வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் இச்சட்டங்களின் கார்ப்பரேட் சார்பு நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிற கட்டுரைகளை, விளக்கங்களை பாஜக பக்கமிருந்து, நவதாராளத்துவ சிந்தனையாளர்கள் தரப்பில் இருந்தும் காணோம். இதுவே எனக்கு ஆச்சரியமளிக்கிறது - மாறாக, இது ஒரு நவதாராளாதவாத திட்டமல்ல, இது மக்கள் நலத்தை நோக்கமாக கொண்ட சட்டம் என முட்டுக் கொடுக்கிறார்கள். என்னதான் அதானியின் விமானத்தில் பறப்பவர் என்றாலும் தன்னை ஒரு ஏழைப்பின்புலத்தை சேர்ந்தவர் என காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. என்னதான் மத்திய வர்க்கத்தின் செண்டிமெண்டுகளை வெளிப்படுத்தினாலும் விளிம்புநிலையினருக்கான நலத்திட்டங்களை வடக்கே அதிகமும் கொண்டு வந்தே அவர் இரண்டாம் முறையும் பிரதமராக முடிந்தது.
பாஜக ஏன் பம்முகிறது என்றால், மக்கள் எதிர்ப்பு, விவசாயம், சிறுதொழில் வியாபாரம் எனும் பல கூர்முனைகள் கொண்ட ஒரு பெரும் ஆயுதத்தை பாஜக எதிர்கொண்டு “சத்தியமா வலிக்கல” என நடிக்கவும், நான் ஒரு சாத்வீகமான அன்பான ஆள் என வேடமணியவும் நேர்கிறது. இதனாலேயே பிரதமரும் அமைச்சர்களும் திரும்பத் திரும்ப சொன்னாலும் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது. “இது உன் டயலாக் இல்லியே தம்பி” என பஞ்சாப், ஹரியானா வேளாண் மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
சுவாரஸ்யம் இங்கு என்னதான் நமது கார்ப்பரேட் சார்பு அரசுகள் மொத்த நாட்டையும் சில பணக்காரர்களுக்கு விற்க விழைந்தாலும் இந்நாட்டின் பன்மையமான, பன்முகங்கள் கொண்ட நிலப்பரப்புகளும் ஜனங்களும் இன்னும் உயிருடன் இருக்கிற ஜனநாயகமும் இதை சுலபமாக்குவதில்லை. இந்த பின்னணியில் தான் “இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை சுலபத்தில் கொண்டு வர முடியாதபடிக்கு இங்கு ஜனநாயகம் ரொம்ப அதிகமாக உள்ளது” என நிதி ஆயோக்கின் அமிதாப் காண்ட் சொல்வதைப் பார்க்க வேண்டும்.
யோசித்துப் பாருங்கள், இதுவே அமெரிக்கா என்றால் வேளாண் சட்டங்களை நவதாராளதாவ நவமணிகள் என அரசும் அரசின் ஆதரவாளர்களும் வெளிப்படையாக கொண்டாடி இருப்பார்கள்; அங்கு ஒரு சிறுபான்மை பெரும்பணக்காரர்கள் ஆவதே லட்சியம், இங்கோ பெரும்பகுதி மக்களின் இலக்கு நிம்மதியான, நிலையான வாழ்க்கை, பணத்துக்குப் பதிலாக விழுமியங்களை, பாரம்பரியத்தின் வேர்களை தழைக்க வைப்பது, குடும்பம், பிள்ளை, பேரப்பிள்ளைகள் பசியின்றி இருக்க ஒன்றாக சொந்த மண்ணில் வாழ்வது. நமக்கும் அமெரிக்கர்களுக்குமான முக்கிய வித்தியாசம் இது.
அதனாலே இம்மண்னில் கார்ப்பரேட்டுகள் மீது ஒரு அவநம்பிக்கையும் அச்சமும் இன்னும் மக்களிடம் உள்ளது. அதனாலே கொரோனா காலத்தில் அமெரிக்காவில் மக்கள் மருத்துவ சிகிச்சைக்கான செலவை அஞ்சி வீட்டிலேயே பதுங்கிக் கொள்ளும் அவலம் நிகழ்ந்த போது இந்தியாவால் மக்களுக்கு தரமான சிகிச்சையை அரசு மருத்துவமனைகளில் அளிக்க முடிந்தது; வேலையில்லாத மக்களுக்கு சில மாநிலங்களில் இலவசமாக அத்தியாவசிய தானியங்களை கொடுத்து சமாளிக்க உதவினார்கள்; ஆனால் அமெரிக்க நவதாராளாவாத அரசுக்கு இத்தகைய மக்கள் நல அணுகுமுறை இருக்கவில்லை. அங்கு டிரம்பைப் போன்ற ஒருவர் தன் பெரும்பணத்தை, கார்ப்பரேட் செல்வாக்கை விளம்பரப்படுத்தி அதிபர் ஆகும் போது இங்கு செல்வத்தில் திளைக்கும் மோடி கூட தன்னை ஏழைத்தாயின் மகன் என்று கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அழைப்பதும், சில வருடங்களிலேயே பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபராகி விட்ட எடப்பாடி தன்னை விவசாயி என முன்வைப்பதும் மட்டுமே தலைவராக நீடிக்க ஒரே வழியாக இருக்கிறது - இங்கு வெளிப்படையாக ஒருவர் தன்னை செல்வந்தர்களின் பிரதிநிதி என கோரிக்கொள்ள முடியாது; அதனாலே வெளிப்படையாக நீங்கள் மக்களின் நிலங்களைப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளிடம் கொடுக்க, கீழ்த்தட்டு, கீழ்மத்திய வர்க்க மக்களின் வாழ்வுரிமைகளை பறித்தெடுத்து மத்திய மேற்தட்டு வர்க்கங்களை மட்டும் காப்பாற்றுகிற ஒரு அரசாக நீங்கள் இங்கு இருக்க முடியாது. அரசியலில் ஊழல் செய்து பெரும் சொத்துக்களை சம்பாதித்தாலும் அவற்றை பினாமிகளைக் கொண்டே கைக்கொள்ள முடியும். இந்த சின்ன தயக்கம் இருக்கும் வரை இந்தியா தப்பித்துக் கொள்ளும்.

Comments