‘அமமுகவையும் அதிமுகவும் இணைத்தால் திமுகவுக்கு கடும் போட்டியை தேர்தலில் அளிக்கலாம், அதே போல முக்குலத்தோர் வாக்குகளும் சிதறாமல் பார்த்துக் கொள்ளலாம்’ என சற்று முன் வரை பேசி வந்த சங்கிகள் இப்போது ‘அமமுகவின் வாக்குகள் அதிமுக-மோடி எதிர்ப்பு வாக்குகளே, அமுமக இணைப்பு நடந்தால் அவ்வாக்குகளை திமுக அள்ளிக் கொண்டு போய் விடும், அதனால் அமமுக தனியாக போட்டியிடுவதே நல்லது’ என மாற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்கள். காரணம், எடப்பாடியார் சாமர்த்தியமாக தில்லிக்கு சென்று பேரம் பேசி படிய வைத்தது. முக்குலத்தோர் / அமமுக ஆதரவு வாக்குகள் எப்படி ஒரே நாளில் மோடி எதிர்ப்பு வாக்குகள் ஆகின? மோடியைப் பார்த்தா மக்கள் மாநிலத் தேர்தலில் வாக்களிப்பார்கள்? இதைக் கேட்டால் ரவீந்திரன் துரைசாமி போன்ற ஏஜெண்டுகள் “மோடி அப்படித்தான் நினைக்கிறார்” என பதுங்குகிறார்கள். சரி, அவை அதிமுக அதிருப்தி வாக்குகள் எனில் அவை ஏன் அமமுகவுக்கு போக வேண்டும்? அமமுக என்ன எதிர்க்கட்சியா?
உண்மை என்னவெனில், பாஜக என்றுமே அதிமுகவை பலப்படுத்த விரும்பவில்லை. இந்த சசிகலா பிரச்சனையைக் கூட சீட்டு பேரத்தில் தன் கரத்தை வலுப்படுத்தவே அது பயன்படுத்துகிறது. பாஜக அடிப்படையில் ஒரு காலனியாதிக்கக் கட்சி. எப்படி கிழக்கிந்திய கம்பனி உள்ளூர் குறுநில மன்னர்களை தமக்குள் மோதவிட்டு, தம் படையைத் தருகிறோம் எனச் சொல்லி வரிவிதித்து பின்னர் நாட்டையே பிடித்ததோ அதே தந்திரத்தை தான் பாஜக பயன்படுத்துகிறது. அதிமுகவை இரண்டாக அல்ல மூன்றாக உடைக்கவே அது விரும்புகிறது. பலமுனை போட்டிகள் நடந்து வாக்குகள் சிதறி எல்லா கட்சிகளும் பாதுகாப்பற்று இருக்கும் நிலை தேர்தலுக்குப் பின் வர வேண்டும் என விரும்புகிறது. அப்போது அது பெரியண்ணாவாக செயல்பட்டு இங்கு ஒரு ஆட்சியை தன் நிழலின் கீழ் அமைக்கலாம் என கனவு காண்கிறது. இதை மக்கள் உணர்ந்து கொண்டு ஒரு திராவிட கட்சி மிகப்பெரும் வெற்றியடைய வைப்பதும், பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் பண்ணுவதும் முக்கியம். அந்த திராவிட கட்சி திமுகவாக இருப்பது தமிழகத்துக்கு பாதுகாப்பு. ஏனென்றால் இந்த ஆட்சியின் ஊழல்கள் அதிமுகவின் தலைக்கு மேல் கத்தியாக தொங்குகின்றன. மீண்டும் ஒருவேளை ஆட்சியில் அவர்கள் அமர்ந்தால் கூட அது மற்றொரு பினாமி ஆட்சியாகவே இருக்கும்.
ரவீந்திரன் துரைசாமி உள்ளிட்ட சங்கி ஏஜெண்டுகள் இப்போது எடுத்து வரும் ஒரு புதிய சரடு மோடி ஸ்டாலினுக்கு அணுக்கமாக இருக்கிறார் என்பது. லஷ்மணன் போன்ற அதிமுக / சசிகலா ஆதரவாளர்கள் சிலர் திமுகவும் பாஜகவும் ரகசிய உடன்படிக்கை என வேறு பேசி வருகிறார்கள். தொடர்ந்து திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக தன்னை நிலைப்படுத்தினாலும் இந்த பேச்சு ஓயவில்லை. இவர்களின் நோக்கம் பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்கு சென்று விடக் கூடாது என்பதே. சுவாரஸ்யம் என்னவெனில், பாஜக எதிர்ப்பலை இங்கு உண்டு எனினும் அது நிச்சயமாக தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதாக இருக்காது. பாஜகவுக்கு ஏன் வாக்குகள் கிடைப்பதில்ல என்றால் அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல அதை ஒரு கட்சியாகவே மக்கள் மதிக்கவில்லை என்பதாலே. அதனால் பாஜக திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக இந்த ஏஜெண்டுகள் பேசி நேரத்தை வீணடிக்க அவசியமில்லை. பாஜக எதிர்ப்பு, பாஜக ஆதரவு, பாஜக என எதுவுமே இங்கு இல்லை. அது உங்கள் கற்பனையிலும், ஊடக முதலாளிகள் மிரட்டப்படுவதால் டிவி விவாத மேடைகளிலுமே இருக்கிறது.


Comments