நட்டு என்கிற நடராஜனுக்கு இவ்வளவு சீக்கிரம் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை (பொதுவாக இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைவது அவ்வளவு சிரமம் அல்லவா), ஆனால் வாய்ப்பு கிடைத்தால் அவர் நிச்சயம் பிரகாசிப்பார் என நம்பினேன். அப்படித்தான் அடுத்தடுத்த ஆட்டங்களில் நடந்திருக்கிறது - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் என்றால் முதல் டி-20 போட்டியில் மூன்று விக்கெட்டுகள் என கலக்கி இருக்கிறார்.
இந்த ஐ.பி.எல் துவக்கத்தில் இருந்தே அவருக்கு அதிர்ஷ்டம் வலுவாக இருக்கிறது - 2018இல் அவர் சன் ரைசர்ஸ் அணிக்குள் வந்தால் 11இல் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஏனென்றால் பயிற்சியாளர் டாம் மூடிக்கு நட்டு மீது அதிகம் நம்பிக்கை இருக்கவில்லை. அவர் கலீலுக்கு அதிகம் வாய்ப்பளித்தார். ஆனால் மூடியின் இடத்தில் டிரவர் பெய்லிஸ் பயிற்சியாளர் ஆனது நட்டுவுக்கு பயன்பட்டது. அவர் நட்டு மீது அதிக நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தார். அத்துடன் 2020 ஐ.பி.எல்லில் அதிகம் கவனிக்கப்பட்ட யார்க்கர் நிபுணராக நட்டு மாறினார்.
அடுத்த அதிர்ஷ்டம்: ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய டி-20 அணிக்கு கூடுதல் வீரரகாக அவர் சேர்க்கப்பட்ட நிலையில் (அதுவும் கொரோனாவினால் ஏற்பட்ட புதிய பயிற்சித் தேவைகளினால் தான்) வருண் சக்கரவர்த்திக்கு காயம்பட நேரடியாக அணிக்குள் நட்டு வந்தார். ஆனால் அடுத்து வேகவீச்சாளர் செயினிக்கு காயம்பட்டது தான் அதிர்ஷட்டத்திலேயே பெரிய அதிர்ஷ்டம். அவர் இப்போது சயினிக்கு கூடுதல் பதில் வீரராக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டு, சயினிக்கு காயம் மோசமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் தேர்வாகி ஆடினார். சிறப்பாக பந்து வீசி பரவலான பாராட்டுகளைப் பெற்றார். அதாவது இரண்டு வீரர்களுக்கு அடுத்தடுத்து காயம் ஏற்பட்டு நட்டுவின் உடனடி பிரவேசம் நிகழ்ந்தது. ஆனால் அதிர்ஷ்டம் ஓரளவுக்குத் தான் கைகொடுக்கும் - அதைத் திறம்பட பயன்படுத்துவது என ஒன்றொருக்கிறவதல்லவா, அதில் தான் நட்டுவின் சில சிறப்பான இயல்புகள் உதவியிருக்கின்றன:
1) நிலையான மனம், தடுமாறான புத்தி, வலுவான மனத்திடம் - இதை ஒட்டுமொத்தமாக ஆங்கிலத்தில் temperament என சொல்லுவார்கள். இது நட்டுவுக்கு இயல்பாகவே நிறைய உள்ளது. திறமையான வீரர்கள் எல்லாரும் ஜெயிப்பதில்லை, ஏனென்றால் மனத்திடம் அவர்களுக்கு குறைவாக இருக்கும். இவ்விசயத்தில் நட்டு ஜெயிப்பதற்காகவே பிறந்தவர்.
