Skip to main content

நீரிழிவு: இன்சுலின் அளவை தீர்மானிப்பது எப்படி?



ஒரு type 1 நீரிழிவு நோயாளி ஒவ்வொரு முறை உணவை எடுக்கும் முன்பும் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு உணவுக்கும் ஏற்ப இன்சுலின் அளவும் இருக்க வேண்டும். இந்த இன்சுலின் அளவை எப்படி தீர்மானிப்பது என மருத்துவர்கள் பெரும்பாலும் சொல்லித் தருவதில்லை என்பதே என் அனுபவம். வெளிநாடுகளில் டயட் ஆலோசகர்கள் இருப்பார்கள். நீரிழிவு மருத்துவரை பார்த்த பின் உங்களை இந்த ஆலோசகரிடம் அனுப்புவார்கள். அவர்கள் இன்சுலின் அளவுக்கான பார்முலாவை சொல்லித் தருவார்கள். இந்தியாவில் என் அனுபவம் என்னவென்றால் மருத்துவர் ஒரு பொதுவான இன்சுலின் அளவை எழுதிக் கொடுப்பார். காலையில் 12 யூனிட்டுகள், மதியம் இவ்வளவு, இரவு இவ்வளவு என. அதற்கு ஏற்ப உனவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒவ்வொரு உடலிலும் இந்த இன்சுலினானது ஒவ்வொரு விதமாய் வேலை செய்யும். இதனாலே நோயாளிகள் தாம் எடுத்துக் கொள்ளும் உணவின் மாறுபாடுகள், உடம்பின் நிலையைப் பொறுத்து இந்த இன்சுலின் அளவை தம் அனுபவத்தின்படி மாற்றிக் கொள்வார்கள். மருத்துவர் ஒவ்வொரு முறை அவரை நீங்கள் சந்திக்கும் போது இந்த இன்சுலின் அளவைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வார். இப்படி ஒரு அனுமானத்தின் படி இன்சுலின் எடுத்துக் கொள்வதன் ஒரு சிக்கல் டயட்டை சுலபத்தில் மாற்ற முடியாது என்பது. .தா., நீங்கள் காலையில் 3 இட்லிக்கு பதிலாக ஓட்ஸ் கஞ்சி சாப்பிட விரும்பினால் எவ்வளவு இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும்? மாலை இரண்டு சிறிய வாழைப்பழங்கள் அல்லது கொய்யாப் பழங்கள் சாப்பிட்டால் எவ்வளவு இன்சுலின் அதற்கு?


நான் நீண்ட காலமாய் இன்சுலின் எடுத்து வந்தேன். அளவெல்லாம் ஒரு அனுமானப்படி, என் அனுபவத்தின் படித்தான். இதன் விளைவாக சில நேரம் இன்சுலின் அளவு அதிகமாகி ரத்த சர்க்கரை மிகவும் குறைந்து போயுள்ளது. அப்படித்தான் எனக்கு ஒருநாள் வலிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு இதைப் பற்றி விரிவாகப் படித்து எப்படி இன்சுலின் அளவை முடிவு செய்வது எனத் தெரிந்து கொண்டேன். சக நீரிழிவாளர்கள் மற்றும் நீரிழிவு கொண்ட வயதான பெற்றோர்களுக்கு இன்சுலின் ஊசி போட்டு விடும் பிறருக்கும் இது உதவும் என்பதால் இங்கு பகிர்கிறேன்


1) எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் அதன் கலோரிகளை அல்ல carbs எனப்படும் மாவுச்சத்தின் அளவைத் தெரிந்து கொள்ளுங்கள். மாவுச்சத்து எவ்வளவு என்பதைப் பொறுத்தே இன்சுலினின் அளவு இருக்க வேண்டும். (நான் இங்கு குறிப்பிடுவது குறுகின நேரத்துக்கான short-acting insulin. அதாவது Actrapid போன்றவை. நீண்ட காலம் ரத்தத்தில் தங்கியிருக்கும் Lantus போன்றவை அல்ல. பின்னதன் அளவு மாறுவதில்லை.) 

