சன் நியூஸ் கேள்விக்களம் நிகழ்ச்சியில் ரியானா ட்வீட், அதற்கு எதிராக பாஜகவுக்கு முட்டுக் கொடுக்கும் செலிபிரிட்டுகள் குறித்து விவாதிக்கிறார்கள். பாஜகவுக்காக நாராயணன் வழக்கம் போல “எனக்கு எல்லாம் தெரியும், நீங்க எல்லாம் முட்டாள்கள், ஒருவேளை நான் தான் முட்டாள்னு நினைக்கிறீங்களா?” எனும் கணக்கில் பேசிக் கொண்டு போகிறார். ஒரு கட்டத்தில் கிரீட்டா டென்பேர் டூல் கிட் விவகாரத்தை ஆதாரமாக எடுத்து வைக்கிறார். அப்படியான டூல் கிட்டை தயாரித்து ஒரு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது டிவிட்டரில் வழக்கமான ஒன்றே. ஆனால் அதை பாஜகவினர் ஏதோ “துப்பாக்கி” படத்தில் குண்டு வைக்க தீவிரவாதிகள் தயாரித்த வரைபடம் விஜய்யிடம் மாட்டியதைப் போல பில்ட் அப் பண்ணுகிறார்கள். சமூகவலைதள பிரச்சாரம் பற்றி ஒன்றுமே தெரியாத மாங்கா மடையன்கள் மட்டுமே இதை ஒரு ஆதாரமாக ஏற்பார்கள். அது போகட்டும், பாஜக நாராயணனின் வாட்ஸ் ஆப்புக்கு யாரோ இதை அனுப்பி விட்டார்கள். அதைக் காட்டி பேசத் தொடங்கிய அவர் நெறியாளர் குணசேகரனிடம் “குணா உங்களுக்கும் வாட்ஸ் ஆப் பண்ணியிருக்கேன். பாருங்க, பாருங்க” என குதிக்கிறார். இதை ஏதோ படுபயங்கர ராணுவ ரகசியங்களை கண்டுபிடித்ததைப் போல விவாதம் முழுக்க கொண்டு செல்ல முயலும் அவர் தன்னை யாரும் பொருட்படுத்தவில்லை எனக் கண்டதும் திரும்ப திரும்ப “குணா உங்களுக்கு வாட்ஸ் ஆப் பண்ணியிருக்கேன். பாருங்க” என்கிறார். அவர் ஏன் இதை ஒரு நிகழ்ச்சியின் நடுவே செய்ய வேண்டும்? வேறெதற்கு நெறியாளரே தன் வாட்ஸ் ஆப் பார்வெர்டுகளை படிக்கிறவர், தன் கட்டுப்பாட்டில் இருக்கிறவர் எனக் காட்டத் தான். குணா உடனே “வாட்ஸ் ஆப்பில் வருவதை எல்லாம் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது” என நாராயணின் மூக்கை உடைத்து விட்டார்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர்கள் இந்த உத்தியை பலமுறை வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்:
1) நெறியாளர் வேண்டுமென்றே பாஜகவை, இந்துக்களை இருட்டடிப்பு செய்வதாக நிகழ்ச்சியின் போதே புகார் சொல்லி நெறியாளரை நெருக்கடிக்கு உள்ளாக்குவார்கள்.
2) அல்லது, நெறியாளரின் பெயரை சொல்லி தனிப்பட்ட தொனியில் உரையாடி (அதைக் கேட்க நெறியாளர் ஏதோ இவர்களின் கார் டிரைவர் போலத் தோன்றும்) அந்த விவாத அரங்கில் தனக்கு தனி தகுதி உண்டு எனக் காட்டிக் கொள்வார்கள். உ.தா., “இல்லை குணா” என்பதற்கும் “இல்லைங்க குணா” என்பதற்குமான வித்தியாசம்.
இந்த நாராயணனுடன் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டிவி விவாதங்களில் கலந்து கொண்ட ஞாபகம். அப்போது அவ்வளவு எளிமையாக, இயல்பாக பேசுவார். இப்போதுள்ள பந்தா, திமிர்த்தனம், பாதுகாப்பின்மையின் பதற்றம், நெறியாளர்களை தனிப்பட்ட முறையில் டீல் பண்ணுவது எதுவும் இல்லை. ஜெயாவின் மரணத்துக்குப் பிறகு தமிழக பாஜக தலைவர்களின் உடல்மொழி அப்படியே மாறி விட்டது. தமிழகத்தை தாமே ஆள்வதாக நம்புகிறார்கள். ஆனால் மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் இவ்வளவு அகந்தையாகப் பேசி நான் பார்த்ததில்லை.
பாஜக மீது கடும் வெறுப்பில் பேட்டியளித்த ராமசுப்பிரமணியனை பேசி சரிகட்டி விட்டார்கள் போல. அவர் இப்போது பாஜக ஆதரவாளராக டைட்டில் போட்டுக் கொள்வதில்லை என்றாலும் நேரடியாக ஆதரவு தெரிவித்து பேசுகிறார். இவர்களின் கருத்துக்களுக்கு அவ்வளவு தான் மதிப்பு - அப்பப்போ குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் வாங்கி வரேன் என உத்தரவாதம் தராவிட்டால் “எண்டே கட்சி திமுக, எண்டே சி.எம் ஸ்டாலின்” என உளற ஆரம்பித்து விடுவார்கள்.

Comments