2) நீங்கள் நட்டு பந்து வீசும் போது ஒன்றை கவனியுங்கள் - ஒரு பந்தை குறிப்பிட்ட நீளத்தில் வீசுகிறார் என்றால் அதை அவர் ஏற்கனவே தீர்மானித்து விட்டு வீச வந்திருக்கிறார் எனப் பொருள். அந்தப் பந்து நான்கு ரன்களுக்கு அடிக்கப்பட்டால் அதில் தவறில்லை என தொடர்ந்து அங்கேயே - மிகச்சிறிய மாறுபாட்டுடன் - நட்டு வீசுவார். ‘இந்த வீச்சாளரை நம்மால் சுலபத்தில் அச்சுறுத்த முடியாது’ எனும் சேதி மட்டையாளருக்கு போய் சேர்ந்து விடும். அதாவது நான்கு ரன்களை அடித்தாலும் மட்டையாளருடனான சமரில் நட்டு வென்று விடுகிறார். ஒருவேளை இரண்டாவது பந்தில் அடி வாங்கினாலும் நட்டு ரொம்ப கவலைப்படாமல் அடுத்து வீச ஒரு மாற்றுப் பந்தை வைத்திருப்பார் - யார்க்கர் அடி வாங்கினால் ஒரு மெதுவான பந்து. இந்த இரண்டு பந்துகளையே அவர் திரும்பத் திரும்ப வீசுவார். மற்ற பந்து வீச்சாளர்களைப் போல அந்நேரத்தில் தோன்றுகிறாற் போல புதுப்புது பந்துகளாக வீச முயன்று சொதப்ப மாட்டார். இதையே இத்தனை வருடங்களாக ஆடி வரும் உமேஷ் யாதவ், ஷாமி போன்றோருடன் ஒப்பிட்டுப் பாருங்கள் - இரண்டு பந்துகள் சரியாக விழ வில்லை, 4, 6 என அடி வாங்கினால் இவர்கள் அதன் பிறகு மிக மிக மோசமாய் வீசுவார்கள். இந்த வயதிலேயே நட்டுவுக்கு நிலையான திட்டம் உள்ளது என்பது சிறப்பு. இவ்விசயத்தில் அவர் பும்ராவைப் போன்றவர்.
3) மூன்றாவதாக, முக்கியமாக, நட்டுவுக்கு தான் நினைக்கும் பந்தை வீசுகிற கூர்மை உண்டு. முதல் டி-20 போட்டியில் மத்திய ஓவர்களில் வலது கை வீரர்களுக்கு நேராக, உள்ளே வரும் பந்துகளை round the wicket வந்து வீசுவது ஒரு திட்டம். ஆனால் இதை துல்லியமாக நிறைவேற்றினாலே சிறப்பு. அப்படியே அவர் மேக்ஸ்வெல்லை வீழ்த்தினார். அதாவது மேக்ஸ்வெல்லுக்கு இதுவே பலவீனம் என்றெல்லாம் யோசித்து பந்துக்கு பந்து குழப்பிக் கொள்வதல்ல. எல்லாருக்கும் ஒரேவிதமான பந்துதான். எல்லாம் யானைக்கும் ஒரே குழிதான் தோண்டுவோம், விழுந்தால் விழு. இல்லாட்டி தப்பிச்சு போ. இந்த எளிமை அவரது பந்துகள் தொடர்ந்து ஒரே இடத்தில் விழுவதற்கு உதவுகிறது.
4) மேலே சொல்லியிருப்பதன் தொடர்ச்சியாக திட்டமிடலில், கள-அமைப்பில் உள்ள எளிமை நட்டுவின் நீட்டுப்புக்கு உதவுகிறது. சில நேரம் இறுதி ஓவர்களில் யார்க்கர் எடுபடாமல் ஓவர் பிட்ச் பந்தை வீசினால் அவர் அடிவாங்குவார். ஆனால் அந்த ரிஸ்கை எடுக்க அவர் தயாராகவே வருகிறார். அடுத்தடுத்து அதே பந்துகளை முயல்வார். எடுபடவில்லை என்றால் அதை ஏற்பார். இது தோனியின் பாணி. யார்க்கர் சரியாக விழ வில்லை, அதனால் பவுன்சர் போடுவோம், வெவ்வேறு பந்துகளை வீசுவோம் என்றெல்லாம் அந்நேரத்துக்கு யோசிக்க மாட்டார். இது டி-20யில் பேட்ஸ்மேன் முன்னெடுக்கும் யுக்தியும் தான் - MIக்காக பொலார்ட் பேட்டிங் பண்ணும் போது கவனியுங்கள்; முழுநீளத்தில் நேராக தன் அரைவட்டத்தில் விழும் பந்துக்காக காத்திருப்பார்; அதுவரை ஒற்றை இரட்டை ஓட்டங்கள் எடுப்பார். விழுந்ததும் நேராக அடித்து 4, 6 என விளாசுவார். அப்படியும் சொதப்பினால் போனால் போச்சு என தோல்வியை ஏற்றுக் கொள்வார். இந்த அணுகுமுறையின் சிறப்பு என்னவென்றால் அழுத்தத்தை எதிர்த்தரப்பின் மீது சுமத்துவது தான். இதை நட்டு தன் பந்து வீச்சில் செயல்படுத்துகிறார்.
