உயிர்மை இணையதளத்தில் விரைவில் வெளியாகப் போகும் எனது கட்டுரை ஒன்றில் (“மறுவரை செய்யப்படும் இந்து மதம்-தலித்தியம்-தமிழ் தேசியம்: மதசார்பின்மை மீதான கூட்டுத் தாக்குதல்”) இருந்து:
“பாஜகவில் இருந்து மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டோர் வரை முன்னெடுக்கும் இந்த திராவிட எதிர்ப்பு, மதசார்பின்மை விரோதப் பேச்சுகள் - தமிழக மக்களுக்கு மதரீதியான, சாதிரீதியான, தமிழ்தேசிய ரீதியான பிரதிநுத்துவத்தை காங்கிரஸும் திமுகவும் மறுக்கிறது என்று சொல்லி - மதசார்பின்மையின் அடிமடியிலே கைவைத்து அதை அழிக்க நினைக்கிறது. இது தேர்தலில் யார் ஜெயிக்கப் போகிறார் என்பதை விட அதிமுக்கியமான ஒரு பிரச்சனை. அதனாலே நாம் இதை சற்று உன்னிப்பாக நோக்க வேண்டும். ஏன் பாஜகவும் அதன் பினாமி கட்சிகளும் மதசார்பின்மை, திராவிடம் இரண்டையும் உக்கிரமாக தாக்குகின்றன? (1) இதனால் சிறுபான்மையினருக்கு எதாவது பலன் உண்டா? (2 )இதனால் பாஜகவுக்கு என்ன பயன்?
(1) சிறுபான்மையினருக்கு சில உடனடி பலன்கள் இருக்கலாம் (ஒன்றிரண்டு இடங்களை சென்று பதவிகளை கட்சியில் பெறுவது அல்லது ஒரு டோக்கன் அமைச்சராகவே ஆவது), ஆனால் தொலைநோக்குப் பார்வையில் இது சிறுபான்மையினருக்கு மிக ஆபத்தான ஒன்று என விளங்கும். எப்படி? சிறுபான்மையினர் நலன் என்பதை தாழ்த்தப்பட்ட சாதிகளின் நலன், ஒடுக்கப்பட்ட அனைத்து வர்க்கத்தினரின் நலன், பெண்களின் நலன் என சாதி, பொருளாதார, வர்க்க, பாலின அடிப்படையில் ஒற்றைப் புள்ளியில் இணைப்பதே மதசார்பின்மை சிந்தனையின் நோக்கம். அதாவது, இது சிறுபான்மையினருக்கு சார்பாக பெரும்பான்மையினரை யோசிக்க கேட்பது மட்டுமல்ல. இஸ்லாமியருக்கு சார்பாக பேசுகிற ஒரு இந்து அதே அக்கறையை அனைத்து ஒடுக்கப்பட்டோரிடத்தும் காட்ட செய்வது. அரசும் சமூகமும் அதிகாரமற்ற மக்களை மேலும் பலவீனப்படுத்தக் கூடாது என அவனை நினைக்கத் தூண்டுவது. அத்தகைய மதசார்பற்ற சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள் ஒடுக்கப்பட்டோரை வலுப்படுத்துவதற்கான சட்டரீதியான பாதுகாப்புகளை உருவாக்குவார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் எனப் பேசுவார்கள். கடந்த சில ஆண்டுகளில் வலதுசாரிகள் என்ன செய்தார்கள் என்றால் இது ஒரு ஏமாற்று, பொய்ப்புரட்டு என பேச ஆரம்பித்தார்கள்; ஒரு பக்கம் சிறுபான்மையினரிடம் போய் “உங்களை மதசார்பின்மையின் பெயரில் ஏமாற்றுகிறார்கள், உங்களுக்கு எந்த பிரதிநுத்துவமும் இவர்களால் கிடைக்காது, மதசார்பின்மை பேசும் கட்சிகள் இந்துக்களுக்கு மட்டுமே அதிகாரமும் தேர்தலில் இடமும் கொடுக்கிறது, உங்கள் வாக்குகளை வாங்கி விட்டு கழற்றி விடுகிறார்கள்” என்பார்கள்; இன்னொரு பக்கம் இந்துக்களிடம் போய் “மதசார்பற்றவர்கள் இந்து விரோதிகள், அவர்கள் சிறுபான்மையினருக்காக உங்களை பலி கொடுக்கிறார்கள்” என தூண்டி விடுவார்கள். ஏனென்றால் இப்படி மக்களை பிரித்து குறுகிய மனப்பான்மையுடன் சிந்திக்க வைத்தால் அவர்கள் தத்தமது நலனே இனி முக்கியம் என நினைக்கச் செய்தால் மதசார்பின்மை விழுந்து விடும்; சாதி, மத அடிப்படையிலான அரசியல் மட்டுமே நிற்கும்.
மதவாத பரப்புரை இப்படிப் போகுமெனில் சாதியைப் பொறுத்தமட்டில் அவர்கள் தலித்துகளிடம் சென்று “மாநிலக் கட்சிகளும் மதசார்பற்ற கட்சிகளும் உங்களுக்கு பிரதிநுத்துவமோ அதிகாரமோ அளிக்காமல் உங்களை சுரண்டுகிறது, நாங்களே உங்களை காக்க வந்தவர்கள்” எனக் கூறி விட்டு பெயருக்கு ஒன்றிரண்டு பதவிகளை அச்சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கும். ஆனால் உயர்நிலை அதிகார வட்டத்தில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்தபடியாக பனியாக்களுமே இருக்க வேண்டும், மற்றவர்கள் அவர்களின் சொற்படி நடந்தே ஆக வேண்டும் என ஒரு சாதி அடுக்குமுறையை கட்சிக்குள் வைத்திருப்பார்கள். முக்கியமாக கருத்தியல்ரீதியாக சாதியை ஒழிப்பதையோ பார்ப்பன ஆதிக்கத்தை கேள்வி கேட்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இன்று முற்போக்கு சிந்தனை வழியாக நாம் அடைந்துள்ள சில சுதந்திரங்கள் - சாதி, மதத்துக்கு வெளியே மணமுடிப்பது, மரபார்ந்த சீர்கேடுகளை கேள்விக்குட்படுத்துவது, சமத்துவத்தை கோருவது, இடஒதுக்கீடு வழி சமத்துவமான கல்வி, பொருளாதார வாய்ப்புகளை மக்களுக்கு வழங்கி ஓரளவுக்கு அதிகார பரவலாக்கத்தை சாத்தியப்படுத்தியது, சகிப்பின்மையுடன் மாற்று உரையாடல்களை அனுமதிப்பது - மதவாதமான ஒரு அரசியல் சூழலில் இருக்காது. அடைந்த ஒவ்வொன்றையும் இழந்து பின்னோக்கி செல்வதன்றி வேறு வழி இராது. இந்துத்துவர்களின் சாமர்த்தியம் என்னவென்றால் இந்த மதசார்பின்மை வெற்றிகளை மறக்கடிக்கும், மதவாத அரசியலினால் மட்டுமே சமத்துவம் நிலவும் ஒரு பொய்ப்பிரச்சாரத்தை மும்முரமாக எடுத்து செல்வதும், அப்பாவி மக்களை நம்ப வைப்பதுமே. நான் ஆரம்பத்தில் சொன்னதைப் போல ஆடுகள் தமக்காக ஓநாய்கள் அழுகின்றனவே என நம்பத் தொடங்குவதே அவர்களின் வெற்றியின் ஆரம்பம்..”


கருத்துகள்