Skip to main content

ஆஸி தொடர் - அஷ்வினுக்கும் ஸ்மித்துக்கும் இடையே ஒரு மகத்தான சமர்




இந்த ஆட்டத்தொடரில் மலை மலையாய் ரன்களைக் குவிக்கப் போகிறார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டர் இருவர் ஆஸி மட்டையாளர் ஸ்மித்தும் இந்திய மட்டையாளர் புஜாராவும். இருவருமே ஒரே பாணியில் தொடர்ந்து வெளியேற்றப்பட்டதை முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் கண்டோம். இத்தொடரின் மகத்தான கணங்கள் என இவற்றை சொல்வேன்.


முதலில் ஸ்மித்-அஷ்வின் சமரைப் பார்ப்போம்.


ஸ்மித் எனும் அசகாய சூரன் 

ஸ்மித்துக்கென்றே ஒரு தனித்துவமான தடுப்பாட்ட பாணி இருக்கிறது. ஒரு off spinner பந்தை நான்காவது, ஐந்தாவது குச்சியில் போட்டு உள்ளே திருப்பி மூன்றாவது குச்சிக்கு கொண்டு வருகிறார் என்றால் மரபான மட்டையாளர் ஒருவர் அதை முன்னங்காலை நடுக்குச்சிக்கு நகர்த்தி முன்னுக்கு வந்து - திருப்பத்துக்கு எதிராக - கவர் அல்லது mid off பகுதிக்கு விரட்டுவார் அல்லது அப்பகுதி நோக்கி தடுத்தாடுவார். அல்லது புஜாரா போன்ற ஒருவர் அதே பந்தை உள்ளே வரும் வரை பொறுத்து நேராக தடுத்தாடி பந்து வீச்சாளரை நோக்கி செலுத்துவார். முதலாவதில், இப்பந்து நன்றாக திரும்பி மட்டையாளரை முறியடிக்கும் பட்சத்தில் அவர் பவுல்ட் ஆகலாம், LBW ஆகலாம். இரண்டாவதில் பந்து மிக மிக அதிகமாய் திரும்பும் பட்சத்தில் மட்டும் ஷார்ட் லெக்குக்கு கேட்ச் கொடுக்கலாம். ஆனால் ஸ்மித் இதே பந்தை மூன்று குச்சிகளுக்கும் குறுக்காக சென்று பந்து விழுகிற நான்காவது குச்சி லைனில் எதிர்கொண்டு நேராக அடிப்பார் - அதாவது பந்து திரும்பும் முன் அதை ஒரு மரபான பேட்ஸ்மேன் கவர் பகுதியில் அடிப்பார் எனில் அதையே ஸ்மித் தன் வித்தியாசமான காலாட்டம் மூலம் நேராக அடிப்பார். மற்றவர்களுக்கு 5, 6வது குச்சியாக இருப்பது அவருக்கு மட்டும் மூன்றாவது குச்சியாகி விடும். இது பந்து வீச்சாளரின் வியூகத்தை தலைகீழாக்கி ஆட்டத்தை குழப்பி விடும். ஸ்மித் இதை வெற்றிகரமாய் சாமர்த்தியமாய் அலட்சியமாய் ஆடுவதைக் கண்டால் அவர் ஒரு தனி உலகில் தனக்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆடுவதைப் போல இருக்கும்

சரி offspin பந்து உள் நோக்கி திரும்பினால் அவர் அதை திரும்பின் பின் புஜாரா பாணியில் ஆடினால் என்னவாகும்? மற்றவர்களுக்கு middle and legஇல் திரும்பும் பந்து ஸ்மித்துக்கு உடம்பில் படாமல் வெளியே போகும். ஸ்மித்துக்கு ஏற்றபடி பந்து வீச்சின் லைனை - பந்து விழும் திசையை - மாற்ற நினைக்கும் பந்து வீச்சாளர்கள் அவரது பொறியில் வந்து மாட்டிக் கொள்வார்கள். அவரது குச்சிகளை அடிப்பது ஒரு வழி என நினைத்தால் அப்படி வீசப்படும் பந்தை அவர் fine leg அல்லது mid wicket நோக்கி தட்டியோ திருப்பியோ விட்டு தப்பித்து விடுவார், ரன்களையும் கறப்பார். நேராக வீசினால் மற்றவர்கள் நேராக அடிக்க வேண்டிய பந்து ஸ்மித்துக்கு கால் பக்கமாய் வீசப்படும் ஒரு வைட் பந்தாக இருப்பதால் பந்து வீச்சாலருக்கு முகத்தில் முட்டையை அடித்ததைப் போல ஆகி விடும்.


