முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

C U Soon - திரைக்கதை பிரச்சனைகள்



 சமூகவலைதளங்களில் அவ்வளவு கொண்டாடப்பட்ட C U Soon ஒரு புத்திசாலித்தனமான, ஒரு முக்கியப் பிரச்சனையைப் பேசுகிற படம், ஆனால் அதைத் தாண்டி பார்த்தால் அது ஒரு சொதப்பலான திரைக்கதை. திரைக்கதையில் உள்ள முக்கியமான ஓட்டையை மறைக்க இறுதி 20 நிமிடங்களில் நமது நெஞ்சை உருக வைத்து விடுவார்கள், ஆனால் மீளப் பார்த்தால் இதே தாக்கம் இருக்காது. ஏன்?


முதலில், படம் ஆரம்பிக்கும் போது இது ஜிம்மியின் கதையாக இருக்கிறது - அண்மையில் ஒரு பெண்ணிடம் ஏமாந்தவன் அல்லது ஏதோ பெண் பிரச்சனையில் மாட்டிக்கொண்டவன் அவன் என போகிற போக்கில் சொல்லுகிறார்கள். அப்படியே டேட்டிங் ஆப்பில் சந்தித்த அனு எனும் அடுத்த பெண்ணிடம் அவன் யோசிக்காமல் காதலில் விழுகிறான். தன் அம்மா மற்றும் சகோதரியிடம் ஆன்லைனிலே அவளை அறிமுகப்படுத்துகிறான். அவனது அம்மா அவளைப் பற்றி விசாரிக்க அவர்களின் உறவினனான கெவினிடம் (பகத் பாஸில்) கேட்கிறார். இங்குதான் படம் ஆரம்பிக்கிறது. அனுவின் வாழ்க்கையில் ஏதோ புதிர் உள்ளது. அவள் தன்னைப் பற்றி நிறைய மறைக்கிறாள். அல்லது அவளை ஜிம்மி ஏமாற்றப் போகிறானா? இப்படி ஒரு குழப்பம் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.


அனு ஒருநாள் தன்னைத் தன் அப்பா மிகவும் துன்புறுத்துவதாகச் சொல்லி ஜிம்மியின் உதவியைக் கேட்க அவன் அவளை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறான். இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதனிடையே அனு ஒருநாள் தற்கொலைக் கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போகிறாள். அவளது அப்பா அன்று அவளை வந்து சந்தித்திருக்கிறார். அவளை ஜிம்மி கொன்று விட்டான் என சந்தேகித்து போலிசார் அவனைத் தேடி வந்து வீட்டுக்க்காவலில் வைக்கிறார்கள். கெவின் இப்போது தலையிட்டு இணையத்தில் தேடி உண்மையை கண்டுபிடிக்கிறான். ஆனால் அப்போதே அனு ஜிம்மியின் அம்மாவிடம் அந்த உண்மையைச் சொல்லி விடுகிறாள் - அவள் துபாய்க்கு வேலை தேடி வந்து விபச்சாரத்தில் மாட்டிக்கொண்டு துன்பப்பட்டவள். அப்போதே ஜிம்மியின் தொடர்பு கிடைக்க தன்னை சிறைவைத்துள்ள மாபியாவிடம் இருந்து தப்பித்து இந்தியாவுக்குத் திரும்ப அவள் அவனை பயன்படுத்துகிறாள். 

ஜிம்மி அவளை மன்னிக்கிறானா, அவன் அவளுடன் இணைகிறானா என்பதே மிச்சக் கதை.


இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும் இது ஜிம்மியின் கதையல்ல, அனுவின் கதை என. ஒரு சரியான திரைக்கதையில் இது அனுவின் நோக்கத்தில் இருந்தே, அதற்கான காரணத்தில் இருந்தே ஆரம்பித்து அவளிடத்தே முடிந்திருக்க வேண்டும். அவளது பார்வையில் இருந்து ஜிம்மியும் பிறரும் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஜிம்மியிடம் இருந்து ஆரம்பித்து கிளைமேக்ஸ் வரை கதையை எடுத்துச் சென்று அனுவை ஒரு புதிரானப் பெண்ணாகக் காட்டுவது சஸ்பென்ஸுக்காக, அதிர்ச்சி மதிப்புக்காக, பார்வையாளர்களை ஏமாற்றி படத்தை பார்க்க வைக்க மட்டுமே. அதனாலே இரண்டாவது, மூன்றாவது முறைப் பார்க்கும் போது இப்படம் உங்களுக்கு போரடிக்கும் என்கிறேன். 


ஜிம்மியின் அடிப்படையான தேவை அன்பை, காதலைக் கண்டடைவது. இணையத்தில் உள்ள பேக் ஐடிகள், அடையாளத்தை மறைத்த உறவாடல்களின் போலித்தனத்தைக் கடந்து உண்மையான பரிவை, பாசத்தை ஒரு பெண்ணிடத்து காண்பது. இதை ஓரளவுக்கு கிளைமேக்ஸில் காட்ட முயன்றிருக்கிறார்கள் என்றாலும் உணர்வுரீதியாக நிறைவளிக்காமல் போய் விடுகிறது. 


இயக்குநர் மகேஷ் நாராயணனின் Takeoff இதைவிட நேர்த்தியான, தெளிவான திரைக்கதையைக் கொண்ட படம். C U Soon கதையை அவர் அவசரமாய் உருவாக்கி இருக்கிறார் எனத் தோன்றுகிறது. அதிகமாய் வெளியே செல்லாமல் ஐபோனில் படம்பிடித்து சிறப்பாய் தொகுத்திருக்கிறார் என்பதை பாராட்டலாம். இதே பாணியில் அமைந்த Searching படத்தையும் பார்க்கலாம் - அதனோடு ஒப்பிட்டால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உடனடியாய் புரிந்து போகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...