முதலில் ஒரு விசயத்தை சொல்லி விடுகிறேன் - அடிப்படையில் பிரெட் என்பது மாவு, கொஞ்சம் வெண்ணெய் / எண்ணெய், உப்பு + சர்க்கரை, பேக்கிங் சோடா + பேக்கிங் பவுடர் (அல்லது) yeast சேர்த்து ovenஇல் வைத்து பேக் செய்து தயாரிப்பது. இதில் எதையும் கலந்து நீங்கள் விரும்புகிறபடியான பிரெட்டை தயாரிக்கலாம். அதாவது, எப்படி சாதத்துடன் சாம்பார் கலந்து சாம்பார் சாதம் பண்ணுவதைப் போல. எப்படி விதவிதமான சாதங்கள் உண்டோ அதே போல விதவிதமான பிரெட்டுகளும் பண்ணலாம். அப்படித்தான் நான் இந்த சிக்கன் மசாலா பிரெட்டையும் முயன்று பார்த்தேன் - பிரமாதமாக வந்திருக்கிறது. எப்படி செய்தேன் என சுருக்கமாய் சொல்கிறேன்.
1) முதலில் உலர் கலவை (dry ingredients): நான் ஒரு கோப்பை மைதா + ஒரு கோப்பை கோதுமை மாவு என எடுத்து கலந்து கொண்டேன். நீங்கள் விரும்பினால் இரண்டு கோப்பைகளுக்கும் மைதா மாவே எடுத்துக்கொள்ளலாம். இதில் தேவையான அளவுக்கு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர், இரண்டு ஸ்பூன்கள் பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும்.
2) அடுத்து ஈரக் கலவை (wet ingredients): தேவையான அளவுக்கு வெண்ணெய்யும் சன்பிளவர் எண்ணெய்யும் (அரை கப் வருமளவுக்கு) கலந்து அடித்து வைத்துக் கொண்டு அதனோடு இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்து இம்மூன்றையும் நன்றாக அடித்து வைக்கவும்.
3) அடுத்து சிக்கன் மசாலா: எலும்பில்லாத சிக்கனாக 300 கிராம் வாங்கி அதை கழுவியபின் மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றி கீமாவாக பண்ணி வைக்கவும். வாணலில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மூன்று பச்சை மிளகாய்கள், கருவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்தபின், ஒரு நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கி, அதில் இஞ்சி பூண்டு அரவை மற்றும் மஞ்சள் பொடி சேர்க்கவும். அடுத்து இதில் கால் ஸ்பூன் மிளகாய் பொடி, ஒரு ஸ்பூன் மல்லிப்பொடி சேர்த்து வதக்கவும். அடுத்து நான்கைந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பின், சிக்கன் கீமாவை சேர்க்கவும். முக்கியமான விசயம் எந்த கட்டத்திலும் தண்ணீர் சேர்க்கக் கூடாது. எண்ணெய்யிலே முழுக்க சிக்கன் வேக வேண்டும். ஓரளவுக்கு வெந்த பிறகு அரை ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து கிளறி சில நிமிடங்கள் வேக வைக்கவும். இரு கை பிடி அளவுக்கு புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். சிக்கன் மசாலா ரெடி.
4) இறுதியாக உலர் கலவையில் ஈரக்கலவையுடன் சிக்கன் மசாலாவை படிப்படியாக கலந்து பிசையவும். இறுதி வடிவில் மாவு ஒட்டுபடியான ஈரத்தில் இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் சேர்க்கலாகாது. இறுக்கமாய் வந்தால் கூடுதலாக முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.
Ovenஐ 185 டிகிரி டெல்ஷிஸுக்கு 45 நிமிடங்கள் முன்-சூடு செய்யவும். 45 நிமிடங்கள் முடிந்ததும் இந்த மாவை mouldஇல் வைத்து உள்ளே வைக்கவும். 45-55 நிமிடங்களில் தயாராகி விடும். இருந்தாலும் அரை மணி போனதும் ஒருமுறை எடுத்து வெந்து விட்டதா சோதிக்கலாம் - ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வந்தால் தயார் என அர்த்தம்.
நான் இது தயாரான பின் சுவைத்த போது கிட்டத்தட்ட கொத்துப்பொரோட்டா சுவை கிடைத்திட மகிழ்ந்து போனேன் - நான் ஒரு அதிதீவிர கொத்துப் போரிட்ட ரசிகன் என்பதால்.
ஆர்வமுள்ளோர் முயன்று பாருங்கள். Oven இல்லாதவர்கள் குக்கரில் வைத்து கூட செய்யலாம். எப்படி என யுடியூபில் பாருங்கள்.
Comments