Skip to main content

ரஜினியின் முற்றுப்பெறாத அரசியல் பிரவேசம்


அமித் பாயின் ஆட்கள் உருட்டி மிரட்டி இறுதியில் தலைவரை சம்மதிக்க வைத்தே விட்டார்கள். இது வேல் யாத்திரை, குஷ்பு vs திருமா போன்ற மத ரீதியான ஒருங்கிணைப்புகளில் பாஜக தலைமை மெல்ல மெல்ல நம்பிக்கை இழந்து வருவதைக் காட்டுகிறது. இனி மும்முரமாக அதிமுகவின் உட்கட்டமைப்பை பயன்படுத்தி வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் நின்று அதிமுக வாக்குகளை தம் வசப்படுத்தி எப்படியாவது பத்து இடங்களையாவது பெறுவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தைக் கொண்டு சிறிய வித்தியாசத்தில் சில தொகுதிகளில் வெற்றி பெற்றதாக ஒரு நாடகத்தை நடத்தி, குறிப்பிட்ட இடங்களையாவது அதிமுகவும் பாஜகவும் பகிர்ந்து கொள்வது, இறுதியாக ரஜினி, கமல் போன்ற நடிகர்களில் டு மினிட் நூடுல்ஸ் கட்சிகளைக் கொண்டு வாக்குகளைப் பிரிப்பது மட்டுமே பாஜகவின் பிரதான வியூகமாக இருக்க முடியும். அதாவது, இப்போதைக்கு பாஜக நம்பியிருப்பது (1) அதிமுகவின் வாக்குவங்கி, (2) மின்னணு வாக்குப்பதிவு எந்திர மோசடி, மற்றும் (3) வாக்குகளை சிதறடிக்கும் திரை ஆளுமைகள். 

யாருடைய வாக்குகள் வரப்போகும் தேர்தலில் இவர்களால் சிதறப் போகின்றன என நாம் இங்கு கேட்க வேண்டும்:
வடமாநிலங்களில் பொதுவாக ஒவைஸ்ஸி போன்ற கறுப்பாடுகளை பயன்படுத்தி பொதுவான முற்போக்கு இந்து வாக்குகளை பாஜக தம் வசம் திருப்பியது, அதே போல காங்கிரஸின் வாக்காளர்களான இஸ்லாமியர் பலரையும் ஒவைஸியின் ஆட்களுக்கு வாக்களிக்க செய்தது. தமிழகத்தில் இந்த பொதுவான, நடுநிலை வாக்காளர்களை இந்துமயப்படுத்தலாம் எனும் முயற்சி தோற்ற நிலையில் அவர்களை திராவிட கட்சி-சார்பற்ற வேட்பாளர்கள் மற்றும் திரை ஆளுமைகள் நோக்கி சிதறடிக்கலாம் என பாஜக இப்போது கணக்குப் போடுகிறது. இதற்காகத் தான் தினமும் இருபது மாத்திரைகள் முழுங்கும் ரஜினியை, தேர்தல் அரசியலால் தன் திரை வாழ்க்கைக்கு பங்கம் வந்து விடக் கூடாதே என அஞ்சும் ரஜினியை கழுத்தில் கத்தி வைத்து இறக்கி விட்டிருக்கிறார்கள்.
 
