பிக்பாஸ் 4இன் இறுதி நாளில் சுப்பிரமணிய ராஜுவின் கவிதை எனச் சொல்லி ஆண்டவர் ஒரு ஆபாசமான “கவிதை” என ஒன்றை வாசித்தார். ரப்பர் வளையல்களை கண்டுப்பிடித்தவன் ஒரு ஒண்டுக்குடித்தன ‘குடும்பியாம்’, ஏனென்றால் அப்போது தான் உடலுறவின் போது ஒலி எழுப்பாதாம். அதுக்கு, வளையலை கழற்றி வைத்தால் போதாதா? இதெல்லாம் கவிதையா? அடக் கொடுமையே! சுப்பிரமணிய ராஜூவுக்குத் தான் நவீன கவிதை தெரியவில்லை என்றால் கமலுக்கு கடந்த 60 ஆண்டுகளில் எழுதப்பட்ட கவிதை குறித்த ஒன்றுமே தெரியவில்லை. அவர் இன்னமும் பாரதிதாசன் எழுதிய பாடல்கள், பாரதியின் வசன கவிதை, வாரமலர் டபுள் மீனிங் வரிகள் போன்றவற்றையே கவிதை என நம்பிக்கொண்டு இருக்கிறார். நவீன கவிதை கூட படிக்க வேண்டாம், கடந்த பத்து வருடங்களின் ஆனந்த விகடன் இதழ்களை கவனித்திருந்தால் கூட அவருக்கு இன்று தமிழ்க் கவிதை என்ன இடத்தில் இருக்கிறது என்பது புரிந்திருக்கும். அதனாலே அவர் இன்னமும் பழைய சந்தத்துடன் உளறலாக எதையெதையோ கவிதை என முன்வைத்துக் கொண்டிருக்கிறார். அதை இன்று அவர் பாடிக்காட்டிட சோம் தாளம் போட்டார். அதை முன்பு ஆண்டவர் இதே பிக்பாஸில் அவர் சொல்லிக் காட்டியதைக் கேட்ட ஷங்கர் மகாதேவன் போன் செய்து “இது பாரதியார் எழுதினதா சார்?” எனக் கேட்டாராம். அதைக் கேட்டு ஆண்டவர் நெகிழ்ந்து போனாராம். பாரதியின் ஒரு பாடலைக் கூட படிக்காதவர் மட்டுமே அப்படிக் கேட்க முடியும். அதை ஒரு பாராட்டாக நினைக்க நீங்கள் அதை விட பெரிய தற்குறியாக இருக்க முடியும். இந்த கொடுமைக்கு சரியான செருப்படி எதிர்வினையை அளித்தது சோம் தான் - அவர் கமல் இந்த ‘கவிதை வாசிப்பை’ முடித்ததும் “சார் அண்ணாத்த ஆடுறார் பாட்டைப் பாடுங்களேன்” எனக் கேட்டார். கமலின் இடம் உண்மையிலே அதுதான்.
ஒரு வேண்டுகோள்: அரசியலில் இருந்தும் கமல் ஓய்வு பெறும் நாள் ஒன்று வரும். இதுவரை நவீன இலக்கியத்தில் (அல்லது வணிக இலக்கியம் தவிர) எதையுமே படிக்காமல் அப்புத்தகங்கள் பற்றி சொல்லப்படுவதைக் கேட்டோ வாசித்தோ தானே வாசித்ததாக ஒரு பாவனை பண்ணுவதில் கமல் புளகாங்கிதம் கொண்டு வந்துள்ள ஒய்வுக் காலத்தில் நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தையாவது படிக்க வேண்டும்! நீங்கள் ஒரு சிறந்த நடிகர். அதனாலே நீங்கள் ஒரு நல்ல வாசகர் ஆக முடியாது. உங்களுக்கு ஜால்ரா அடிக்க இலக்கியவாதி நண்பர்கள் இருக்கிறார்கள். அதனாலும் நீங்கள் ஒரு நல்ல வாசகர் ஆக முடியாது. எப்போது நீங்கள் நல்ல வாசகர் ஆவீர்கள் என்றால் சந்தத்துடன் படிப்பது பாடல் ஆகுமே ஒழிய கவிதை ஆகாது எனும் ஒரு அடிப்படைப் புரிதல் என்று வருமோ அப்போது தான். எனக்கு உள்ள ஒரே வருத்தமே பேஸ்புக்கில் பல்லாயிரம் பேருக்கு உள்ள அந்த புரிதல் கூட உங்களுக்கு இன்னும் வரவில்லை என்பது. இந்த லட்சணத்தில் நீங்கள் தமிழ்நாட்டுக்கே “எப்படி புத்தகம் வாசிக்கணும்?” என பாடமெடுக்கிறீர்கள் என்பது எப்படியான பாமரத்தனமான சமூகத்தில் வாழ்கிறோம் எனக் காட்டுகிறது. (இது நீங்கள் பரிந்துரைத்த புத்தகங்களின் தரத்தை குறைப்பதில்லை.)

Comments