இது ஒன்றும் கிரிக்கெட் வரலாற்றில் புதிது அல்ல. மே. தீவுகளின் சந்தர்பால், தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் கேட்டிஷ் போன்றவர்கள் இந்த - ஸ்டம்புகளுக்கு குறுக்காக சென்று பந்தை கால்பக்கமாய் விரட்டும் - பாணியை வெற்றிகரமாய் பின்பற்றின இடதுகை மட்டையாளர்கள். ஸ்மித்துக்கும் இவர்களுக்குமான முக்கிய வித்தியாசம், எதிரணித் தலைவர் கால்பக்க ஆடுகளத்தை தடுப்பாளர்களைக் கொண்டு இறுக்கமாக்கி நிறைய பந்துகளை off பக்கம் வைடாக போட்டு அவர்களை அமைதியாக்க முடியும், ஒரு பக்கமாய் (கால் பக்கம்) மட்டுமே அவர்களை ஆட செய்ய முடியும் என்பது. ஆனால் ஸ்மித்தோ off-leg பக்க ஆடுகளப் பரிமாணங்களை முழுக்க மாற்றியமைத்தவர், அவரை சுலபத்தில் கட்டுப்படுத்த முடியாது.

 ஆறாவது, ஏழாவது குச்சிகளில் விழும் பந்துகளை இந்த இடதுகை மட்டையாளர்கள் போக விட்டு விடுவார்கள், ஆனால் ஸ்மித்தோ இதே பந்துகளை நேராகவும் off பக்கம் கவரிலுமாக விரட்டுவார். மிக மிக வைடாக கற்பனையே பண்ண முடியாதளவுக்கு வைடாக போட்டால் மட்டுமே ஸ்மித் அப்பந்துகளை விடுவார். ஸ்மித் விசயத்தில் வைடாக பந்துகளை அவர் முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைப்பது ஆட்டத்தை தலைகீழாக்கி விடுகிறது, கோணங்களை முழுக்க அவருக்கு சாதகமாக்கி விடுகிறது. இரவில் படுக்கையில் உங்களுடன் தூங்குகிறவர் இடித்து உங்களை படுக்கையின் விளிம்புக்கு தளும் போது நீங்கள் அவரை தோளால் திரும்ப இடித்து தள்ளுவது முதலில் குறிப்பிட்ட இடதுகையாளர்களுக்கானது. ஆனால் ஒருவர் படுக்கையையே மொத்தமாய் தள்ளிக்கொண்டு போனால் அதுவே ஸ்மித்துக்கானது


ஸ்மித்தை எப்படி சமாளிப்பது?


ஐந்தாவது, ஆறாவது குச்சியில் பந்தை தொடர்ந்து போட்டு ஆறாவது, ஏழாவது குச்சிக்கு வெளியே ஸ்விங் செய்து எடுத்துப் போவது, ஸ்மித் என்னதான் ஆர்ப்பாட்டமாக அசைந்தாலும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஒரே திட்டப்படி வீசுவது. பந்து அதிகமாய் ஸ்விங் ஆனால் மட்டுமே இது எடுபடும். மேலும் பெரும் பொறுமை வேண்டும். இங்கிலாந்து ஸ்விங் பந்து வீச்சாளர்கள் இதை முயன்று பார்த்திருக்கிறார்கள். மற்றொரு திட்டம் 2019இல் ஆஸி அணி நியுசிலாந்துக்கு டெஸ்ட் தொடர் ஆட சென்ற போது நியுசிலாந்தின் நெய்ல் வாக்னர் ஸ்மித்துக்கு எதிராக பயன்படுத்தியது

