கடந்த ஆண்டு முதற்கொண்டு ஜீயின் அரசு தன்னைக் குறித்த பிரச்சாரத்தில் ஊடகங்கள் இன்னும் மும்முரமாக ஈடுபட வேண்டும் என நோக்கில் ஊடகவியலாளர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பல கலந்துரையாடல்களை நடத்தி அதில் பேசப்பட்ட கருத்துக்களை தொகுத்து ஒரு 'டூல் கிட்' தயாரித்துள்ளது. (பார்க்க இணைப்பில் உள்ள படங்களை) இதில் எப்படி அரசுக்கு பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள், பேஸ்புக், டிவிட்டர் பிரபலங்களை ஊக்குவிக்க வேண்டும், அரசை விமர்சிப்பவர்களை காயடிக்க (neutralize) வேண்டும் (அதிஷா, செந்தில் போன்ற பல ஊடகவியலாளர்கள் அண்மையில் வேலை நீக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கும்), ஊடகங்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதை பயன்படுத்தி அரசு ஆதரவு ஊடகங்களுக்கு நிதியுதவி அளித்து வளைத்துப் போட வேண்டும், இப்போதைக்கு 75% ஊடகக்காரர்களை நம்மை ஆதரிக்கிறார்கள், மிச்ச 25%யும் வீழ்த்த வேண்டும், அரசை புரொமோட் செய்யும் பணியில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும், பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் கதையாடல்களை திணிக்க வேண்டும், the print மாதிரியான சில இணைய இதழ்களை குறிப்பிட்டு அவற்றை முடக்க வேண்டும் என்பது போன்ற பல 'அற்புதமான', 'முத்தான' பரிந்துரைகள் உள்ளன. இவற்றில் என் கவனத்தை உடனடியாகக் கவர்ந்தது எல்லா பிராந்திய மொழிகளிலும் உள்ள பாஜக ஆதரவு எழுத்தாளர்களைக் கண்டடைந்து அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவளிக்க வேண்டும் எனும் பரிந்துரை.
இந்த வேலையை ஜீயின் அரசு ஏற்கனவே எல்லா மாநிலங்களிலும் ஆரம்பித்து விட்டதன் தாக்கத்தை தமிழில் வெளிப்படையாகவே இப்போது காண்கிறோம். முன்பு முற்ப்போக்காக தெரிந்தவர்கள் தடாலடியாக இந்துத்துவ எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள். ஆனால் இது ஒரு சித்தாந்த மாற்றம் அல்ல, அப்படி பொதுப்படையாகத் தோன்றினாலும். இவர்கள் அதிகார மோகிகள் மட்டுமே, அசல் சங்கிகள் அல்ல. ஒரு சின்ன அங்கீகாரம், விருது, தொடர்பு வலை ஆகியவற்றுக்காக ஒரு நாள் தூங்கி எழுந்ததும் சங்கி ஆகி விட்டவர்கள். நாளை அரசு மாறியதும் இவர்கள் மீண்டும் தம்மை முற்போக்காளர்களாக காட்டிக் கொள்வார்கள். இன்று மிகத்தீவிரமாக பாஜகவை ஆதரித்து காங்கரசை பழித்து எழுதும், பேசும், கதறும், உதறும் பல ஊடக முகங்களும் பச்சோந்திகள் தாம். ஒரு ஆர்.எஸ்.எஸ்காரனைக் கூட மன்னிக்கலாம், திருத்தலாம், ஆனால் இவர்கள் அவனை விட கொடூரமானவர்கள். நாளொரு மேனி, பொழுதொரு தோற்றம். யார் மீதும் அக்கறை இல்லை, எதன் மீதும் பற்றுதல் இல்லை. அதிகார வளையத்தில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தவிர.
அண்மையில் நான் ஊடகங்களிலும்,சமூகவலைதளங்களிலும் ஜீ ஆதரவாளர்களை சங்கி என அழைக்கும் பழக்கத்தை விட்டு விட்டேன். ஏனென்றால் அவர்கள் நாளை ஆட்சி மாறியதும் நம் தோளில் கையிட்டு "தோழர்" எனக் கொஞ்சுவார்கள். அந்த அரசிடம் போய் தெண்டனிட்டு "முந்தின பாஜக ஒரு பாசிசக் கட்சி" எனக் கூறுவார்கள்.
இன்னொரு விசயம் அண்மையில் ஜீ எடுத்த பல சர்வாதிகார நடவடிக்கைகள் மீது ஒரு அதிருப்தி, கோபம் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளதை அவரே உணர்ந்துள்ளார்கள். அதனால் தான் ஊடகங்களை மகுடியாகக் கொண்டு மக்களை கூடுதலாக ஊதி மயக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். இது ஜீயின் அநீதிகளை, பிழைகளை விமர்சிப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் சேதி! 25% என்றாலும் அவர்கள் சொல்வதே மக்கள் மனசாட்சியின் குரல் என ஜீக்குத் தெரியும், அவர் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார் என்றாலும்!
Comments