5) நட்டுவின் பந்து வீச்சைப் பார்க்கிறவர்களுக்கு அவர் இன்னும் 5-8 கி.மீ வேகத்தை அதிகப்படுத்தினால் இன்னும் வெற்றிகரமாக விளங்கலாமே எனத் தோன்றும். ஆனால் சமிந்தா வாஸ் இதே வேகத்தில் (130 கி.மீ) வீசியே தலைசிறந்த வீச்சாளராக விளங்கினார் என மறந்து விடக் கூடாது. இந்தியாவை எடுத்துக் கொண்டால் பிரவீன் குமார். சஹீர் கான் கூட தன் வேகத்தைக் குறைத்துக் கொண்ட பிற்பகுதியிலேயே சிறந்த பந்து வீச்சாளரானார். வேகம் என்பது மிகைப்படுத்தப்படும் சங்கதி என்றே தோன்றுகிறது. அதைவிட கட்டுப்பாடு, தெளிவு, தீர்மானமான அணுகுமுறை முக்கியம். நட்டு வாசிம் அக்ரமாக வேண்டியதில்லை. அவர் சமீந்தா வாஸாகவே தொடர்ந்து இயங்கலாம். நடைமுறைவாதியான அவர் அப்படியே செய்யப் போகிறார் என நினைக்கிறேன்.
5) அடுத்து, இறுதியாக, நட்டுவின் வாய். ஆமாம் வாயே தான். இதை நான் எனது ஐ.பி.எல் அலசல்களின் போது குறிப்பிட்டிருந்தேன். அஷ்வினுடனான நட்டுவின் யுடியூப் பேட்டியில் நான் ஒன்றை கவனித்தேன்: நட்டுவின் வாயில் இருந்து ஒன்றை பிடுங்குவது ரொம்ப கஷ்டம். அவர் பட்டும்படாமல் பேசுகிற, எல்லாருக்கும் பணிந்திருப்பதாக காட்டிக்கொள்கிறவர், கழுவுற மீனில் நழுவுற மீன். அவரைப் போன்றவர்கள் இந்திய அணியில் நிலைத்திருப்பது சுலபம். வாய்க்கொழுப்பு கொண்ட பல தென்னிந்திய வீரர்கள் அணித்தலைமையுடன் முறைத்துக்கொண்டு, அரசியலில் மாட்டிக்கொண்டு வெளியேற்றப்பட்டதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் நட்டு பிழைத்துக் கொள்வார். கிரிக்கெட் அரசியலிலும் அவர் மற்றொரு எம்.எஸ். தோனி. எதிர்காலத்தில் தன் உடற்தகுதியை தக்க வைத்தால், இந்தி பேச கற்றுக் கொண்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் அவர் இந்திய அணியின் துணைத்தலைவர் ஆனாலும் ஆச்சரியப்பட மாட்டேன். அதற்கு மேல் அணித்தலைவர் ஆவதெல்லாம் அவரது அதிர்ஷ்டம்.

Comments
இன்றி தங்களின் பதிவை படிக்கையில் நடராஜனை இளைய வீரர் என்று குறிப்பிட்டது மட்டுமல்லாமல் அவர் இன்னும் ஐந்து வருடங்களில் கேப்டன் - வைஸ் கேப்டனாக வர வாய்ப்பை பற்றியும் எழுதி இருந்தீர்கள்.
நடராஜானுக்கு தற்போது முப்பது வயது. முப்பது வயது என்பது கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளார்களுக்கு ஓய்வு பெறுவதற்கான முதல் தகுதி. அவரை எப்படி இளம் வீரர் என்று குறிப்பிட்டீர்கள் என்று வியக்கிறேன்.
அனைத்தும் சரியாய் அமையும் பட்சத்தில் நடராசன் அவர்கள் இன்னும் ஒரு வருடம் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்புள்ளது. அதற்கு மேல் இளைய தலை முறையினால் நீக்கப்படுவார்.
தாமதமாக வந்தாலும் தவறாமல் வந்த நடராஜனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.