Skip to main content

C U Soon - திரைக்கதை பிரச்சனைகள்



 சமூகவலைதளங்களில் அவ்வளவு கொண்டாடப்பட்ட C U Soon ஒரு புத்திசாலித்தனமான, ஒரு முக்கியப் பிரச்சனையைப் பேசுகிற படம், ஆனால் அதைத் தாண்டி பார்த்தால் அது ஒரு சொதப்பலான திரைக்கதை. திரைக்கதையில் உள்ள முக்கியமான ஓட்டையை மறைக்க இறுதி 20 நிமிடங்களில் நமது நெஞ்சை உருக வைத்து விடுவார்கள், ஆனால் மீளப் பார்த்தால் இதே தாக்கம் இருக்காது. ஏன்?


முதலில், படம் ஆரம்பிக்கும் போது இது ஜிம்மியின் கதையாக இருக்கிறது - அண்மையில் ஒரு பெண்ணிடம் ஏமாந்தவன் அல்லது ஏதோ பெண் பிரச்சனையில் மாட்டிக்கொண்டவன் அவன் என போகிற போக்கில் சொல்லுகிறார்கள். அப்படியே டேட்டிங் ஆப்பில் சந்தித்த அனு எனும் அடுத்த பெண்ணிடம் அவன் யோசிக்காமல் காதலில் விழுகிறான். தன் அம்மா மற்றும் சகோதரியிடம் ஆன்லைனிலே அவளை அறிமுகப்படுத்துகிறான். அவனது அம்மா அவளைப் பற்றி விசாரிக்க அவர்களின் உறவினனான கெவினிடம் (பகத் பாஸில்) கேட்கிறார். இங்குதான் படம் ஆரம்பிக்கிறது. அனுவின் வாழ்க்கையில் ஏதோ புதிர் உள்ளது. அவள் தன்னைப் பற்றி நிறைய மறைக்கிறாள். அல்லது அவளை ஜிம்மி ஏமாற்றப் போகிறானா? இப்படி ஒரு குழப்பம் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.


அனு ஒருநாள் தன்னைத் தன் அப்பா மிகவும் துன்புறுத்துவதாகச் சொல்லி ஜிம்மியின் உதவியைக் கேட்க அவன் அவளை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறான். இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதனிடையே அனு ஒருநாள் தற்கொலைக் கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போகிறாள். அவளது அப்பா அன்று அவளை வந்து சந்தித்திருக்கிறார். அவளை ஜிம்மி கொன்று விட்டான் என சந்தேகித்து போலிசார் அவனைத் தேடி வந்து வீட்டுக்க்காவலில் வைக்கிறார்கள். கெவின் இப்போது தலையிட்டு இணையத்தில் தேடி உண்மையை கண்டுபிடிக்கிறான். ஆனால் அப்போதே அனு ஜிம்மியின் அம்மாவிடம் அந்த உண்மையைச் சொல்லி விடுகிறாள் - அவள் துபாய்க்கு வேலை தேடி வந்து விபச்சாரத்தில் மாட்டிக்கொண்டு துன்பப்பட்டவள். அப்போதே ஜிம்மியின் தொடர்பு கிடைக்க தன்னை சிறைவைத்துள்ள மாபியாவிடம் இருந்து தப்பித்து இந்தியாவுக்குத் திரும்ப அவள் அவனை பயன்படுத்துகிறாள். 

ஜிம்மி அவளை மன்னிக்கிறானா, அவன் அவளுடன் இணைகிறானா என்பதே மிச்சக் கதை.


இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும் இது ஜிம்மியின் கதையல்ல, அனுவின் கதை என. ஒரு சரியான திரைக்கதையில் இது அனுவின் நோக்கத்தில் இருந்தே, அதற்கான காரணத்தில் இருந்தே ஆரம்பித்து அவளிடத்தே முடிந்திருக்க வேண்டும். அவளது பார்வையில் இருந்து ஜிம்மியும் பிறரும் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஜிம்மியிடம் இருந்து ஆரம்பித்து கிளைமேக்ஸ் வரை கதையை எடுத்துச் சென்று அனுவை ஒரு புதிரானப் பெண்ணாகக் காட்டுவது சஸ்பென்ஸுக்காக, அதிர்ச்சி மதிப்புக்காக, பார்வையாளர்களை ஏமாற்றி படத்தை பார்க்க வைக்க மட்டுமே. அதனாலே இரண்டாவது, மூன்றாவது முறைப் பார்க்கும் போது இப்படம் உங்களுக்கு போரடிக்கும் என்கிறேன். 


ஜிம்மியின் அடிப்படையான தேவை அன்பை, காதலைக் கண்டடைவது. இணையத்தில் உள்ள பேக் ஐடிகள், அடையாளத்தை மறைத்த உறவாடல்களின் போலித்தனத்தைக் கடந்து உண்மையான பரிவை, பாசத்தை ஒரு பெண்ணிடத்து காண்பது. இதை ஓரளவுக்கு கிளைமேக்ஸில் காட்ட முயன்றிருக்கிறார்கள் என்றாலும் உணர்வுரீதியாக நிறைவளிக்காமல் போய் விடுகிறது. 


இயக்குநர் மகேஷ் நாராயணனின் Takeoff இதைவிட நேர்த்தியான, தெளிவான திரைக்கதையைக் கொண்ட படம். C U Soon கதையை அவர் அவசரமாய் உருவாக்கி இருக்கிறார் எனத் தோன்றுகிறது. அதிகமாய் வெளியே செல்லாமல் ஐபோனில் படம்பிடித்து சிறப்பாய் தொகுத்திருக்கிறார் என்பதை பாராட்டலாம். இதே பாணியில் அமைந்த Searching படத்தையும் பார்க்கலாம் - அதனோடு ஒப்பிட்டால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உடனடியாய் புரிந்து போகும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...