2) மாவுச்சத்து எவ்வளவு என கூகிள் பண்ணி தெரிந்து கொண்ட பின் அதை பத்தால் வகுத்துக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் இன்சுலின் யூனிட் அளவு. .தா., ஒரு சிறிய வாழைப்பழத்தில் 23 கிராம் மாவுச்சத்து உள்ளது. சற்றே பெரியது என்றால் 30 கிராம் என வைத்துக் கொள்ளுங்கள். இதை பத்தால் வகுத்தால் 2.5இல் இருந்து 3 யூனிட் இன்சுலின் என வருகிறது. இரண்டு சிறிய வாழைப்பழங்கள் என்றால் (46 அல்லது 60 என்பதை பத்தால் வகுத்தால்) 4.5 அல்லது 6 யூனிட் இன்சுலின் தேவைப்படலாம்.

 

3) ஒரு கப் காப்பி சாப்பிடுகிறீர்கள். இப்போது ஒரு கப் பாலில் (245 கிராம்) எவ்வளவு மாவுச்சத்து என கூகிள் பண்ணுங்கள். 12 கிராம் என வரும். இதை பத்தால் வகுத்தால் 1.2 யூனிட்டுகள் வருகின்றன. கூடவே ஒரு ஸ்பூன் சர்க்கரையின் மாவுச்சத்து. ஒரு கைக்கரண்டி (டீஸ்பூன்) அளவு சர்க்கரையில் 4 கிராம் மாவுச்சத்து உள்ளது. இதை வகுத்தால் கிட்டத்தட்ட அரை யூனிட் வருகிறது. மொத்தமாய் சேர்த்தால் கிட்டத்தட்ட இரண்டு யூனிட் இன்சுலின் போதும்.


4) இங்கு மூன்று விசயங்களை கவனிக்க வேண்டும். நீங்கள் அருந்தும் கோப்பையின் அளவு, அதில் போடப்படும் சர்க்கரையின் அளவு முன்னே பின்னே இருக்கலாம். அதற்கு ஏற்ப இன்சுலினை முடிவு செய்யுங்கள். ஒவ்வொரு உணவில் உள்ள மாவுச்சத்தும் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் சர்க்கரையின் அளவு ஒவ்வொரு விதமாய் பாதிக்கும். அதனால் ஒருவருக்கு சற்று கூடுதலாக, மற்றொருவருக்கு குறைவாக இன்சுலின் தேவைப்படலாம். அடிப்படையான அளவு இதுதான் என்றாலும் பரீட்சித்து பார்த்து தேவைப்பட்டால் ஒரு கப் காப்பிக்கு மூன்று யூனிட் கூட எடுத்துக் கொள்ளலாம். .தா., என் வீட்டில் பெரிய மக்கில் காப்பி குடிக்கிறேன். அதற்கு எனக்கு ஐந்து யூனிட்டுகள் இன்சுலின் தேவைப்படுகிறது.


5) இது ரொம்ப முக்கியமான விசயம்: இயற்கையான உணவுகளில் உள்ள மாவுச்சத்தை வைத்து அது ரத்த சர்க்கரையை எப்படி பாதிக்கும் என கணிப்பதைப் போல இட்லி, சப்பாத்தி, சோறு போன்ற தானிய உணவுகளுக்கு முடியாது. .தா., ஒரு இட்லியில் உள்ள மாவுச்சத்து 8 கிராம். நான்கு இட்லிகள் சாப்பிட்டால் 32 கிராம். இதை பத்தால் வகுத்தால் மூன்று- மூன்றரை யூனிட் இன்சுலின் வரும். ஆனால் இந்தளவுக்கு குறைவாக இன்சுலின் போட்டால் ரத்த சர்க்கரை அதிகமாகும் என்பது என் அனுபவம். இது தானிய உணவுகள் அனைத்துக்கும் பொருந்துகிறது. ஏனெனத் தெரியவில்லை. ஆகையால் தானிய உணவுகளைப் பொறுத்தமட்டில் வெறுமனே மாவுச்சத்தை மட்டும் வைத்து கணக்கிட்டால் போதாது. அனுபவத்தை வைத்து முடிவு செய்யுங்கள்.