வாக்னரின் பாணி

வாக்னர் இதில் ஒரு வித்தியாசமான கால் பொறியை (leg trap) பயன்படுத்தினார் - அவர் bowled, LBW ஆகியவற்றை எதிர்பார்க்காமல், (short) குறைநீள பந்துகள் வீசி leg gully, short leg, fine leg, mid wicket போன்ற பகுதிகளில் கேட்ச் எடுக்க முயன்றார். குறுக்கே சென்றும் குச்சிகளை விட்டும் நின்று (டிவில்லியர்ஸ் பாணியில்) ஆடுகிற மட்டையாளர்களுக்கு குறைநீளப் பந்து, பவுன்சர் ஆகியவை வீசுவது ஒரு நல்ல உத்தி. வாக்னர் இடதுகை வீச்சாளராக ஓவர் தெ விக்கெட் வந்து வீசுவது கோணங்களை மாற்றியமைப்பதால் இது செமையாக எடுபடும்.


நமது அஷ்வின் வாக்னரின் இதே உத்தியை இடதுகை வீச்சின் கோணம் இல்லாமல், பவுன்சரின் தனிச்சிறப்பு இல்லாமல் ஸ்மித்துக்கு எதிராக செயல்படுத்தி வெற்றியடைந்திருக்கிறார் என்பதே சுவாரஸ்யம்.


முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஸ்மித் ஒரு ரன்னுக்கு அஷ்வினால் வெளியேற்றப்பட்டார். அடுத்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸிலோ பூஜ்யத்துக்கு.


அஷ்வின் இத்தொடர் முழுக்க தன் off break பந்துகளை வலது, இடது கை மட்டையாளர்களுக்கு நேராகவே வீசி வருகிறார். பந்து திரும்பினாலும் அவர் மரபான முறையில் வலதுகை மட்டையாளரை பவுல்ட் ஆக்கும் படி 5வது குச்சியில் இருந்து off குச்சிக்கு கொண்டு வந்து மட்டையாளரை விரட்டத் தூண்டுவதை விட நேராக வீசவே முயன்று வருகிறார். ஸ்மித்துக்கு அஷ்வின் வழக்கமாக ஷார்ட் லெக், லெக் ஸ்லிப் ஆகியன வைக்கிறார். கூட offஇல் ஒரு ஸ்லிப்பும் (ரஹானே). முதல் டெஸ்டில், ஏன் ரெண்டு பக்கத்திலும் அஷ்வின் ஸ்லிப் வைத்திருக்கிறார் என ஸ்மித் யோசிக்கிறார். அஷ்வினுக்கு தூஸ்ரா பந்து கிடையாது. ஆகையால் இந்த off ஸ்லிப்பானது தான் வைடாக போய் நின்று கால் பக்கமாய் அடிக்காமல், தன்னை நேராக ஆடச் செய்வதற்கான அஷ்வினின் ஒரு தந்திரம் (bluff) என ஸ்மித் நினைத்திருக்கலாம். பந்து அதிகமாய் திரும்பும் என நினைத்து (தன் வழக்கப்படி) அவர் off குச்சியில் இடது காலையும் நான்காவது / ஐந்தாவது குச்சிகளில் வலது காலையும் வைத்து உள்ளே திரும்பும் பந்தை fine leg பக்கமாய் அடித்திருக்கலாம். (leading edgeஆக வேறெங்காவது போயிருக்கும்.) ஆனால் அஷ்வினின் பந்து அதன் கோணப்படி உள்ளே வருவதாய் தோன்றினாலும் நேராகவே போகிறது (arm ball). ஸ்மித் சற்று குழம்பி off குச்சியின் நின்றபடி அரைமனதாக அதை ஷார்ட் லெக் பக்கமாய் தட்டுகிறார். பந்து நேராக சென்று கொஞ்சம் கூடுதலாய் திரும்பி எகிறிட அவர் Off slipக்கு கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார். அதாவது, இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து பந்து வீச்சாளர்களின் யுக்திகளை இரட்டிப்பாக ஒரே சமயம் பயன்படுத்தி double bluff செய்து அஷ்வின் ஸ்மித்தை டம்மி பீஸாக்குகிறார். இரண்டு பக்கமும் பொறியை வைத்து இல்லாத பந்துக்கு ஆட வைத்து வெளியேற்றுகிறார். இதே பந்து ஒரு அடி வெளியே விழுந்திருந்தால் எடுபட்டிருக்காது - arm பந்து தான் விழப்போகிறது என கணித்து அவர் அதை நேராக தடுத்தாடியிருப்பார் - என்பது முக்கியம்.


