அடிப்படை கல்வியறிவு இல்லாதவர்கள் தொழிமுனைவோராகி பெரும் வெற்றி பெறுவதை கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். பள்ளிவாசலை மிதிக்காதவர்கள் பெரும் பேச்சாளர்களாகி தலைவர்களாக வளர்ந்து முதல்வர், பிரதமர் ஆவதைக் காண்கிறோம். மிகப்பெரும் நடிகர்களாக, சூப்பர் ஸ்டார்களாக மலர்வதைப் பார்த்து வியக்கிறோம். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை நிறுவி வெற்றிகரமாக நடத்துவதைப் பார்க்கிறோம். பத்தாம் வகுப்பைத் தாண்டாதவர்கள் ஊடகத் துறைக்கு வந்து, சீரான சுவாரஸ்யமான தமிழில் எழுதுவதை, பெரும் நிர்வாக பொறுப்பில் அமர்வதைக் காண்கிறோம்.
இன்னொரு பக்கம், அத்தகையோரே இது போல காவல்துறை ஆணையரின் புரொபைல் படங்களை சுட்டு பேக் ஐடி தயாரித்து அதை வைத்து ஆணையரின் நண்பர்களை அணுகி ஏகப்பட்ட பணத்தை திருடியிருக்கிறார்கள். இக்குற்றத்தில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த டிரக் ஓட்டுநர் ரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர். ஜாலியாக வேப்பமரத்துக்கு கீழே படுத்துக் கொண்டு ஆணையர் பெயரையே வைத்து ஆட்டையைப் போடுகிறார். இப்படித்தான் வடக்கில் இருந்து எத்தனையோ படிப்பறிவில்லாதோர் இன்று பரவலாக இணையத் திருட்டை ஒரு தொழிலாக பண்ணி வருகிறார்கள். யுடியூபில் எத்தனையோ காணொலிகள் கிடைக்கின்றன. படிப்பறிவு இல்லாவிடினும் இணையத்தை பயன்படுத்தி தொடர்புகளை வளர்த்து, தகவல்களை திரட்டி சாமர்த்தியமாக ஏமாற்றுத் தொழிலில் ஈடுபட்டு மக்கள் கண்ணில் மண்ணைத் தூவுகிறார்கள். ஒழுங்காக பள்ளிக் கல்வி, கல்லூரிப் படிப்பை முடித்தவர்களோ சொற்ப ஊதியத்துக்கு 9-5 வேலை செய்து கொக்கு போல வாழ்கிறார்கள். முறையான பள்ளி, கல்லூரிப் படிப்பு எவ்வளவு மிகைப்படுத்தப்பட்ட ஒன்று பாருங்கள்!
Comments