Skip to main content

சாதியை ஒழிப்பது எப்படி?



சாதி கடந்த திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது, பெற்றோர்களில் ஒருவருடைய சாதியை குழந்தைக்கு அளிப்பதை தவிர்க்க முடியாது தானே என கோகுல் எழுதியிருந்தார். ஆம், ஆனால் இத்திருமணங்களால் சாதியை நிச்சயமாக தளர்த்த முடியும் என நினைக்கிறேன். இது மதப்பிடிப்புக்கும் பொருந்தும். இதை என் நேரடியான அனுபவத்தில் இருந்தும், நான் பார்த்த மனிதர்களில் இருந்தும் உறுதியாக சொல்ல முடியும். வீட்டில் தாய் தந்தையர் சாதி, மதத்தில் பிடிப்பின்றி, நம்பிக்கையின்றி இருந்தால் குழந்தைகளும் பெரும்பாலும் அப்படியே வளரும். இரண்டு நிபந்தனைகள்: 1) தாம் ஏன் அப்படி இருக்கிறோம் என சித்தாந்தரீதியாக குழந்தைக்கு சொல்லி வளர்க்க வேண்டும்; 2) சொந்த பந்தங்களுடன் பெரிய ஒட்டுறவில்லாமல் பலவித பின்னணியில் இருந்து வருகிற நண்பர்கள் சூழ வாழ் வேண்டும். நம்மால் இவையிரண்டையும் செய்ய முடியாமல் - எதிர்பாலின ஈர்ப்பினால் மட்டுமே சாதியை மீறி திருமணம் செய்தவராக இருந்தால் - குழந்தையும் சாதிச்சகதிக்குள் மாட்டிக் கொள்ளும். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர். அந்த மதத்தின் எந்த சடங்குகள், வழிமுறைகள், நம்பிக்கைகளையும் ஏற்காமல் வாழ்கிறவர். அவர் மனைவி பெரும்பான்மை மதத்தவர். அவரும் அப்படியே. குழந்தை பெயரளவில் மட்டும் இந்துவாக வளர்கிறது.


சாதி மனித உறவாடல்களால் மட்டுமே உயிர்க்கிற ஒரு ஜீவி. அதைக் கொல்ல உறவாடலை துண்டித்தாலோ மாற்று உறவாடல்களை உண்டு பண்ணினாலோ போதும். 


ஆனால் இத்துடன் மட்டுமே நிறுத்தி விடலாகாது - இன்னும் மூன்று காரியங்களை செய்ய வேண்டும்:


