டும். ஒரு சிறிய கட்டிங்கை தளபதிகள் எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக சுருட்டுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். இத்துடன் கொள்ளையடிப்பது கார்ப்பரேட் பாணியில் பிரம்மாண்டமாக நடந்தது. இப்போது தலைமை பணத்துக்காகவும், களப்பணிக்கு ஆட்களைத் திரட்டவும் உபதலைவர்களை நாட வேண்டியிருக்கவில்லை. மாறாக, பெருமளவுக்கு ஒரு புள்ளியில் குவிக்கப்படும் பணத்தின் ஒரு பகுதியை பங்கிட்டு செலவுக்காக மேலிருந்து கொடுப்பார்கள். இதனால் ஒரு சிறிய அளவிலான (கார்ப்பரேட்) ஜனநாயகத்தன்மை அதிமுகவில் ஏற்பட்டது - இது பாஜகவின் செயல்முறைக்கு சற்றே நெருக்கமானது.

 அதிமுகவில் தலைமைக்கு நெருங்க ஒருவர் தன்னை துடிப்பான, விசுவாசமான செயல்வீரராகக் காட்டினால் போதும் (ஷா தலைமையிலான பாஜகவிலும் அப்படியே). எம்.எல்.ஏ, அமைச்சர் என சில மாதங்களிலேயே அவரது நிலை உயர்த்தட்டுக்கு வளர்ந்து விடும்; தலைமைக்கு அதிருப்தி வந்தால் அடுத்த நாளே அவர் தெருவுக்குப் போய் விடுவார் - எங்கள் ஊரில் எனக்குத் தெரிந்தே சும்மா தெருவில் திரிந்து கொண்டிருந்த ஒரு அதிமுககாரர் அம்மா தலைமை வந்து ஆட்சியைக் கைப்பற்றின பின்னர் சட்டென எம்.எல்.ஏவாகி அமைச்சராகி அப்பதவியையும் சில மாதங்களிலே இழந்தார். இந்த நிலையின்மைக்குக் காரணம் அவருக்கு தனிச்சொத்தை ரொம்ப பெருக்கிக் கொள்ள, தன்னை ஒரு ஆகிருதியாகக் காட்டிக்கொள்ள அத்தகைய கார்ப்பரேட் அமைப்பில் அனுமதியில்லை என்பதே. அடுத்து, ஜெயலலிதாவின் இந்த ஒற்றை அதிகாரப்புள்ளியில் சொத்தைக் கொண்டு வரும் அரசியலின் பலனாக அதிமுகவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பலருக்கு கட்சிப்பொறுப்புகள், எம்.எல்.ஏ, அமைச்சர் போன்ற பதவிகள் (திமுகவில் கிடைப்பதை விட பல மடங்கு) அதிகமாய் வழங்கப்பட்டன.

இந்த இரு கழகங்களிலும் கொள்கை என்பது ஒரு வரைபடம் மட்டுமே, அது அவர்களை கராறாய் கட்டுப்படுத்தும் ஒரு மையவிசை அல்ல. தலைமையே அவர்களது ஒரே புவியீர்ப்பு விசை. (பாஜகவில் கொள்கையே புவியீர்ப்பு விசை.)

ஆனால் ஜெயலலிதா ஆரம்பித்த வைத்த அதிகார நிலையின்மை அவரையே சாய்த்தது - தனக்குக் குடும்பம் இல்லையென்பதாலே தனிச்சொத்தைப் பெருக்கவும் பாதுகாக்கவும் அவர் சசிகலா குடும்பத்தை சார்ந்திருக்க நேர்ந்து, பின்னர் அக்குடும்பத்தாலே சொத்துக்காக, அதிகாரத்துக்காக காலி செய்யப்பட்டு கொடூரமாக மரணமடைந்தார்.   
இதனாலே ஒ.பி.எஸ், இ.பி.எஸ் போன்றோர் ஜெயலலிதாவைப் பின்பற்றாமல் தம் குடும்ப வாரிசுகளுக்கு அதிகாரத்தை, செல்வத்தை பகிர்ந்தளித்து வளர்த்தெடுக்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு அது மட்டுமே பாதுகாப்பளிக்கும்.
அதே நேரம், ஒற்றைத் தலைமை ஒன்றால் இந்த தனித்தனியான சொத்துக் குவிப்புகளை கட்சிக்காக கட்டுப்படுத்த முடியாவிட்டால் கட்சி நொண்டத் தொடங்கும், உடைந்து திசைக்கொன்றாய் வேரூன்றும் (அதிமுகவின் எதிர்காலம்).

திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதிக்கு சிம்மாசனம் தயாராவதையும் இப்படியே பார்க்கிறேன் - மக்கள் ஆதரவு வாரிசுகளுக்கே எனும் வாதத்தை நான் ஏற்கவில்லை. கட்சி தன்னை தக்க வைப்பதற்குத் தேவையான தனிச்சொத்தை பாதுகாப்பதற்கான உபயமே இந்த வாரிசு அரசியல்.

நாம் பின்பற்றும் பொருளாதார அமைப்பின் ஒரு விளைவே இந்த வாரிசு அரசியல். நானும் நீங்களும் வீட்டில், நம் குடும்பத்தில் ஆடுகிற அரசியலையே அவர்கள் கட்சி எனும் பெரிய தளத்தில் ஆடுகிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் வேறு வித்தியாசமில்லை.

