பிறந்த நாளன்று தன்னை வாழ்த்த வந்த நகல் கலைஞர்கள் விசயத்தில் ரஜினி பண்ணியிருக்க வேண்டியதெல்லாம் கேட்டுக்கு வெளியே வந்து “நன்றி” என கைகூப்பி, ‘உங்களுக்கு ஏதும் உதவி வேணுமா?’ எனக் கேட்டிருக்க வேண்டியது தான். ஏன் குருமூர்த்தி வந்திருந்தா இப்படி வீட்டுக்குள்ள பதுங்கி இருந்திருப்பீங்களா? மாட்டீங்க தானே? ஒரு புரோக்கருக்கு கொடுக்கிற மரியாதை ஏன் எளிய மக்களுக்கு தர மாட்டேங்குறீங்க மிஸ்டர் ரஜினி?
அவரா இவர்களை வேடம் போட்டு தன் வீட்டு வாயிலுக்கு வரச் சொன்னார் என நீங்கள் கேட்கலாம் - இல்லை தான், ஆனால் வாழ்த்துப்பவர்கள் என்ன வேடமிட்டு வந்தாலும் நன்றி சொல்வதே நாகரீகம். ஒரு கட்சித் தலைவருக்கு இதுகூடத் தெரியவில்லை என்றால் எப்படித்தான் அரசியல் நடத்துவீர்களோ? மக்களை இந்தளவுக்கு வெறுக்கிற, மக்களோடு உரையாடுவதில் அசூயை கொண்ட ஒரு unfriendlyஆன மனிதர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?
இன்னொரு பக்கம், இந்த கலைஞர்களை கூத்தாடிகள், பைத்தியங்கள் என பழிப்பதை, பகடி செய்வதை ஏற்க மாட்டேன். என்னதான் ரஜினி, குருமூர்த்தி, பாஜக கும்பல் மீதுள்ள கோபம் அப்படி மடைமாறி இந்த எளிய மக்கள் மீது பாய்ந்தாலும் அது நியாயமல்ல. இதுவே அவர்களின் இருப்பு, அவர்களின் பிழைப்பு. எல்லா காலத்திலும் இத்தகைய மக்கள் இருப்பார்கள்! நம்மிடையில்லும் பல்வேறு சொரூபங்களில் நகல் மனிதர்கள் இருக்கிறார்கள். பிரச்சனை இவர்களை இந்த மாபெரும் ஆளுமைகள் ஏதோ சொறி நாயைப் போல நடத்தும் விதம் தான்.
ரஜினி என்னதான் தான் எளிமை, கருமை, கடமை என வேடம் போட்டாலும் நுண்ணுணர்வற்ற மனிதர் என்பதை பல இடங்களில் காட்டியிருக்கிறார். இது மற்றொரு சான்று. பல சிறந்த நடிகர்கள், எழுத்தாளர்கள் மோசமான மனிதர்களாக இருப்பதுண்டு. ரஜினியும் அப்படியே. ஒரே வித்தியாசம் அவர் பொது வாழ்க்கையிலும் அவ்வப்போது ஒரு ஆன்மீக எண்ணம் கொண்ட, பாபாவின் அருள் பாலித்த, பணத்தில் புகழில் ஆசையற்ற வெள்ளாந்தி மனிதர் என வேடம் போடுவார். எல்லா வேடங்களைப் போன்றும் அவ்வப்போது அந்த அரிதாரமும் கலைந்து போகும்.
மிஸ்டர் ரஜினி, நீங்கள் நல்லவராக, பாபாவாக, உயர்ந்த மனிதனாக இருக்க வேண்டாம். நாகரிகத்துடன் இருங்கள். பிடிக்குதோ இல்லையோ, உங்களை அண்டியிருக்கும் மனிதநேயத்துடன் கலைஞர்களை அங்கீகரியுங்கள். குண்டடிபட்டு சாகும் மக்களை நுண்ணுணர்வின்றி சமூகவிரோதிகள் என இனிமேல் காறித் துப்பாதீர்கள். அடிப்படையான நாகரிகத்துடன் இருங்கள். அதற்கு பாபாவெல்லாம் தேவையில்லை. போலி பவ்யத்தை, போலி ஆன்மீகத்தை கழற்றி வைத்தால் போதும்.

Comments