 1) பொருளாதார அடிப்படையிலும் சாதிப் படிநிலை தக்க வைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியினர் பல தலைமுறைகளாக அதிக பொருளாதார வலுவுடன் இருப்பார்கள். காரணம் விவசாயம் செய்ய நிலமும், வியாபாரத்துக்கான முதலீடு, இறுதியாக சமூக முதலீடும் அவர்கள் வசம் இருக்கும். இதை உடைப்பதும் அவசியம். நான் இப்போது சொல்லப் போவதை பெரும்பாலானோர் ஏற்க மாட்டீர்கள். ஆனால் இது என் உறுதியான நம்பிக்கை - வாரிசு சொத்துரிமையை நாம் சட்டரீதியாக ரத்து செய்ய வேண்டும். ஒருவர் இறந்த பின்னர் அவருடைய சொத்து பொதுச்சமூகத்துக்கு ஆனதாக வேண்டும். வசந்த் ஆண்டு கோ நிறுவனருக்குப் பின்னர் அவருடைய சொத்துக்கள், வியாபாரம் அவருடைய பிள்ளைகளுக்கு செல்லும். அவரை நாடி இருந்த மக்களும் இப்போது அவருடைய பிள்ளைகளை நாடி இருக்க ஆரம்பிப்பார்கள். இது சாதியுணர்வை பலப்படுத்தும். வலுவான சாதியை சேர்ந்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்தி பெருமைப்பட மக்கள் விரும்புவார்கள். மாறாக இந்த சொத்து, பணம், வியாபாரம் ஆகியவை பொதுச்சொத்தாகி விட வேண்டும். வியாபாரத்தை அரசே எடுத்து நடத்தி அதில் இருந்து வரும் லாபத்தை மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிடலாம். அல்லது குறிப்பிட்ட ஊரில் உள்ள அனைத்து மக்களையும் அச்சொத்தில் பங்குதாரராக்கி அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோரை வைத்து ஒரு குழுவை உருவாக்கி வியாபாரத்தையும் பணத்தையும் நிர்வகித்து லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம். இப்போது நீங்கள் எந்த வலுவான சாதியை சார்ந்தவர் என்றாலும் இந்த உலகத்தில் எந்த சொத்தும், பின்னணியும் இல்லாதவராக எல்லாரையும் போல சமமாக நீங்கள் உங்கள் வாழ்க்கையை பூஜ்யத்தில் இருந்து ஆரம்பித்தாக வேண்டும். நீங்கள் குப்பை அள்ளுகிறவரின் மகன் என்றாலும் மருத்துவரின் மகன் என்றாலும் ஒரே முதலீட்டுடனே வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். தனிமனிதர்களிடம் இவ்வளவு தான் பணமும் சொத்தும் இருக்கலாம் என ஒரு வரம்பை கொண்டு வந்தால் பெரும்பகுதி முதலீடும் சொத்துக்களும் அரசிடமும் பொதுசமூகத்திடமுமே இருக்க முடியும் எனும் நிலைவந்தால் கல்வியில் தனியாருக்கு இடமே இருக்காது. எல்லா பிள்ளைகளும் ஒரே வசதியுடன் கல்வித்தரத்துடன் படித்தாக வேண்டும். இது ஒரு சாதிக்கான சமூக முதலீட்டையும் காலி பண்ணி விடும். ஹரி நாடார் போல ஒருவர் நகைகளுடன் சுற்ற முடியாது. அம்பானியின் மகன்கள் சம்பாதிக்கும் முன்பே பெரும் நிறுவனங்களின் முதலாளி ஆக முடியாது.


 இன்னொரு விசயம், நாம் வழிவழியாக பெற்ற நிலமும், அடைந்த பொருட்கள் மீதான உரிமையும் சாதியை தோற்றுவிப்பதில்லை, ஆனால் இவற்றை நமது வம்சத்தினருக்கு கடத்தலாம் எனும் நம்பிக்கை ஒரு தொடர்ச்சியை உண்டு பண்ணி அதுவே மரபு, வரலாறு, சம்பிரதாயம், சாதி என ஒரு கேடுகெட்ட கட்டமைப்பை உருவாக்குகிறது. சாதிய தொடர்ச்சிக்கு பௌதீகமான உருவத்தை அளிப்பது சொத்து தான். அதனால் இதை ரத்து பண்ணினால் சாதி பெருமளவில் தளர்ந்து விடும். 


சிலர் சொத்தையும் பணத்தையும் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியாவிட்டால் மக்களுக்கு வேலை செய்யும் ஆர்வமே போய் விடுமே என சொல்லுவார்கள். எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. பணம் சம்பாதிக்க நமக்கு ஒரு நோக்கம், அர்த்தம் வேண்டும். தன்னை செலவு செய்கிற உரிமையே பணமே முதலில் தந்து விடுகிறது. எந்த சந்தையில் சம்பாதித்தோமே அங்கே திரும்ப கொடுக்கிறோம். இந்த பரிவர்த்தனை தரும் மதிப்பைக் கொண்டு நமக்கான அந்தஸ்தை உருவாக்குகிறோம். அடுத்து எதிர்கால கனவுகள். ஆனால் பிள்ளைகளைப் பற்றின கவலையில்லாதவர்கள் சம்பாதிப்பதுடன் மகிழ்ச்சியாகவும் வாழலாம் என நம்புகிறேன். 


