விவசாயிகள் சட்டம் பற்றி நேற்று படித்துக் கொண்டிருந்த போது ஒரு விசயத்தை புதிதாக கவனித்தேன்:
1) இதுவரையில் அரசு குறுக்கிட்டு குறைந்தபட்ச விலையின் அடிப்படையில் விளைபொருட்களை தரகர்கள் வாங்குவதை நிர்வகிக்கிறது. அப்போது அரசு சில வரிகளை பொருட்கள் விற்குமுன்னே வசூலித்து விடுகிறது (சுமார் 7%). பிறகு இதே அரசு தான் ரேஷனுக்காக நிறைய தானியங்களை வாங்குவதற்கு இந்த வரி மூலம் வரும் வருமானத்தை பயன்படுத்துகிறது. இந்த நடைமுறையை புதிய விவசாயச் சட்டம் ஒழிக்கிறது. நியாயமாக இந்தியாவின் அனைத்தும் மாநிலங்களின் வருமானத்திலும் ஓட்டை போட்டுகிற சட்டம் மாற்றம் இதுவென்பதால் மாநிலக் கட்சிகள் ஒட்டுமொத்தமாய் எதிர்த்திருக்க வேண்டும். ஏற்கனவே ஜி.எஸ்.டி வரியினால் வருமானத்தில் கணிசமான பகுதியை மாநில அரசுகள் இழந்திருக்கின்றன. இது மாநில அரசுகளின் ரத்தத்தை படிப்படியாக உறிஞ்சுகிற மத்திய அரசின் முயற்சிகளில் ஒன்று.
ஆனால் பெரும்பாலான மாநில அரசுகளுக்கு முதுகெலும்பில்லை. இன்னும் 25 ஆண்டுகள் பாஜக மத்தியில் ஆளும் எனில் மாநில தன்னாட்சியே இல்லாமல் ஆகும் என்பதோடு, ஒரு கட்சி, ஒரு கொள்கை, அதை அத்தனை மக்களும் மாநில விதிவிலக்கின்றி பின்பற்ற வேண்டும் எனும் காலனிய அடிமை நிலை ஏற்படும். இந்தப் பின்னணியில் தான் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளின் இப்போராட்டங்கள் நடக்கின்றன. ஒட்டுமொத்த இந்திய மாநில அரசுகள் காட்டாத துணிச்சலை எளிய விவசாயக் குடிகள் காட்டுவது ஆச்சரியமளிக்கிறது. இன்றைய நிலையில் இதை ஒரு தனிப்பெரும் சாதனையாகவே பார்க்கிறேன். ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தம் உரிமைகள் மீளக் கேட்கும் சாமர்த்தியம் இல்லாதவர்களாகவே எதிர்க்கட்சிகள் உள்ளன. நாம் இந்த விவசாயிகளை தனித்து விடுகிறோம் என்பது மன்னிக்க முடியாத அவலம்.
2) விவசாயிகளின் போராட்டத்தின் போது சமரசம் பண்ணுவதற்காக மோடியின் அரசு சில மாற்றங்களை பரிந்துரைத்தது - அவற்றில் ஒன்று இந்த வரிகளை விளைபொருட்களை வாங்கும் கார்ப்பரேட் நிர்வாகங்களே செலுத்த வேண்டும் என்பது. இதை கார்ப்பரேட் சார்பு நிபுணர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு வரி விதித்தால் அவர்கள் ஏன் பொருட்களை வாங்க வேண்டும் எனக் கேட்கிறார்கள். எனில் வரியில்லாத குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கப் போகிறார்கள் என்பது நிதர்சனம். இதை கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகள் விற்பதனால் கிடைத்த லாபம், முதல் வெற்றி என நம் காதில் பூ சுற்றுவார்கள். உண்மையில், மாநில அரசுகளுக்கு போக வேண்டிய வரிப்பணத்தை அப்படியே கார்ப்பரேட்டுகளுக்கு லாபமாக கொடுத்து விடுவது மட்டுமே இது.
