தற்செயல் நிகழ்வுகளில், efficient conditions நம்மால் அறியமுடியாத அளவில் உள்ளது என்று சொல்கிறீர்களா? உதாரணமாக, ஒருவர் பைக் கில் மோதி விடுகிறார். இந்த நிகழ்வு நடக்காமல் இருக்க கவனமாக செல்கிறோம். இருந்தும் நம் கை மீறி நடக்கிறது.
இதேபோல் நான் வீட்டிற்குள் நடக்கும் பட்சத்தில் தற்செயலாக நாற்காலியில் காலை இடித்து கொண்டால் 4 நிலைகளின் சாராம்சம் என்னளவில் விடுபடாமல் இருக்கும் அல்லவா? Efficient condition நான் நடந்த வேகமும் நாற்காலியின் weight ஆக இருக்கும். ஆகவே, தற்செயல் நிகழ்வில் efficient conditon அறியமுடியாத அளவில் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்த நாற்காலி உதாரணம் primary condition ஆ?
- Habib Haadi
அன்புள்ள ஹபீப்
இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு விபத்தில் மட்டுமல்ல எந்த ஒரு தற்செயலான நிகழ்விலும் செயலூக்க நிலை (efficient condition) என்னவாக இருக்கிறது என நாம் யோசித்தே ஆக வேண்டும். ஒரு நேர்முகத்துக்கு சென்று சிறப்பாக தேர்வெழுதி, பேசி விட்டு வருகிறோம், ஆனால் வேலை கிடைக்கவில்லை. கவனமாக இருக்கிறோம், ஆனால் கொரோனா வந்து விடுகிறது. நாம் ஓட்டளிக்காவிடினும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து விடுகிறது. ஒரு பெண் அழகாக ஆடையணிந்து மகிழ்ச்சியாக வெளியே போகும் போது ஒருவன் ஆபாசமாக அவளது மார்புகளை உற்றுப் பார்க்கிறான். அவளுக்கு தன் உடல் மீதே வெறுப்பு வருகிறது. நீங்கள் சொல்வதைப் போல, ஒருவருக்கு நாற்காலியில் கால் மோதி வலிக்கிறது. கோபமாக நாற்காலிக்கு ஒரு உதை விடுகிறார். பைக்கை ஓட்டிப் போகும் போது யாரோ குறுக்கே வர திடீர் பிரேக் போட்டு தடுமாறுகிறோம், பின்னால் வந்த பைக் நம் மீது மோதி பிரச்சனையாகிறது. அல்லது கார் ஓட்டும் போது ஒரு நொடி கவனம் பிசகி ஒரு குழந்தை மீது கார் மோதி விடுகிறது. பதைபதைத்துப் போகிறோம். இதற்கெல்லாம் யார் பிரதான காரணம்? எது பிரதான காரணம்? சந்தர்பங்களா? நாமா?
எனக்கு ஆறு மாதம் இருக்கையில் போலியோ தொற்று ஏற்பட்டு மாற்றுத்திறனாளி ஆனேன். இதைக் குறித்து நான் அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனால் நான் ஒரு பெற்றோனாக இருந்து என் குழந்தைக்கு இப்படியாகியிருந்தால் அந்த குற்றவுணர்வை என்னால் தாங்கிக் கொண்டிருந்திருக்க முடியாது. இது யாருடைய கவனப் பிசகினால் ஏற்பட்டது?
இங்கு தான் நாகார்ஜுனரின் நிலைகள் குறித்த பகுப்பாய்வு நமக்கு பயன் தருகிறது - ஒரு நோய்த்தொற்று எனும் நிகழ்வின் போதான முதன்மை (செய்ய வேண்டும் எனும் விழைவு), செயலூக்க (நிகழ்வுக்கு காரணமான துவக்க செயல்) நிலைகள் மனிதருக்கு இல்லை. ஆனால் கிருமிக்கு உண்டு. உடனடி நிலை மற்றும் பார்க்கப்படும் பொருளின் நிலை ஆகியவை நமக்கு உண்டு. இவ்விதம் நோக்கும் போது எல்லாவற்றையும் மனிதரை ஆதாரமாக வைத்து சிந்திக்க அவசியம் இல்லை என நாம் கற்கிறோம். அது போல ஒரு நிகழ்வுக்கான இருப்பு அந்த நேரத்துக்கு மட்டுமே ஆனது. மாற்றுக் கற்பனை நிகழ்வை - தடுப்பூசி போட்டிருந்தால்? - முன்வைப்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால் அது அங்கு இல்லவே இல்லை. நவீன உலகின் மிகப்பெரிய சிக்கலே பல்வேறு நிகழ்வுகளை கோர்வையாக தொடர்புறுத்தி அதன் மையத்தில் மனிதனை வைத்துப் பார்ப்பது தான். இதன் அடிப்படை நோக்கம் மனித மையவாதத்தை கட்டுவித்து சாராம்சப்படுத்துவது. நாகார்ஜுனர் ஒருவர் சமயோஜிதமாக செயல்பட்டு ஒரு விபத்தை தவிர்க்கும் போது கூட அங்கு அவரது பங்களிப்பானது பல சார்புநிலைகளால் தோன்றுவது தானே தவிர அவரால் மட்டுமல்ல என தெளிவுபடுத்துவார். இது நம்மை மையப்படுத்தாமல் அகந்தை இல்லாமல் ஊக்கத்துடன் சுதந்திரமாக இயங்க உதவும். நவீன வாழ்வின் தொடர் குற்றவுணர்வுகளில் இருந்து காப்பாற்றும்.
ஆகையால் நீங்கள் குறிப்பிடும் நாற்காலியில் இடிபடுகிற உதாரணத்திலும், எந்த விபத்துகள், தற்செயல்களிலும் முதன்மை நிலை (primary condition) இருக்க முடியாது. விபத்துகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதன் பிரதான காரணமே விபத்தின் விளைவான ஆபத்து அல்ல, நமது பங்களிப்பு இன்றியே நாம் இருக்கிற ஓரிடத்தில் ஒன்று தற்செயலாக நடக்கிறதே எனும் அதிர்ச்சி தான்.
நன்றி
ஆர். அபிலாஷ்

Comments