  2) இறுதியாக நான் அளிக்கும் பரிந்துரை கடுமையானதாக, 99% ஆட்களாலும் ஏற்க முடியாததாக இருக்கும் என அறிவேன். இதை பிளேட்டோ தனது Republic நூலில் முன்பே பரிந்துரைக்கிறார். “ஏற்றத்தாழ்வை ஒழிக்க தனது லட்சிய சமூகத்தில் பிள்ளைகளை பெற்றோர்கள் வளர்க்காமல் அரசே வளர்க்க வேண்டும். எந்த பிள்ளைக்கும் தன் பெற்றோர் யாரெனும் விபரங்களை அளிக்கக் கூடாது” என சாக்ரடீஸ் சொல்கிறார். அப்போது அவரது நண்பர்களும் சீடர்களும் இதன் நடைமுறை சிக்கல்களை எடுத்து வைக்கிறார்கள். இதை ஒட்டி ஒரு விவாதம் ஏற்படுகிறது. நான் இதை சற்றே லகுப்படுத்தி பிள்ளைகளை பெற்றோரே வளர்க்கட்டும், ஆனால் சட்டரீதியாக அதை அங்கீகரிக்க வேண்டாம் என பரிந்துரைக்கிறேன். ஒருவர் தன்னுடைய பெயருக்கு முன்னால் பெற்றோரின் பெயரை சேர்ப்பது, விண்ணப்ப படிவங்களில் திரும்பத் திரும்ப எழுதுவது முன்பு மக்கள் சிறிய கிராமங்களில் வாழ்ந்த போது பெற்றோர், தாத்தா பாட்டியால் அறியப்பட்ட போது தேவைப்பட்டது. இனி அதற்கான அவசியம் இல்லை. இன்று ஐந்து வயது குழந்தை கூட தனக்கு ஒரு தனி அடையாளம் உண்டென நம்புகிறது. இங்கு பிறக்கிற ஒவ்வொருவரும் முழுக்க சுதந்திரமானவராக இருக்கட்டும். பிறந்த பின் குழந்தைகள் தத்தமது அடையாளத்தை தாமே உருவாக்கட்டும். “என் மகன் என் மகள்” என யாரும் பெருமைப்பட வேண்டாம். என் தாய், என் தகப்பன் என யாரும் உருக வேண்டாம். சொல்லப் போனால் ஒரு குழந்தையின் பெயரைக் கூட பத்து வயதுக்குப் பின் அதன் ஒப்புதலுடன் தேர்ந்தெடுப்பதே நியாயமாக இருக்கும். இதை நம்மால் செய்ய முடிந்தால் சாதியின் சவப்பெட்டியில் அடிக்கிற இறுதி ஆணியாக இது இருக்கும். 


இட ஒதுக்கீடு? அது இப்போதைய முதலீட்டிய அமைப்புக்குள் இருந்தபடி சமத்துவத்தை நிறுவுவதற்கான முயற்சி. ஓரளவுக்கு இது வெற்றி பெற்றுள்ளது என்றாலும் சமத்துவம் எட்டாக் கனவாகவே இருக்கக் காரணம் முதலீடும் சொத்தும், கூடவே குடும்ப பந்தங்களும் தாம்.  வழிவழியாக பொருளாதார, குடும்ப ரீதியாக ஒரு தொடர்ச்சி ஏற்படாமல் தடுக்க முடியும் என்றால் ஒரு புதிய சமூக அமைப்பில் சமூக முதலீடுகள் (சொந்த சாதியினருக்கு வேலையில், வியாபாரத்தில் தொடர்புகளை உருவாக்கி ஆதரவளிப்பது) இருக்கும் வரை, முழுமையான சமூக மாற்றம் நிகழும் வரை, மட்டுமே இட ஒதுக்கீடு தேவைப்படும் என நினைக்கிறேன்.


நான் மேலே பரிந்துரைப்பவை ஒரு லட்சிய சமூகத்துக்கானவை என அறிவேன். ஆனால் ஒரு லட்சிய சமூகத்தை தொடர்ந்து கனவு காணாமல், அதைப் பற்றி பேசாமல், இங்கே எதையுமே மாற்ற முடியாது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...