ஏன் ஜி.எஸ்.டி வரி விசயத்தில் இக்கேள்வியை கார்ப்பரேட் ஆதரவாளர்கள் கேட்பதில்லை? ஏனென்றால் அங்கு நுகர்வோரும் மாநில அரசும் மட்டுமே பாதிக்கப்புகிறார்கள். முதலாளிகளுக்கு நட்டம் ஏற்படாதவரை இவர்கள் பதற மாட்டார்கள்.
ஆக, இது விவசாயிகளின் நலனை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிற, அவர்களுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டால், மாநில அரசு தலையிட முடியாதபடி சட்டப்பாதுகாப்பை கார்ப்பரேட்டுகளுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிற மசோதா மட்டுமல்ல, இது மாநில அரசுகள் வரி விதிக்கும் உரிமைகளை பறிக்கிற மசோதாவும் தான்.
வரி விதிக்கவில்லை என்றால் நல்லது தானே என நீங்கள் கேட்கலாம். பிரச்சனை என்னவென்றால் இந்த வரிகளை வசூலித்தே மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. கோயில் கட்டுவது, பாகிஸ்தானுக்கு ஏவுகணை அனுப்புவது, செல்பி போடுவது, மதவெறியைத் தூண்டுவது, பிரிவினையை வளர்ப்பது, தேர்தல் ஆணைய உதவியுடன் மின்னணு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்வது என வாக்குகளைப் பெறும் மத்திய அரசுக்கு மக்கள் நலத்திட்டங்களில் நம்பிக்கை இல்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் கொள்கை அளவில் அதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆகையால் ஜி.எஸ்.டி வரிகள் மத்திய அரசின் கஜானாவுக்குள்ளே முடங்கிப் போகின்றன, நலத்திட்டங்கள் வழியாக மக்களுக்கு திரும்ப வருவதில்லை. ஆனால் நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்கு வாங்கும் மாநில அரசுகளோ வரிகளை எளிய மக்களுக்கே திரும்ப அளிப்பதன் வழியாக தம்மை தக்க வைக்கின்றன. இந்த வித்தியாசத்தை ஒழிக்க பாஜக அரசு நிறைய போராடுகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் மாநில அரசுகள் சுயமாக வரி வசூலிக்க இயலாமல், மத்திய அரசு கொடுக்கும் குறைந்த பட்ச பணத்தைக் கொண்டு நிர்வாகத்தை நடத்தும் நிலையை ஏற்படுத்துவார்கள். இங்கு அரசு பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ரேஷன் கடைகள், இட ஒதுக்கீடு, இயற்கைப் பேரழிவுகளின் போது வழங்கப்படும் அரசு உதவிகள் என அனைத்தும் முடங்கிப் போகும். அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் நடப்பது ஒரே தலைமையின், ஒரே கட்சியின் ஆட்சியே எனும் நிலையும் ஏற்படும். அதுவே அவர்களின் கனவு. இந்த விவசாயிகள் மசோதா என்பது அந்த கனவை நோக்கி அவர்கள் எடுத்து வைக்கும் அஸ்திவாரக் கல்.
இது வெறும் ஆறே ஆண்டுகளில் நாம் அடைந்துள்ள நிலை. 2045இல் இந்தியாவின் நிலைமை என்னவாகும்? 1930களில் ஜெர்மனி எப்படி இருந்ததோ அப்படி இருக்கும். அதைத் தடுப்பதற்கான முயற்சிகள் பெரிதாக எங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. எடப்பாடி போன்ற மாநிலத் தலைவர்கள் தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருட்டிக் கொண்டு குறுநில மன்னர்களைப் போல மத்திய அரசுக்கு கப்பம் கட்டி வாழ்ந்தால் போதும் எனும் அடிமை மனப்பான்மையில் வாழ்கிறார்கள். காங்கிரஸ் முழுக்க செத்து பிணக்கிடங்கில் உறங்குகிறது. மிச்சசொச்சமுள்ள மாநிலக் கட்சிகள் ஒன்றிணையாமல் இந்திய ஒன்றிய அமைப்பைக் காப்பாற்ற முடியாது.


Comments