திராவிடக் கட்சிகளைப் போன்ற பிற பிராந்தியக் கட்சிகளும் இந்தியா முழுக்க இப்படித்தான் செயல்படுகின்றன. இவற்றினால் மத்திய சாதிகளும், தலித் சாதிகளும் வலுப்பெற்றன (உ.பி, பீகாரில் இருந்து தமிழகம் வரை எடுத்துக் கொண்டால்). ஆனால் பாஜகவினால் இத்தாக்கம் ஏற்படாது. பாஜக தான் ஆளும் மாநிலத்தில் ஏற்கனவே வலுவாக உள்ள சமூகங்களை அனுசரித்துப் போகுமே ஒழிய அச்சமூகங்கள் அதிகாரத்தின் உச்சிக்கோ செல்வத்தைக் குவிக்கவோ உதவாது. பாஜக இந்த அதிகாரத்தையும் சொத்தையும் தனக்குள் செரித்துக்கொள்ளும் ஒரு கார்ப்பரேட் சனாதனவாத அமைப்பு. 

கொள்கையளவிலும் அதிகாரத்திலும் யாரெல்லாம் தேவைப்படுகிறார்களோ அவர்களை மட்டுமே கட்சி காப்பாற்றும் - உ.பியில் ஆதித்யநாத்தின் ஆட்சியின் கீழ் பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாய், தாகூர்கள் அதிக அதிகாரம் பெறுவதாய் வலுவான குற்றச்சாட்டு உள்ளது, பிராமணர்களை மையமாகக் கொண்ட கட்சி பாஜக என நாம் சொல்லும் போதே அவர்களைத் தூக்கி குப்பையில் போடவும் தயங்காதக் கட்சியாகவும் பாஜக இருக்கும் (தமிழகம் மற்றொரு உதாரணம்). நாளை ஆதித்யநாத் போய்விட்டால் தாகூர்களும் குப்பைக்குப் போக வேண்டியதுதான்.

மாநிலக் கட்சிகள் இப்படி வரலாற்றில் எந்த சமூகத்தையும் கைவிடாது எனலாம்.

திராவிடக் கட்சிகளால் சமூகப்பொருளாதாரத் தளங்களில் நிகழ்ந்த முன்னேற்றத்தை நீங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் காண முடியாது. ஒரு மக்கள் திரள் தனது சமுதாயத்துக்காக குரல் கொடுக்கவும் பாஜகவில் முடியாது: தேசத்துக்காக மட்டுமே பேசு எனக் கேட்பார்கள். தேசம் என்றால் என்ன? தேசம் என்றால் பாஜக. பாஜக என்றால் என்ன? பாஜக என்றால் அதன் ஒரே தலைவர். ஜி. ஜி என்றால் இந்துத்துவ கனவின் முகம். ஆக தேசம் = இந்துத்துவா. இந்துத்துவாவுக்காக குரல் கொடுத்து எல். முருகன் தனது அருந்ததியினர் சமூகத்துக்கு ஏதாவது செய்ய முடியுமா? ம்ஹும். அவரால் முடிந்ததெல்லாம் தன் சாதிக்காரர்களுக்கு சில பொறுப்புகளை கட்சியில் வாங்கிக் கொடுப்பதுதான் - மற்றபடி அ.ராசா அளவுக்கு வெளிப்படையாக சாதியமைப்பை சாடவோ, திருமா, ரவிக்குமார் மற்றும் பிற விடுதலைச்சிறுத்தையினர் அளவுக்கு சாதி எதிர்ப்பரசியலை முன்னெடுத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக அரசியலில் ஈடுபட செய்யவோ - ஒரு பா.ரஞ்சித்தும் மாரி செல்வராஜும் சினிமாவில் தோன்ற வழிவகுக்கவோ - முடியாது. சொல்லப் போனால், இந்துத்துவாவினால் தாழ்த்தப்பட்டோர் எழுச்சி நாடுமுழுக்க நீர்த்துப் போகவே வாய்ப்பதிகம்.

பாஜகவில் வாரிசு அரசியல் பெரிதாய் இல்லாததற்குக் காரணம்  இதுவே, ஆனால் இதனால் அங்கு சமத்துவம் உள்ளதாகவோ, மக்கள் திரள் இதனால் சமத்துவம் பெறும் என்றோ கூற முடியாது. பாஜகவில் பொருளாதார, கொள்கையளவில் தம்மை ஆதரிப்போரிடம் அதிகாரம் வெவ்வேறு புள்ளிகளில் போய் குவிகிறது. அது மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. ஆகையால் வாரிசு அரசியல் இல்லாததால் பாஜக ஜனநாயகரீதியான, சமத்துவமான கட்சி என்பது ஒரு பொய்ப்புரட்டு ஆகும். அங்கு புதிய தலைவர்களுக்கு அளிக்கப்படுவது அதிகாரமற்ற பொறுப்பு - அவர்களுக்கோ அவர்களின் சமூகங்களுக்கோ பெரிதும் பயன் தராத, தேசவளர்ச்சிக்குக் கூட பலனளிக்காத, கார்ப்பரேட்டுகளையும் மதவாத அமைப்புகளையும் மட்டும் செழிக்க வைக்கிற “கட்டிங்கா ஷேவிங்கா” பொறுப்பு.

திமுக போன்ற பிராந்தியக் கட்சிகளைப் பொறுத்தமட்டில் வாரிசு அரசியல் என்பது சமூகத்தின் ஆழத்தில் உள்ள ஒரு பொருளாதாரச் சீர்கேட்டின் நோய்க்குறி மட்டுமே. இந்நாட்டின் சொத்துக்கள், இயற்கை வளம், பணம் அனைத்தும் அனைவருக்கும் சொந்தமாகும் ஒரு அமைப்பு தோன்றாதவரையில் அந்த சீர்கேடு தொடரும், நோய்க்குறியும் வெளிப்பட்டபடி இருக்கும்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...