இந்த வியூகத்தை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
1) அடுத்த சில மாதங்களில் ரஜினி நேரடியாக பயணித்து மக்களை சந்தித்து பேசுவார் என நான் நம்பவில்லை. அதற்குப் பதிலாக அவரது ஐடி விங் ஆட்கள் ரஜினி சார்பில் தினமும் சில ட்வீட்டுகளை போடுவார்கள். அதை நமது டிவி சேனல்கள் விழுந்து விழுந்து விவாதிக்க வேண்டும் என தில்லியில் இருந்து அமித் பாய் அசைன்மெண்டை கொடுத்து விடுவார். ரஜினியும் அவ்வப்போது தனக்கு எழுதி அளிக்கப்பட்ட அறிக்கைகளை மனப்பாடம் பண்ணி ஊடகத்திடம் ஒப்பிப்பார். இதையும் அவரது கட்சிப் பேச்சாளர்கள் விளக்குவார்கள். இது ஒரு உப-வியூகம் - அதாவது ஒட்டுமொத்த தேர்தல் உரையாடலையும் ரஜினி-கமல்-மூன்றாவது அணி நோக்கித் திருப்புவது. ஆனால் இந்த சதித்திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலியாகக் கூடாது. ரஜினி, கமலை விமர்சிப்பது, அவர்களுக்கு பதில் அளிப்பது என மிகுதியான இடத்தை, நேரத்தை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. அப்படியே புறக்கணித்து விட வேண்டும். 
2) நான்கைந்து மாதங்களில் ரஜினி கட்சிக்கான அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தி, வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து, தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்வது நடக்கிற கதை அல்ல. இந்த குறுகின இடைவெளியில் ஒரு தொகுதியில் நிற்கப் போகும் வேட்பாளரை அங்குள்ள மக்கள் பரிச்சயம் கொண்டு அவர்களின் கொள்கைகளைத் தெரிந்து கொண்டு நம்பிக்கை பெற்று ஓட்டுக்களை அளிப்பது நடக்காத காரியம். மேலும் இந்த கட்சி ஒரு வெளிப்புற அழுத்தத்தினால் உருவாகிற ஒன்று என்பதால், தலைமை சினிமாவில் ஒரு கால், பாஜக புழக்கடையில் ஒரு கால், ஐ.டி ரெய்டுக்கு தலை, பாஜக அளிக்கும் பணத்துக்கு வால் எனக் கொடுத்து தெளிவற்று இருப்பதால் அதன் தொண்டர்களும் மும்முரமாக பணி செய்யப் போவதில்லை. அதாவது தெமுதிக, நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்குக் கூட ஒரு முழுநேரத் தலைமை, தெளிவான நோக்கம், கொள்கை இருப்பது போல இந்த டூ மினிட் நூடுல்ஸ் கட்சிகளுக்கு இல்லை. ஆம் ஆத்மியினரைப் போல ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு தம்மை நிறுவவும் அவர்களுக்கு அவகாசமில்லை. (ஆம் ஆத்மிக்கே இங்கு கதவை மூடி விட்டார்கள் என்பது வேறு கதை.) ஆனாலும் ஊழல் எதிர்ப்பைக் கொண்டு அதிமுகவை தாக்கி அவர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தி ஒரு பி-டீமை பாஜக உருவாக்கியிருக்கலாம். (அது வேல் யாத்திரை, குஷ்பு யாத்திரையை விட பயன்பட்டிருக்கும்.) ஊழலற்ற ஆட்சி எனப் பேசுவதன் வழி அவர்களால் திராவிடக் கட்சிகளை ஒரு சிக்கலான இடத்துக்குத் தள்ளி திராவிட ஒவ்வாமை இல்லாத நடுநிலையாளர்களை, அரசியல் புரிதல் குறைவான மத்திய வர்க்கத்தை ஈர்த்திருக்கலாம். ஆனால் அதிமுகவுக்கு எதிராக, சார்பாக, நடுநிலையாக இருப்பது என தகிடுதித்தம் செய்து இந்த சாத்தியத்தை பாஜக தவற விட்டது. இப்போது அவர்களுக்கு தமிழகத்தில் எந்த இடமும் இல்லை (அதிமுகவின் தோளில் ஏறி சவாரி செய்வதைத் தவிர.)
 திராவிடக் கொள்கையை விரும்பாத சிறுபான்மையினர் கூட இங்கு உ.பி., பீகாரில் உள்ள பொதுநிலை இந்துக்களைப் போல பெரும் தரப்பு அல்ல. இங்கு சாதி, முற்போக்கு, சமூகநீதி அரசியலே பெரும்பான்மை வாக்காளர்களைக் கவர்கிறது. இம்மூன்றுமே பாஜகவின், ரஜினியின் அரசியலுக்கு ஒவ்வாதவை. ஆகையால் பாஜகவின் பிற மாநிலங்களில் வெற்றிபெற்ற ஓட்டுப் பிரிப்பு வியூகத்தைக் கண்டு இத்தனை சதம் வாக்குகள் போய் விடும் திமுக கூட்டணியினர் தேவையில்லாமல் அஞ்ச வேண்டியதில்லை. 
இதுவரையில் ஜெயலலிதாவுக்கு மூன்றாவது அணியாக இருந்து உதவியவர்கள் தமிழ் தேசிய அரசியலை எடுத்தும் கொண்டவர்கள். அதற்காக தயாராக இருந்த களத்தை பயன்படுத்தியவர்கள். ஒரு சில வருடங்களாவது களத்தில் நின்று பிரச்சாரம் செய்து நம்பிக்கையை ஏற்படுத்தியவர்கள். தெமுதிக, நாம் தமிழர், மே 17 இயக்கம் போன்ற கட்சிகளை இவ்விசயத்தில் கமல், ரஜினியின் கட்சிகளுடன் ஒப்பிடவே முடியாது. இதில் கமல் கூட ஓரளவுக்கு திராவிட மரபில் வருகிறவராக தன்னைக் காண்பித்து, சற்று முன்னதாகவே கட்சி ஆரம்பித்து தயாரிப்பு வேலைகளை செய்து வருகிறார். ரஜினியோ ஸ்கைப்பில் பெண் பார்த்து விமானத்தில் இருந்து இறங்கியதுமே திருமணம் செய்ய வருகிற அமெரிக்க மாப்பிள்ளை. 

