நேற்று ஒரு நண்பரிடம் நமது பள்ளிக் கல்வி முறையில் கொண்டு வர வேண்டிய சில சீர்திருக்கங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இது குறித்த என் கருத்துக்களில் சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கு தருகிறேன்.
1. சந்தையில் இன்று உள்ள தவிர்க்க முடியாத பண்டம் கல்வி. கல்வி தனியார்மயமானது மக்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகமாக்கி, பெற்றோர்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து, ஜி.எஸ்.டி மூலம் வரி வசூலை அப்படியே மத்திய அரசே அபகரித்து விடுகிறது. மேலும் பல வரிகளையும் வருடாவருடம் அரசு இழந்து வருகிறது, இழக்கப் போகிறது. இந்த சூழலில் மாநில அரசு தனக்கான வருமானத்தை அதிகப்படுத்த ஒரு வழி கல்வியில் தனியாரிடம் இருந்து மூன்றில் ஒரு பங்கை தன் வசம் கொண்டு வருவது.
2. முதற்கட்டமாக, ஒரு சட்டம் இயற்றி ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை அங்கு வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அடுத்து அங்கு செயல்பட அனுமதிக்கப்படும் பள்ளிகளில் மூன்று இரண்டு மடங்கு அரசின் பள்ளிகளாக இருக்க வேண்டும். இந்த பள்ளிகளை இலவசம், கட்டணம் என இரண்டாக பிரிக்க வேண்டும். பெற்றோரின் வருமான சான்றிதழின் படி ஏழைப் பிள்ளைகளுக்கு மட்டுமே இலவசப் பள்ளிகளில் அனுமதி அளிக்க வேண்டும். மத்திய வர்க்க, மேல் மத்திய வர்க்க பிள்ளைகளுக்கு அவர்கள் ஏற்கனவே தனியாரில் செலுத்தும் கட்டணத்தில் பாதியை வசூலிக்கலாம். தனியாரில் உள்ள அதே கட்டமைப்பு, வசதிகள் இப்பள்ளிகளிலும் இருக்க வேண்டும். ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் அரசிலே அதிகத் திறமையான தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதால் பிரச்சனையில்லை. இரண்டு விதமான பள்ளிகளில் ஒரே தரம், கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் - கட்டணத்தை தவிர எந்த வித்தியாசமும் தெரியக் கூடாது.
3. பள்ளிகளின் எண்ணிக்கை குறைவதால் மக்கள் கணிசமாய் தம் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கே அனுப்பும் நிலை ஏற்பட்டு, அரசின் வருமானம் பெருமளவில் கூடும்.
4. அடுத்து, 12ஆம் வகுப்பு வரை பிள்ளைகளின் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்; பிள்ளைகள் பாதியில் நிற்பதற்கான பிரதான காரணம் வறுமை அல்லது தேர்வில் தோற்பதாக உள்ளது. இதை சரி செய்யும் நோக்கில் இப்போதுள்ள வருட இறுதி தேர்வுமுறையை ரத்து செய்து, தொடர் மதிப்பீட்டு முறை மட்டுமே வைத்திருக்க வேண்டும். இதில் மதிப்பெண்ணுக்குப் பதில் கிரேட் முறை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மாணவரும் பெறும் மதிப்பீட்டை அவர் மட்டுமே அறிந்திருக்க வேண்டும். பொதுவில் வெளியிடக் கூடாது - இது ஏற்கனவே சில மேற்கத்திய நாடுகளில் உள்ள முறை தான். இதன் மூலம் தேர்வின் போது மாணவர்கள் அனுபவிக்கும் நெருக்கடி இல்லாமல் ஆகும். மதிப்பெண் அன்றி கற்றலே இலக்காகும்.
5. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளிலும் எழுத்து பொதுத்தேர்வு இருக்கக் கூடாது - மாறாக மாணவர்கள் செய்யும் ஆய்வு புரோஜெக்டுகளை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யலாம். இதன் மூலம் டியூஷன், பயிற்சி மையங்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டலாம். CBSE, மாநில பாடத்திட்டம் என உள்ள வேறுபாடுகளும் மாணவர்கள் மீது தாக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ளலாம் (மாற்றுப் பாடத்திட்டத்தில் இருந்து பெயர்ந்து வரும் மாணவர்களுக்கு.)
அ) இதனால் அரசின் வருமானம் பெருகும் - இது டாஸ்மாக் விசயத்தில் ஏற்கனவே தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்குகிற பாணி தான். அப்படியே கல்வி நிலையங்களுக்கும் கொண்டு விடலாம்.
ஆ) இதை தனியார் பள்ளிக்கூடங்களின் கூட்டமைப்புகள் எதிர்க்கும் - ஆனால் அங்கு பணி செய்யும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். ஏனென்றால் அவர்களின் பணி நிரந்தர அரசுப் பணியாக உறுதி செய்யப்படும்; அதே வேலை, ஆனால் அதிக சம்பளம், நிலையான பணி என அவர்கள் நிம்மதி அடைவார்கள். இப்பள்ளிகளில் படிப்பதால் தனியாரில் உள்ள அதே தரம், ஆனால் பாதி கட்டணம் என்பதால், அங்கு படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு வரிக் குறைப்பு, அம்மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை எனும் அனுகூலங்கள் இருப்பதால் மக்களும் ஆதரிப்பார்கள்.
ஈ) அரசுப் பள்ளிகளின் தரம் குறித்த கவலைகள், அவை மக்களின் வரிப்பணத்தில் நடக்கின்றன எனும் புலம்பல்கள் மறையும் - இப்போது அரசு தான் ஈட்டும் பணத்தைக் கொண்டே இலவச கல்வி உள்ளிட்ட சமூகநீதித் திட்டங்களையும் நிறைவேற்ற முடியும்.
உ) உள்கட்டமைப்புகளுக்கு எங்கே போவது? எப்படி ஒரு சாலை வரும் போது அரசு மக்கள் நிலங்களை எடுத்துக் கொள்கிறதோ அப்படியே தான். இச்சட்டம் வந்த பின் எப்படியும் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த கட்டிடங்களை விற்கவோ இடிக்கவோ வேறு விசயங்களுக்கு பயன்படுத்தவோ பூட்டி வைக்கவோ கூடாது என ஒரு சட்டம் போட்டு விட்டால் (இதற்கு எதிராக நீதிமன்றங்களுக்கு போகக் கூடாது, இதில் அரசுக்கு மட்டுமே விதிவிலக்கு எனவும் சட்டம் போட்டால்) அவர்களில் பாதி பேர் அரசுக்கே குறைந்த விலையில் கொடுத்து விடுவார்கள். ஒரு பகுதியில் மூன்றில் ஒரு பகுதியாக செயல்பட போகும் தனியார் பள்ளிகளுக்கான உரிமம் அளிப்பதில் இப்படி விட்டுத் தரும் நிர்வாகங்களுக்கு முன்னுரிமையும், வரிசலுகையும் கொடுக்கலாம் - இது நியாயமா என்றால் பெரும்பகுதி மக்களுக்கு பயன்படும் எதுவுமே - அது சிறுபான்மையை வருத்தினாலும் - நியாயம் தான்.
(இப்படியான திட்டங்களைக் குறித்து சிந்திக்கிற துணிச்சலும் முன்யோசனையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்தது - அவருக்கு கருத்தியல் தெளிவு இல்லையென்றாலும். அவ்விதத்தில், அவரது மறைவு ஒரு பெரிய இழப்பு தான்.)


Comments