6) நீங்கள் பேலியோ டயட்டில் இருக்கிறீர்கள் அல்லது சாலட் மட்டுமே மூன்று வேளையும் சாப்பிடப் போகிறீர்கள் என்றால் அந்தந்த உணவில் என்னவிதமான காய்கறிகள், இறைச்சி வகைகள் சேர்க்கடுகின்றன, ஒவ்வொன்றிலும் மாவுச்சத்து எவ்வளவு எனத் தெரிந்து கொண்டு அவற்றை கூட்டி பத்தால் வகுத்து இன்சுலின் அளவைத் தெரிந்து கொள்ளுங்கள். இதுவொரு சள்ளை பிடித்த வேலைதான், ஆனால் வேறு வழியில்லை. பச்சை காய்கறியில் மாவுச்சத்தா இருக்கும் என நினைத்து இன்சுலின் போடாமல் இருக்காதீர்கள். தண்ணீரைத் தவிர வேறு எல்லாவற்றிலும் மாவுச்சத்து கொஞ்சமாவது இருக்க வாய்ப்புள்ளது. சிக்கன் மசாலா சாப்பிடுகிறீர்கள் என்றால் அதில் எவ்வளவு வெங்காயம், தக்காளி போன்றவை சேர்த்திருக்கிறார்கள், கறியின் அளவு எவ்வளவு எனத் தெரிந்து கொண்டு கூட்டிக் கழித்து இன்சுலின் அளவை அறியுங்கள்


7) இரண்டு மணிநேரம் போல கடும் உடற்பயிற்சி செய்து விட்டு ரொம்ப லைட்டான உணவுகளை (சாலட், வேக வைத்த காய்கறிகள் போல) மட்டும் எடுத்துக் கொண்டால் அப்போது ஒருவேளை இன்சுலின் அதிகப்படியாய் வேலை செய்யலாம். இதைக் கணக்கில் கொண்டு இன்சுலின் அளவை முடிவு செய்யுங்கள்.


8) வீட்டில் ஒரு சிறிய எடை எந்திரம் (kitchen scale) வைத்து சமைக்குமுன் எந்த பொருளையும் அளந்து கொள்ளுங்கள். அதை வைத்தே மாவுச்சத்தை அளக்க வேண்டும் (சமைத்த பிறகல்ல). இதிலும் விதிவிலக்கு உண்டு - கருவாட்டுத் துண்டு மீன் துண்டை விட எடை குறைவாக இருக்கலாம். இங்கு கருவாட்டை ஒரு மீனின் சராசரியான எடையை வைத்து கணக்கிடுங்கள்.


9) எந்த புது உணவையும் உண்டு 2 மணிநேரங்களுக்குப் பிறகு ரத்த சர்க்கரையை ஒரு glucometer கொண்டு அளந்து பார்த்து இன்சுலின் அளவு சரியாக இருக்கிறதா என உறுதிப்படுத்துங்கள். அதைப் பொறுத்து உங்கள் உடல் இயல்புக்குத் தேவைப்படும் இன்சுலின் அளவை ஒரு அட்டவணையில் எழுதி வைத்துக் கொள்ளலாம். “இன்று ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீமும் இவ்வளவு இன்சுலின் எடுத்துக் கொண்டேன், அது போதவில்லை, அல்லது சரியாக இருக்கிறதுஎன போனில் நோட்ஸ் ஆப்பில் குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் எப்போதாவது ஐஸ்கிரீம் சாப்பிடத் தேவை வந்தால் அதில் தேடிப் பார்த்து சரியான இன்சுலின் அளவைத் தெரிந்து கொள்ளலாம்


10) தினமும் இரண்டு வேளைகள் (காலை எழுந்ததும், இரவு தூங்கும் முன்) ரத்த சர்க்கரை அளவை சோதியுங்கள். ஒருவேளை அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் அதைப் பொறுத்து அன்றைக்கான இன்சுலினை கூட்டவோ குறைக்கவோ செய்து, அந்த அளவை உணவுக்கான இன்சுலினை கணக்கிடும் போது பரிசீலனை பண்ணுங்கள். எப்படி?