 அதனாலே மூன்றாவது அணியின் வாக்குப் பிரிப்பு செயல்திட்ட வெற்றி வாய்ப்பு - மற்ற கட்சிகள் அளவுக்கு - இந்த நடிப்பாளுமைகளின் கட்சிகளுக்கு இருக்காது என நினைக்கிறேன். 

3) அதிமுகவைப் பொறுத்த வரையில் கடந்த சில ஆண்டுகளில் எடப்பாடியாரின் அணியினர் தம்மை நிலையான தரப்பாக காட்டியிருக்கிறார்கள். ஊடகப் பிராச்சாரத்தில் (மோடி பாணியில்) வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனால் பாஜகவின் சொம்பு இவர்கள் என்பது மக்கள் மனத்தில் ஆழமாய் பதிந்திருப்பதால் வலுவற்ற கட்சி எனும் எண்ணமும் மக்களுக்கு உண்டு. திமுக தம் பிரச்சாரத்தின் போது இப்போதைய அதிமுக அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வரின் ஊழலை அம்பலபடுத்த முயற்சிக்க வேண்டும். அவர்கள் தமிழகத்துக்கு எதிராக செயல்பட்ட தருணங்களை வலுவாக முனைக்க வேண்டும். இவையிரண்டையும் விட முக்கியமாக - பீகாரில் தேஜஸ்வி யாதவ் செய்த பிரச்சாரத்தின் பாணியில் - எதிர்கால தமிழகத்தை திமுக எப்படி வழிநடத்தப் போகிறது, அதற்கான திட்டங்கள் என்ன என பிரச்சாரம் செய்ய வேண்டும். அதாவது எதிரணியின் ஓட்டைகளைப் பற்றி அதிகம் பேசாமல் (ஏனென்றால் மக்களுக்குக்குத் தான் அது தெரியுமே) தமது சிறப்புகளை, திட்டங்களை, தாம் கொண்டு வரவிருக்கும் மறுமலர்ச்சியைப் பற்றி அதிகம் பேச வேண்டும். எதிர்மறையாக அன்றி நேர்மறையான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். 

வாக்குகளை சிதறடிக்க மட்டுமல்ல, கவனத்தை சிதறடிக்கவும் தாம் மூன்றாவது அணியினர் அமைக்கப்படுகிறார்கள். அந்த பொறியில் விழுந்து விடக் கூடாது. ஏனென்றால் தேர்தல் முடிந்ததும் ஸ்டாலினுக்கு போன் போட்டு வாழ்த்துகிற முதல் ஆள் ரஜினியாகவே இருப்பார். அதைக் கருதி அவரை சீண்டாமல் விடுவதே சிறந்த அரசியலாக இருக்கும். கமல் தேர்தல் முடிவுகள் வரும் முன்னரே இன்னும் மூன்று எடுக்க சாத்தியமில்லாத படங்களுக்கான கதைகளை யோசித்துக் கொண்டிருப்பார். யாராவது ஞாபகப்படுத்தினால் மட்டுமே குழப்படியான அரசியல் ட்வீட்களைப் போடுவது, இரு பக்கமும் மேளமடிக்கும் அறிக்கை விடுவது, வெண்ணெய் போல வழவழா வெண்பா எழுதுவது என இருக்கும், எந்த மக்கள் போராட்டத்தையும் யாருக்கு எதிராகவும் ஒருங்கிணைக்காத அவர் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறை அரசியலை மறந்துவிட்டு “உலக நாயகன்” பிம்பத்தில் கரைந்து விடுவார்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...