அடுத்த ஆட்டம் மெல்பொர்னில்ஸ்மித் அஷ்வினின் பந்தை மீண்டும் எதிர்கொள்கிறார். சுழல் பந்து அதிகமாய் திரும்புவதனாலோ ஏனோ களத்தடுப்பில் கால் ஸ்லிப்பை leg gullyஆக வைத்திருக்கிறார்கள். ஒரு ஷார்ட் லெக். முந்தின ஆட்டத்தைப் போன்றே ரஹானே off ஸ்லிப்பில் நிற்கிறார். இந்த ஓவரின் சிறப்பு அஷ்வின் முந்தின ஆட்டத்தில் வீசிய ஆர்ம் பந்தை மீளுருவாக்கம் செய்ய முயலவில்லை என்பது. அடுத்த சிறப்பு பந்தின் லூப். லூப் என்றால் பந்தின் வீச்சுத் தடம் ஒருவிதமாகவும் அது ஆடுதளத்தில் விழுகிற திசை (line) வேறாகவும் இருப்பது. இப்பந்து வரும் தடத்தைப் பார்த்தால் அது off குச்சிக்கு சற்று வெளியே விழுந்து உள்ளே வருகிறதோ எனத் தோன்றும். அதனாலே ஸ்மித் இதை நேராக தடுத்தாடுவதா இல்லை கால் பக்கமாய் அடிப்பதா என சற்றே குழம்புகிறார். முதலில் அவரது மட்டை உயர்ந்துள்ள விதத்தைப் பார்க்கும் போது அவர் இப்பந்து off குச்சிக்கு வெளியே விழுவதால் அதை மிட் விக்கெட்டுக்கு அடிக்கலாம் என எதிர்பார்த்து, பின்னர் பந்து எதிர்பார்த்ததைப் போல வெளியே விழாமல் உள்ளே வர குழம்பி ஷாட்டை மாற்றுகிறார் எனத் தெரிகிறது. இப்போது அவர் லெக் ஸ்லிப் இருந்த பக்கமாய் தட்டி விட முயன்று லெக் கல்லிக்கு (புஜாரா) கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார். இம்முறை பூஜ்யத்துக்கு.


இங்கு மற்றொரு விசயத்தை குறிப்பிட வேண்டும். ஸ்மித் தனது வழமைப்படி குச்சிகளுக்கு குறுக்கே நடந்து போய் ஆடியிருந்தால் இப்பந்து கால் பக்கமாய் அவரைக் கடந்து தொடாமல் போயிருக்கும். ஆனால் அவர் தன் காலாட்ட பாணியை மாற்றிக் கொண்டதாலே இம்முறை அவுட் ஆகிறார். ஒருவேளை அவர் அண்மையில் முதுகுக் காயத்தினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருப்பதால் தனது காலாட்டத்தில் அந்தளவுக்கு நேர்த்தியாக இயங்க முடியவில்லையா அல்லது அஷ்வின் இரண்டு பக்கமும் ஸ்லிப், gully வைத்திருப்பது அவரைக் குழப்புகிறதா? அடுத்தடுத்த ஆட்டங்களிலும் அஷ்வினால் தொடர்ந்து  ஸ்மித்தை இந்த முறையில் பொறியில் தொடர்ந்து வைத்திருக்க முடிந்தால் அது ஒரு மகத்தான சாதனையாக இருக்கும் எனத் தோன்றுகிறது


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...