 உங்கள் ரத்த சர்க்கரை அளவு காலையில் 80 என இருக்கிறது. இது சராசரியான ரத்த சர்க்கரை அளவை விட 40 குறைவு. (இன்னும் 10-20 குறைந்தால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள்.) ஒரு யூனிட் இன்சுலின் என் உடம்பில் 30 எனும் அளவில் சர்க்கரையை குறைக்கும். உங்கள் உடல் இயல்புப்படி உங்களுக்கு இது அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். நீங்கள் இப்போது காலையில் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடப் போகிறீர்கள். 45 கிராம் ஓட்ஸை வேக வைத்து மோர் சேர்த்து காலை உணவைத் தயாரிக்கிறீர்கள். 16 கிராம் மாவுச்சத்து இதில் உள்ளது. ஒன்றரை யூனிட் இன்சுலின் இதற்குப் போதும். கூட கொஞ்சம் மோர் மற்றும் பாதி நறுக்கின வெங்காயம் (4 கிராம் மாவுச்சத்து) சேர்ப்பதால் இரண்டு யூனிட்டுகள் தேவை. ஆனால் ஏற்கனவே ரத்த சர்க்கரை அளவுக்கு 40 குறைவாக உள்ளதால், ஒரு யூனிட் இன்சுலின் 30 எனும் அளவில் என் ரத்த சர்க்கரையை குறைக்கும் என்பதால், அன்றைய காலை உணவுக்கான இன்சுலினை இரண்டில் இருந்து ஒரு யூனிட் என குறைத்துக் கொள்வேன். ஒருவேளை என் ரத்த சர்க்கரை காலையில் 200 என இருந்தால் அதை நான் 120-140ஆக குறைக்க வேண்டும். அதற்கு குறைந்தது இரண்டு யூனிட்டுகள் உபரி இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது நான் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுமுன் என் இன்சுலினை வழக்கமான இரண்டு யூனிட்டுகளில் இருந்து நான்காக உயர்த்திக் கொள்வேன்

 தலைசுற்றுகிறதா? வேறு வழியில்லை. இன்சுலின் மேலாண்மையில் இதை high / low blood sugar correction என்கிறார்கள். மருத்துவமனையில் நீங்கள் அட்மிட் ஆகி இருந்தால் இதை மருத்துவரே கணக்கிட்டு தினமும் உங்கள் ரத்த சர்க்கரைக்கு ஏற்ப மாற்றுவார். வீட்டில் இருக்கையில் நீங்களே செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்


இரண்டு பொறுப்புத் துறப்புகள் (disclaimers):


1) ஜுரம் வந்தாலோ அல்லது முக்கியமாய் அஜீரணம் ஏற்பட்டு வாந்தி வந்தாலோ இந்த இன்சுலின் அளவு தலைக்கிழாகி விடலாம். இப்போது எடுப்பதற்கு பல மடங்கு அதிகமாய் எடுத்தால் மட்டுமே சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலை வரும். தினமும் சர்க்கரை அளவை சோதியுங்கள். நோய்வாய்ப்படும் போது தவறாமல் சோதியுங்கள். அதை வைத்து இன்சுலின் அளவை அதிகப்படுத்துங்கள். உடல் சீரானதும் பழைய அளவுக்கு இன்சுலினை கொண்டு வரலாம்.


2) நான் மருத்துவன் அல்ல. ஆகையால் சந்தேகம் இருப்பின் உங்கள் நீரிழிவு சிறப்பு மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.


மேலும் தகவல்களுக்கு கீழ்வரும் சுட்டியை சொடுக்குங்கள்:


https://dtc.ucsf.edu/types-of-diabetes/type2/treatment-of-type-2-diabetes/medications-and-therapies/type-2-insulin-rx/calculating-insulin-dose/

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...