தன்பால் கவர்ச்சி குறித்து என ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஆய்வுகள் நடந்து, அது இயற்கையானது, அது எந்த தவறுமில்லை என நிரூபித்துள்ளார்கள். இந்தியாவில் நமது மகத்தான பாஜக அரசு குடும்ப அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் தன்பால் கவர்ச்சியாளர்கள் திருமணம் செய்வதை சட்டரீதியாக ஏற்க மறுத்து விட்டது. ஆனால் 29 உலக நாடுகளில் தன்பால் திருமணம் சட்டபூர்வமானதே. பெங்களூர் வந்த பிறகு ஆண்களிடையில் மட்டுமல்ல பெண்கள் மத்தியிலும் தன்பால் ஜோடிகள் சுதந்திரமாக வெளிப்படுவதை, சேர்ந்து வாழ்வதை காண்கிறேன். இது ஒரு பக்கம் என்றால், இதை அசிங்கமாக, கௌரவப் பிரச்சனையாக காணும் பெற்றோர்கள் ஏராளம். கல்லூரிப் படிப்புக்காக நகரங்களுக்கு செல்லும் இளம்பெண்கள் தம் தன்னுடைய தன்பால் சார்புநிலையை (homosexual orientation) அங்கு வெளிப்படையாக அறிவிப்பது இயல்பாக நடக்கிறது; ஆனால் அவர்கள் அவ்வாறே வீடு திரும்பும் போது பெற்றோரால் வெளியேற்றப்பட்டு கைவிடப்படுவதும் சகஜமாக நடக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு தன்பால் ஈர்ப்பாளரான பெண்ணை பெற்றோர் திருமணம் செய்ய கடுமையாக வலியுறுத்திய போது “ஒரே மாதத்தில் பிரிந்து வந்து விடுவேன்” என வெளிப்படையாக கூறி விட்டார். அப்படியே செய்யவும் செய்தார். பெற்றோருக்கு மனத்திருப்தி. “ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி வைச்சோம், ஆனால் பையன் சரியில்லை, இப்போது பெண் தனியாக இருக்கிறாள்” என ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அவர்களுக்குத் தேவை தம் பெண் இயல்பானவள் என ஊருக்குக் காட்ட ஒரு கதை, எத்தனையோ பேர் சம்மந்தப்பட்ட, நிறைய பொருட்செலவு கொண்ட திருமணம் இதற்கு ஒரு சாக்கு. யாரோ ஒருவர் இதற்கு பலிகடா ஆகி விடுகிறார்கள். மாறாக அப்பெற்றோருடன் அவர் தொடர்ந்து உரையாடி, பிடிவாதமாக இருந்து புரிய வைத்திருக்க வேண்டும். ஆனால் அவரும் இந்த நாடகத்தில் சுயநலமாக கலந்து கொண்டு விட்டார். இன்னும் சில இடங்களில் மாப்பிள்ளை வீட்டார் நடிக்க பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
சமூக அழுத்தம், கூச்சம், மூடநம்பிக்கை, அறியலுக்கு புறம்பான நம்பிக்கைகள் என பல காரணங்கள் பெற்றோரை இப்படி நடக்க வைக்கின்றன. இத்தகைய பெற்றோருக்கு கைகொடுக்கும் நோக்கில் கல்லா கட்டுவதற்கு தனியாக உளவியலாளர்களின் ஒரு மாபியா கும்பல் செயல்படுகிறது. இதைப் பற்றி பல செய்திக்கட்டுரைகளை படித்திருக்கிறேன். இவர்கள் திருமணமான பின் தனது தன்பால் விருப்பத்தை தெரிவிக்கும் அல்லது தன்பால் இணையுடன் சேர்ந்து முடிவு செய்யும் ஆண் / பெண்களை திருத்துகிறேன் எனும் நோக்கில், ஆலோசனையின் பெயரில் தொடர்ச்சியான கடும் அழுத்தம் அளித்தும், ஆண்மை / பெண்மையை மீட்கிறோம் எனும் பெயரில் தேவையில்லாத ஹார்மோன் சிகிச்சையும் கொடுத்தும் இவர்களை குடும்ப வாழ்வுக்குள் வலியுறுத்தி தள்ளி விடுகின்றனர்; விருப்பமில்லாது திருமண ஜோடியுடன் உறவு கொண்டு குழந்தையையும் பெற்று இன்னொரு பக்கம் தன்பால் ஜோடியையும் ரகசியமாய் தக்க வைத்து இவர்கள் இரட்டை வாழ்க்கைக்குள் சென்று கடும் நெருக்கடிக்குள்ளாகி பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு செல்கிறார்கள்.
இந்த உளவியலாளர்கள், மருத்துவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள், அறவுணர்வில்லாதவர்கள், நவீன பால்நிலை ஆய்வுகள் குறித்து புரிதல் இல்லாதவர்கள், சந்தர்ப்பவாத மருத்து வியாபாரிகள் என நான் வியந்திருக்கிறேன். ஆனால் குமுதம் ரிப்போர்ட்டரில் டாக்டர் குமாரஸ்வாமி என்பவர் இந்த மாபியா வேலையை நியாயப்படுத்தி, தன்பால் ஈர்ப்பை ஒரு “உளவியல் சிக்கல்” என தவறாக அடையாளப்படுத்தி “அவன் அவள் அது” என ஒரு ஆபாசமான தொடரை எழுதி வருகிறார். இதில் அவர் தன்பால் ஈர்ப்பை ஏதோ pedophilia போல சித்தரிப்பதுடன் இதனால் வேற்றுப்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அநியாயம் நடப்பது போல அருவருக்கத்தக்க வகையில் எழுதி இருக்கிறார். இந்த அப்பட்டமான homophobia தொடரை ஒரு பத்திரிகை பிரசுரிப்பது ஆணவக்கொலை, தீண்டாமை போன்றவற்றை நியாயப்படுத்தி பேசுவதற்கு சமானமானதே.
இப்படியான பிள்ளைபிடிக்கும் தொடர்களை பிரசுரிக்கும் இதழ்கள் வெளிவரும் மாநிலத்தை சேர்ந்தவன் என நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது. பாலின ஆய்வுகள் குறித்த எந்த அடிப்படை புரிதலும் இல்லாதவர்கள் நம்மூரில் எடிட்டர்களாக திரிகிறார்கள், இதை “நிகழ்காலத்தின் குரல்”என வேறு அழைக்கிறார்கள் என நினைத்தால் அதைவிட கேவலமாக இருக்கிறது.

Comments