வானதி சீனிவாசன் சுய-உதவிக் குழுக்களுடன் பேசுவதை நேரலையில் பார்த்தேன். மோடி அரசு மகளிர் சுய-உதவி செய்வதற்காக வழங்குகிற கடன்களைப் பற்றி பேசிய அவர் நேர்மையான நோக்கத்துடன் வருகிறவர்களுக்கே உதவி கிடைக்கும், தொழிலுக்கு அவசியமான தொகையை மட்டுமே கோர வேண்டுமென்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார். தேவைப்படும் பெண்களுக்கு சராசரியாக பத்தாயிரம் ரூ வாங்கித் தருகிறோம் என்றவர் கடைசியாய் சொன்னதுதான் முத்தாய்ப்பு - அவர் இதைப் போல முன்பு வாழ வழியில்லாத ஏழைகளுக்கு பத்தாயிரம் ரூ வாங்கிக் கொடுத்த போது அவர்கள் தனக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டினார்கள் என்றார். சுவரொட்டி அச்சிட்டு நன்றி தெரிவிக்க பணமுள்ளவர்கள் தாம் வாழ வழியில்லாதவர்களா? இந்த சுய-உதவி குழுவினரிடம் இதைச் சொல்வதன் நோக்கம் என்ன? நாங்கள் உதவி செய்கிறோம், நீங்கள் சுவரொட்டி ஒட்டுங்கள் என்றா? உதவி கிடைக்குதோ இல்லையோ விளம்பரத்தை மறந்திடாதீங்க என்றா? இல்லை, இந்த வங்கிக் கடன் உதவியெல்லாம் விளம்பரத்துக்காக இவர்களே வாங்கி இவர்களே அடித்து ஒட்டிக்கொள்வதற்கான ஏற்பாடா?
அதே போல ‘பிரதம மந்திரி’ செல்வமகள் என ஒரு திட்டத்தைப் பற்றியும் பேசினார் - இதன்படி 8 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகள் ஏழையாகவும், அப்பா இறந்து போன கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறவர்களாகவும் துன்புறும் நிலையில் - இனிமேல் தான் மேட்டரே வருகிறது - இத்திட்டத்தில் இணைந்து வருடத்திற்கு குறைந்தது 1000 ரூ கட்ட வேண்டும். பதினெட்டு வயது நிறைவுற்றதும் இப்படி வருடாவருடம் கட்டின தொகையுடன் அரசு ஒரு தொகையையும் சேர்த்து ‘மொத்தமாய்’ ஒரு தொகையை அளிக்கும் என்றார். அரசு போடுகிற உபரித் தொகை எவ்வளவு என சொல்ல மாட்டேன் என்கிறார். அதாவது வருடாவருடம் ஏழை மக்கள் உழைத்து சம்பாதிக்கிற பணத்தை வங்கியில் செலுத்தினால் அதை சேர்த்து (வருங்கால வைப்பு நிதியைப் போல) அரசே 10 வருடம் கழித்து அவர்களுக்கு திரும்பத் தருமாம். இதன் பெயர் உதவித் தொகையா? அப்பணத்தை வங்கியில் சும்மா போட்டால் வட்டி வருமே? இதே போன்ற திட்டம் எல்.ஐ.சியில் உண்டே? சிறுசிறுக இதைப் போல பணத்தை வாங்கி தங்க நகையாகத் தரும் திட்டம் தனியாரிடம் உண்டே? இதை செய்ய எதற்கு ஒரு அரசு?
அண்மையில் இன்னொரு திட்டத்தை நமது பிரதமர் படோடோபமாக அறிவித்தார் - இதன்படி சொந்தமாய் நிலம் உள்ளவர்களுக்கு ஒரு அட்டையை ‘இலவசமாய்’ அளிக்கிறார்கள். இந்த அட்டையைக் காட்டி வங்கியில் இருந்து ‘ஏழைகள்’ தங்கள் விவசாயத்துக்கு கடன் வாங்கிக் கொள்ளலாமாம். இப்படி கடன் வங்கிக் கொடுக்க எதற்கு அரசு? அதற்கு எதற்கு ஒரு அட்டை? மாநிலங்கள் தமக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைக் தொகையை கேட்டாலும் கடன் வங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள், ஏழைகள் உதவி வேண்டினால் உங்க பணத்தை எங்களிடம் கொடுங்கள், பின்னர் மொத்தமாய் திருப்பித் தருகிறோம் அல்லது உங்கள் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிட நில ‘அட்டை’ தருகிறோம் என்கிறார்கள்.
ஆயுதம் வாங்கவும், பிரதமருக்கு 500 இருக்கை கொண்ட தனியார் விமானம் வாங்க மட்டும் இந்த அரசிடம் பணம் உண்டா?
ஒரு அரசு என்பது சௌகார் பேட்டை சேட்டைப் போலவா செயல்படுவது? குஜராத்திகளிடம் ஆட்சியைக் கொடுத்ததன் விளைவு தானா இது? அடக்கொடுமையே!

Comments