பாஜக மகளிரணியின் போராட்டத்துக்கு எடப்பாடி அரசு தடை விதித்தது, அடுத்து குஷ்புவை கைது செய்தது. இவையிரணையும் அதிமுக அதே பாஜகவின் அறிவுறுத்தலின், தூண்டுதலின் பெயரிலே செய்கிற என்பது தான் ஒரு கிரிகாலன் மேஜிக். ஏன்?
பீகாரின் நிதீஷ்குமாரை வைத்து ஆடும் அதே அரசியல் சதிராட்டத்தைத் தான் பாஜக இங்கும் எடப்பாடியை வைத்து ஆடுகிறது:
பீகாரில் நிதீஷ்குமாருடன் கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு எதிரானவர் தாம் எனும் பிம்பத்தையும் பாஜக தக்க வைக்கிறது. நிதீஷின் பிரதான எதிரிகளில் ஒருவரான சிராக் பாஸ்வானுடன் இத்தேர்தலில் தாம் ஒரு மறைமுகக் கூட்டணியில் உள்ளதாய் நுட்பமாய் உணர்த்துகிறது. இதன் மூலம் நிதீஷ்குமார் ஆட்சி மீது மக்களுக்கு உள்ள கோபம், அதிருதியின் பலன்கள் தேஜஸ்வி யாதவுக்கு வாக்குகளாக மாறி விடக் கூடாது என திட்டமிடுகிறது. அதாவது ஆளும் கூட்டணியில் இருந்தாலும் அது தம் கூட்டணி அல்ல என உணர்த்துகிற பார்ப்பனிய தந்திரம் ஒரு பக்கம், ஆளுங்கட்சி கூட்டணி மீதான அந்த அதிருப்தி வாக்குகளை மடைமாற்றி தம்முடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்கப் போகிற மூன்றாவது (பாஸ்வான்) அணிக்கு செல்ல வழிவகுக்கிற சூழ்ச்சி இன்னொரு பக்கம்.
தமிழகத்திலும் அதே தோளில் இருந்தபடியே நண்பனைத் தின்னுகிற பார்ப்பனிய வியூகம் தான் பாஜகவுக்கு - வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி அரசு மீதான மக்களின் கோபம் மோசமாக பிரதிபலிக்கும் என பாஜகவினர் அறிவார்கள். ஆகையால் அக்கோபம் தம் மீது திரும்பக் கூடாது என ஒரு திட்டம் வகுக்கிறது. இதன்படி தாம் கூட்டணியில் இருந்தாலும் ஒரு அதிருப்தி தம் கட்சிக்கும் அதிமுகவுக்கும் இடையில் உள்ளதாக கடந்த சில மாதங்களில் தொடர்ந்து ஊடகங்களில் செய்திகளை வரவழைத்தார்கள். அற்பமான இந்த கிசுகிசுக்களை விவாதிப்பதற்காக நமது டிவி சேனல்கள் பிரைம் டைம் விவாத மேடைகளை ஒதுக்கினார்கள். அநேகமாய் தினமும் இந்த கற்பனையான முரணைப் பற்றி பேசிப் பேசி (இந்த வாதங்களின் போது அதிமுகவினர் பாஜவைனரை தழுவி முத்தமிட்டு கன்னத்தை எச்சிலாக்கும் ஆபாசங்களும் நடக்கும்) ஒருவழியாய் இரு கட்சிகளும் ஒரே மேடையில் தோள் மேல் தோள் சாய்ந்து நின்றாலும் ‘இதயத்தில்’ தாம் வேறு வேறு எனும் சித்திரத்தை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த நாடகத்தின் ஒரு காட்சி மட்டுமே குஷ்புவின் கைது.
திருமா மீது பாஜவினரின் சார்பாக அதிமுக அரசு அவசரப்பட்டு ஏன் வழக்குகளை பதிவு செய்தது என கேள்வி எழுந்ததும், அதிகம் பதறியது பாஜகவாகத் தான் இருக்கும். அதிமுகவுக்கு (எப்படியும் இழக்கப் போகிற) இத்தேர்தலில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பாஜகவுக்கு அப்படியல்ல. எப்படியாவது சற்று மேம்பட்ட தேர்தல் பலன்களை இம்முறை அடைய வேண்டும் என அக்கட்சி தவிக்கிறது. ஆகையால் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடத்துவதாக, அதை குஷ்பு தலைமை தாங்கும் போது கைது செய்யப்பட்டு ஒரு ஓட்டலில் சிறைவைக்கப்படுவதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. குஷ்பு ஏறிப் போன வாகனமே போலீஸ் வேன் என்பதைத் தவிர வேறெந்த பிரச்சனையும் அவருக்கு இல்லை. போராட்டத்தில் தலைமை தாங்கி தாங்கி விட்டு அப்படியே ஓட்டலுக்கு சென்று ஏஸி அறையில் உணவருந்தி ஓய்வெடுக்கப் போகிறார். ஆனால் அதிமுக அரசு திராவிட கட்சிகளின் சார்பில் இந்துக்களை ஒடுக்குகிறது என ஒரு பொய்ப்பிரச்சாரத்தை சங்கிகள் முன்னெடுக்க இது உதவும்.
இதற்குப் பதிலாக தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை கைது செய்திருக்கலாமே? அப்படி செய்தால், பாஜகவும் அதிமுகவும் நேரடியாய் மோதுவதாய் ஒரு சித்திரம் மக்களிடத்து ஏற்பட்டு விடும். அதையும் பாஜக விரும்பவில்லை. அது இரண்டு முகாம்களிலும் நண்பனாகவும் எதிரியாகவும் இருந்து சாதிக்க விரும்புகிறது. அதுதான் பார்ப்பனிய சாணக்கியம்.

