எந்த மக்கள் ஆதரவும் இல்லாத பாஜகவின் போராட்டங்களுக்கு ஊடக கவனம் கிடைக்க அவர்களின் தலைவர்கள் பேருக்கு கைது பண்ணப் படுவது அவசியம். இந்த கிளைமேக்ஸ் திரைக்கதையில் ஏற்கனவே எழுதப்பட்டு எடப்பாடி அரசால் திறம்பட இயக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே எல்.முருகன் தடையை மீறி இந்த கொரோனா காலத்தில் கூட்டமாய் ஊர்வலம் சென்று கைது பண்ணப்படுகிறார். அதுவும் திருத்தணியில் பேசிய அவர் தன் யாத்திரைக்கு தடை விதித்த அதிமுக அரசை விட்டுவிட்டு திமுகவை விமர்சித்ததை கவனியுங்கள்.
திமுக இந்துக்கடவுள்களை அவமதிக்கிறது என்பது எவ்வளவு பழைய ஒப்பாரி. அது பெரியார் காலத்து ஒப்பாரி. அண்ணா காலத்திலேயே அந்த ஒப்பாரிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தியின் போது விபூதியை நெற்றியை இடவில்லை என்பதை வைத்தெல்லாம் அரசியல் பண்ண முயல்கிறார்கள். இன்றைய அரசியல் சூழலில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஏனென்றால், அதிமுகவை போல நேரடியாக மதச்சின்னங்களை சூட மாட்டார்களே ஒழிய, திமுகவினர் பெரும்பான்மையினர் இந்துமத நம்பிக்கையாளர்களே. கள எதார்த்தம் இப்படி இருக்க, திமுகவினர் இந்துக்களுக்கு எதிரானவர்கள் எனும் ராஜாஜி கால ஐடியாவை யார் பாஜகவுக்கு இப்போது எடுத்துக் கொடுத்தார்கள் தெரியவில்லை, இன்றும் பாவம் எல்.முருகன் அதையே பேசிக்கொண்டிருக்கிறார். அவர் குரலிலே நம்பிக்கையில்லை.
ஆனால் இவ்வளவு பாடுபட்டும் இந்த ‘குறும்படங்கள்’ படுதோல்வி என்பதுதான் கொடுமை. “விக்ரம்” டிரைலரின் அப்பள மேட்டர் எல்லார் கவனத்தை அள்ளிச் சென்று விட்டது.


Comments