நேற்று நான் செய்த வாழைப்பழ பிரெட்டின் படத்தை பகிர்ந்த போது சில நண்பர்கள் செய்முறையை கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக இதோ.
இரண்டு வகையில் பிரெட் செய்கிறார்கள் - ஒன்று பேக்கிங் பவுடர் போட்டு, சற்று தளர்வான கலவையை மோல்டில் ஊற்றி பேக் செய்வது; மற்றொன்று, ஈஸ்ட் சேர்த்து ஒரு மணிநேரம் உப்ப வைத்து பேக் செய்வது. முதலாவது பழம் போன்றவை சேர்க்கிற பிரெட் மற்றும் கேக் செய்ய ஏற்ற முறை. இந்த வாழைப்பழ பிரெட்டை நான் அப்படியே செய்தேன்.
1) முதலில் உலர்வான கலவையையும் ஈரக்கலவையையும் தனித்தனியாக தயார் செய்ய வேண்டும். இறுதியில் இரண்டையும் சேர்த்து doughவை (பிசைந்த மாவு) செய்யலாம். இந்த வேலையை ஆரம்பிக்கும் முன்பு உங்களுடைய OTG ovenஐ முன்-வெப்பமடைய செய்ய வேண்டும் - அதாவது பேக்கிங் செய்யுமுன்னே ஒரு மணிநேரம் போல ovenஐ பொருளில்லாமல் 170 டிகிரி செல்ஷியஸுக்கு சூடுபடுத்தி வைப்பது. நீங்கள் மாவு தயாராக்கி முடிக்கும் போது ovenஉம் தயாராக இருக்கும்.
2) உலர் கலவை தயாரிக்க நான் ஒரு கப் பாதாம் மாவு, ஒரு கப் ராகி மாவு மற்றும் அரை கப் ரவை எடுத்து கொண்டேன். நீங்கள் இதற்குப் பதிலாக கோதுமை மாவு, மைதா போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம் (அளவை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.). இதில் அரை ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் பேக்கிங் பவுடர் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து இதில் உடைத்த வால்நட், பாதாம், முந்திரி, சாக்கோ சிப்ஸ் போன்றவற்றை கலந்து கொள்ளவும். உங்களிடம் பருப்புகள் இல்லையெனில் டூட்டிபுரூட்டியை கலந்து கொள்ளலாம்.
3) அடுத்து ஈரக் கலவை. ஒரு கிண்ணத்தில் ஒரு கப் வெண்ணெய் மற்றும் ஒரு கப் வெல்ல சர்க்கரை (அல்லது வெல்லப் பொடி) (நான் குறைந்த இனிப்பு போதுமென மூன்று ஸ்பூன்களே வெல்லப்பொடியை சேர்த்தேன்.) ஆகியவற்றை ஒரு beater அல்லது கரண்டி வைத்து நன்றாக கலக்கவும்.
4) மற்றொரு கிண்ணத்தில் 6-7 சிறிய வாழைப்பழங்கள் அல்லது நன்கு கனிந்த 3 பெரிய வாழைப்பழங்களை பிசைந்து வைக்கவும். இதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, வென்னிலா எஸன்ஸ் சேர்த்து (beater கொண்டு) அடிக்கவும்.
5) அடுத்து செய்ய வேண்டியது இந்த ஈரக்கலவைகள் இரண்டையும் மெல்ல மெல்ல உலர் கலவையில் கலந்து பிசைவது தான். இதை கை கொண்டோ அல்லது ஒரு beater வைத்தோ செய்யலாம். ஒருவேளை மாவு தளர்வாக போதுமான ஈரப்பதத்துடன் இல்லையெனப் பட்டால் அரை கப் காய்ச்சி ஆற வைத்த பாலை மாவுடன் சிறுக சிறுக சேர்த்து பிசையவும். மாவின் இறுதிப் பதம் என்பது கரண்டியால் எடுத்து bread mouldஇல் ஊற்றும்படி இருக்க வேண்டும்.
6) Bread mould இல்லாதவர்கள் கேக் மோல்ட் கூட பயன்படுத்தலாம். இதில் சிறிது வெண்ணெய்யை சுற்றிலும் தடவி விட்டு பிசைந்த மாவை ஊற்றுங்கள். வேண்டுமென்றால் சிறிது உடைத்த பருப்புகளை ஓட்ஸுடன் கலந்து இந்த மாவின் மேல் தூவி செட் செய்யலாம். Ovenஐ மூடி 170 டிகிரி செல்ஷியஸுக்கு செட் செய்து ஒரு மணிநேரம் போல பேக் செய்யவும்.
7) 40 நிமிடங்களுக்குப் பிறகு ovenஐத் திறந்து பிரெட் எந்தளவுக்கு வெந்திருக்கிறது எனப் பார்ப்பது நலம். இதற்கு ஒரு கத்தியை மாவுக்குள் செலுத்திப் பார்க்கலாம் - ஒட்டாமல் வந்தால் வெந்திருக்கிறது எனப் பொருள். எனக்கு முழுக்க பேக் ஆக ஒரு மணிநேரம் பத்து நிமிடங்கள் பிடித்தது.
8) பிரெட் வெந்த பிறகு அதை திறந்த இடத்தில் வைத்து ஆற விடுங்கள். அதன் பிறகு துண்டு போடுவது நல்லது.
9) நான் இதை சர்க்கரை குறைத்து செய்ததால் பிரெட் ஆகி விட்டது. டோஸ்ட் செய்து வெண்ணெய் தடவி சாப்பிடலாம். சத்தான சுவையான காலை உணவு. மாவைக் கலக்கும் போது ஒரு கப் சர்க்கரை சேர்த்திருந்தால் கேக் போல சாக்லேட் சிரப் ஊற்றி சாப்பிடலாம்.
10) இவ்வளவுதான் - ரொம்ப சுலபம். முதலில் பேக் செய்யும் போது கருகாமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி உலர் கலவையில், கோதுமை மாவு, மைதா, ரவை, ராகி, பருப்பு, விதைகளை அரைத்து செய்த மாவு என எதையும் உங்கள் தேவைப்படி கலந்து கொள்ளுங்கள்.

Comments