நேற்றை தகுதிச் சுற்று போட்டியை பெங்களூர் அணி இழந்த நிலையில் கோலியின் அணித்தலைமை மீது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கௌதம் கம்பீர் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். “கோலியைப் போல எட்டு வருடங்களாக வேறெந்த தலைவராவது ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல் அணித்தலைவராக இருந்துள்ளாரா?” எனக் கேட்டுள்ளார். மஞ்சிரேக்கரும் கோலி பதவி விலகுவதே நியாயம் எனக் கூறியுள்ளார். ஆம், நேற்றைய போட்டியில் கோலியின் முடிவுகள், மட்டையாட்ட வரிசை, பந்து வீச்சுத் தேர்வு, அவரது நிதானமற்ற போக்கு அவரது அணியை தடுமாறவும் முக்கியமான வேளையில் நிலையிழந்து மோசமாக ஆடவும் வைத்தது என்பதை ஏற்கிறேன். நானே இக்கருத்துக்களை உயிர்மை டிவியின் ஆட்டம் கொண்டாட்டம் அலசல் நிகழ்ச்சியின் போது விரிவாக பேசினேன். ஆனால் அதே நேரம் இந்த ஆண்டு பெங்களூர் அணியின் ஆட்டம் மேலானதாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அதற்கான பாராட்டுக்கள் அவர்களின் பயிற்சியாளர்கள், ஓரளவுக்கு முழுமையான, வலுவான அணியை தேர்வு செய்த கோலி மற்றும் ஒன்றாக இணைந்து போராடிய வீரர்களுக்கும் செல்ல வேண்டும். பெங்களூரின் துவக்க மட்டையாட்டம் (குறிப்பாக படிக்கல்லின் ஆட்டம்), இறுதி ஓவர்களின் அதிரடி ஆட்டம் நன்றாக இருந்தது. மத்திய வரிசையில் கோலியும் ஏ.பி.டியும் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றினர். சுழல் பந்து வீச்சில் சஹலுடன் சுந்தர் நன்றாக வீசினார். களத்தடுப்பு மிக நன்றாக இருந்தது. வேகப் பந்து வீச்சாளர்கள் சில போட்டிகளில் திணறினாலும் ஒட்டுமொத்தமாய் பார்க்கையில் அவர்கள் புதுப்பந்தில் அதிரடியான ஆபத்தான ஒரு கூட்டணியை அமைத்தாடினார்கள். ஒரு கட்டத்தில் துபேவின் பந்து வீச்சு சிறப்பாக மாறியது. குர்குரீத் கூட நன்றாக மட்டையாடினார். ஒரே சிக்கல் கோலியின் நிலையற்ற மனம் தான் - அவர் “விண்ணைத்தாண்டி வருவாயா” ஜெஸ்ஸியைப் போல. சொந்த மனைவியைத் தவிர வேறு யார் விசயத்திலும் நிலையாக இருக்க மாட்டார். இன்னொருவர் அவருக்கு அறிவுரைத்து கட்டுப்படுத்தவும் முடியாது.
நான் பெங்களூர் அணி உரிமையாளராக இருந்தால் கோலியை தலைவராக தொடர வைப்பேன். ஆனால் ஒரு தியானப் பயிற்சியாளரை அணியில் நியமித்து கோலியை தினமும் தியானம் செய்ய வைப்பேன். தகுதிச் சுற்று, இறுதிச் சுற்றுப் போட்டிகள் வரை முறுக்கேறி இருந்து விட்டு முக்கியமான கட்டத்தில் அணி காற்றிறங்கிய பலூன் போல் ஆகாமல் இருக்க உளவியல் தகுதியில் கவனம் செலுத்துவேன். கோலிக்கு இணையான - அல்லாவிடில் அவரை விட அதிகமான - அதிகாரத்தை பயிற்சியாளர்களுக்கு கொடுப்பேன். கோலியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் விடுவது ஒரு குழந்தையை காரோட்ட அனுமதிப்பதற்கு சமம். இரண்டு ஆண்டுகளில் எப்படியும் தோனி ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெறுவார். அன்று அவரை பெங்களூரின் பயிற்சியாளராக நியமிப்பேன். கோலிக்கு தோனியைப் போன்ற ஒருவர் பயிற்சியாளராகத் தேவை. கோலியை அணியில் இருந்து நீக்கும் அளவுக்கு அதிகாரம் கொண்ட ஒரு பயிற்சியாளர் தேவை. அப்போதும் அவர் உருப்படவில்லை என்றால் புதிய தலைவரைக் கண்டடையலாம்.
காம்பிரின் பேட்டியில் நான் ரசித்த வரிகள் இவை:
“Gambhir also said he felt for the support staff of the franchise, which has changed over the years, while the captain has remained the same. Gambhir said it was "very difficult" for people like Simon Katich and Mike Hesson because if the coaches or directors of the team were "blunt" and asked for the captain to be removed, "they'll be the first ones to be removed”

Comments