அணித்தேர்விலும் பந்து வீச்சுத்தேர்விலும் நடந்த குளறுபடியால் இன்றைய போட்டியை தில்லியிடம் சென்னை அணி தோற்றது.
அதனால் அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் இரு மாற்றங்களை செய்தாக வேண்டும்:
1) வாட்ஸனின் இடத்தில் இம்ரான் தாஹிர்
2) கேதார் ஜாதவின் இடத்தில் ஜகதீசன்
1) வாட்ஸன் எப்போது வேண்டுமானாலும் ஆட்டநிலைக்கு மீண்டு பிரம்மாண்டமாக அடித்தாடலாம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவரது உடற்தகுதி, களத்தடுப்பு, ஓடும் வேகம் அவரது அணியை பெரிய அளவில் பாதிக்கிறது. களத்தடுப்பில் ஒரு 8-10 ரன்கள், ஒற்றை, இரட்டை ரன்கள் ஓடாமல் இன்னொரு 15-20 ரன்கள். குறைந்தது இவரால் 20 ஓட்டங்களாவது சென்னை ஆரம்பத்திலேயே இழக்கிறது. ஆக இப்போதைய புயலின் போது கப்பலில் இருந்து கடலில் வீசுவதற்கு ஏற்ற பீரோ வாட்ஸன் தான்.
தாஹிரால் மத்திய ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். இன்று ஏற்பட்ட நிலை வந்தால் அவரால் இறுதி ஓவரைக் கூட வீச முடியும். தோனிக்கு நிச்சயமாய் 7 வீச்சாளர்கள் தேவை. ஏனென்றால் ஜடேஜாவை நம்பி 2 ஓவர்களை ஒதுக்குவது ஆபத்தானது. அவரது மட்டையாட்டம் நல்ல ஆட்டநிலையில் இருக்க, பந்துவீச்சோ இத்தொடர் முழுக்கவே சொதப்பல் தான்.
2) ஜாதவ் ஒரு டம்மி போலீஸ். சென்னை அணிக்குள் சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருக்க வந்த வீட்டோடு மாப்பிள்ளை அவர். களத்தடுப்பில்லை, மட்டையாட்டமில்லை, பந்து வீச்சுமில்லை. சுத்த வேஸ்ட். சாம் கரன் மற்றும் டூ பிளஸி துவக்க வீரர்கள், ராயுடு மூன்றாவது, ஜகதீஸன் நான்காவது என அடுத்த போட்டியில் நான் மட்டையாட்ட வரிசையை அமைக்க விரும்புவேன்.
இன்னொரு தேர்வு சாத்தியம் வாட்ஸனின் இடத்தில் மிச்சல் சாண்டினரைக் கொண்டு வருவது. அப்போது அணியில் 2 பிரதான வேக வீச்சாளர்கள், ரெண்டு மிதவேகவீச்சு ஆல்ரவுண்டர்கள், ஒரு கால் சுழலர் ஒரு இடதுகை சுழலர் இருப்பார்கள். (இன்று நடந்ததைப் போல) இவர்களில் ஒன்றிரண்டு பேர் சொதப்பினால் கூட அணியை அது பெரிதாய் பாதிக்காது.



Comments